குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் ஆகியவை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வந்த குவீன்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றை கோவிட்-19 அறிகுறிகள் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் காய்ச்சல், இருமல், வாசனை அல்லது சுவை இழப்பு உள்ளிட்டவையே இதுவரை கொரோனா வைரஸின் அறிகுறிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இவற்றில் ஏதாவதொரு அறிகுறியை கொண்டிருந்தாலும் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு, நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு, ஏற்கனவே வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி உள்ளிட்டவற்றை கொரோனா வைரஸுக்கான சாத்தியமான அறிகுறிகளாக பட்டியலிட்டுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற சுமார் ஆயிரம் குழந்தைகளின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா என்று பரிசோதிக்கப்பட்டது.
அதில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 992 குழந்தைகளில் 68 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம், அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வில், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்ட பாதிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சமீபத்தியில் கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததாக தெரியவந்தது.
அதாவது, 68 குழந்தைகளில் அதிகபட்சமாக 28 பேருக்கு காய்ச்சல் பொதுவான அறிகுறியாக இருந்துள்ளது. அடுத்ததாக, ஆன்டிபாடிகள் உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு இருமல் இருந்தது கண்டறியப்பட்டது. இருப்பினும், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்டிருக்காத குழந்தைகளில் சிலருக்கும் இருமல் இருந்துள்ளது.
மேலும், கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்ட குழந்தைகளில் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அதே போன்று, 68 குழந்தைகளில் மிகவும் குறைவாக ஆறு பேருக்கு வாசனை அல்லது சுவை இழப்பு இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ஆய்வின் மூலம் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்ட 68 குழந்தைகளில் ஒருவருக்கு கூட மோசமான உடல்நிலை பாதிப்போ மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய சூழ்நிலையோ ஏற்படவில்லை.
இந்த ஆய்வை முன்னெடுத்த குழுவின் தலைமை ஆராய்ச்சியாளரான டாம் வாட்டர்ஃபீல்ட், “வியப்பளிக்கும் வகையில், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள் மோசமான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாக மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆனால், குழந்தைகளிடமிருந்து நோய்த்தொற்று மற்றவர்களுக்கு எந்தளவுக்கு பரவுகிறது என்று இன்னமும் தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
“கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்ட குழந்தைகளில் சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி என்பது பொதுவான அறிகுறியாக உள்ளதால், அதை கோவிட்-19 நோய்த்தொற்றின் அறிகுறிகளில் சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டிய நேரமிது” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புத் துறையை சேர்ந்த அதிகாரியொருவர், “கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்த நமது புரிதல் அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகளின் பட்டியலை புதுப்பிப்பது குறித்து வல்லுநர் குழு ஆலோசித்து வருகிறது. எனினும், காய்ச்சல், தொடர் இருமல், வாசனை அல்லது சுவை இழப்பு உள்ளவர்கள் உடனடியாக நோய்த்தொற்று பரிசோதனையை செய்துகொள்வது அவசியம்” என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com