Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம், முழுமையான தகவல்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

அந்த வகையில் இந்திய / இலங்கை நேரப்படி புதன்கிழமை இரவு 11 மணியளவில் ஜோ பைடனுக்கு 227, டிரம்புக்கு 213 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் முழுமையான முடிவுகள் வெளியாக சில நாட்கள் கூட ஆகலாம்.

இப்போது முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் மட்டுமே வெற்றியாளர் கணிக்கப்படுகிறார்.

பல மாகாணங்களில் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜோர்ஜா உள்ளிட்ட மாநிலங்களைக் கைப்பற்றும் வேட்பாளரே தேர்தலில் வெல்ல முடியும் எனும் சூழல் உண்டாகியுள்ளது.

நாடு முழுவதும் இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன.

அமெரிக்க அதிபர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த மாகாணங்கள் ஒரு கட்சிக்கு செல்லும்.

ஒரு மாகாணத்தில் வென்ற கட்சி, அந்த மாகாணத்துக்கான தேர்தல் சபை உறுப்பினர்களை நியமிக்கும். இந்தத் தேர்தல் சபை உறுப்பினர்களே அதிபரைத் தேர்வு செய்வார்கள்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வர மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில், 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்துக்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வரும்?

வழக்கமாக, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு, வாக்குப்பதிவு நாளன்று இரவே தெரிந்துவிடும்.

வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நேரங்களில் வாக்குப்பதிவு முடிவுக்கு வரும். கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் முதலில் வாக்குப் பதிவு முடிவுக்கு வரும். உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

எல்லா வாக்குகளும் தேர்தல் நாளன்று இரவே எப்போதும் எண்ணி முடிக்கப்பட்டதில்லை. ஆனால், வெற்றி பெற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் அன்று இரவே எண்ணி முடிக்கப்பட்டிருக்கும்.

Promo image showing ballots, a clock and a question mark

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பிரச்சனையால் அஞ்சல் வழியாகவோ, நேரிலோ வழக்கத்தைவிட நிறைய பேர் சீக்கிரமாகவே வாக்களித்துவிட்டனர்.

அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு கையெழுத்தும், முகவரியும் சரிபார்க்கப்படவேண்டும். இதனால் அஞ்சல் வாக்குகளை எண்ணுவது இயல்பாகவே தாமதமாகும்.

சில மாகாணங்கள் இந்த நடைமுறையை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே தொடங்க அனுமதித்தன. எனவே, வாக்குகள் எண்ணப்படுவதற்குத் தயாராக இருந்தன. அதனால்தான் அந்த மாநில முடிவுகள் முன்னதாகவே வெளியாயின.

வேறு சில மாநிலங்களில் தேர்தல் நாளுக்கு முன்பே அஞ்சல் வாக்கு நடைமுறையைத் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் என்ன முடிவு வரப்போகிறது என்பது தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால், இந்த மாநிலங்களில் முடிவு தெரிய சில நாள்கள்கூட ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குகள் எப்படி எண்ணப்படும்?

பேப்பர் வாக்குச் சீட்டுகளோ, கணினி மயமான வாக்குச் சீட்டுகளோ பெரும்பாலானவை இயந்திரங்களால் எண்ணப்படும்.

ஆனால், இயந்திரங்களால் எண்ணமுடியாத வாக்குகளை தேர்தல் பணியாளர்கள் சரிபார்த்து எண்ணிச் சேர்ப்பார்கள்.

வாக்குப் பதிவு முடிந்தவுடன், ஒரு மத்திய தேர்தல் தலைமையகத்துக்கு வாக்குப் பதிவுத் தரவுகள் அனுப்பிவைக்கப்படும். இந்த மத்திய தலைமையகம் என்பது ஒரு சிட்டி ஹால் அல்லது அது போன்ற ஓர் இடமாக இருக்கும்.

US Election 2020

சில நேரங்களில் இந்த தரவுகள் மின்னணு முறையில் அனுப்பிவைக்கப்படும்.

பிற இடங்களில், வாக்குப் பதிவு தரவுகளை உள்ளடக்கிய நினைவக கருவிகள் நேரடியாக அனுப்பிவைக்கப்படும். அல்லது, அந்த இயந்திரத்தின் முடிவுகள் தொலைபேசி வாயிலாக வாசிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கைகள் வந்தடைந்தவுடன், அவை அந்த மாநிலத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரியும். அல்லது, தேர்தல் அதிகாரிகள் இந்த எண்ணிக்கையை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பார்கள்.

உச்ச நீதிமன்றம் செல்வோம் – டிரம்ப்

முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் ஆகிய இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெறும் சூழலில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் மோசடி முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், “அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்று கூறினார்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, தனது கூற்றுக்கு முழுமையான ஆதாரங்கள் இல்லாமலேயே, தாம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளதற்கு ஃபேஸ்புக் எதிர்வினையாற்றி உள்ளது.

தேர்தலில் தாம் வென்று விட்டதாக டிரம்ப் கூறிய உடனேயே, இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதையும் வெற்றியாளர் யார் என்பது இன்னும் கணிக்கப் படவில்லை என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் `நோட்டிஃபிகேஷன்` வெளியிட தொடங்கியுள்ளோம் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் என்பிசி நியூஸ்ஊடக நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

us election result 2020

இரண்டு கட்சிகளும் நெருக்கமான போட்டியில் உள்ள மாகாணங்களான பென்சில்வேனியா, மிஷிகன்,விஸ்கான்ஸின் மற்றும் பிற மாகாணங்களில் இன்னும் பல லட்சக் கணக்கான வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கின்றன. இவை தேர்தல் முடிவுகள் மீது தாக்கம் செலுத்தும்.

இந்த மாகாணங்களில் வெற்றியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்க இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக “எதிர்க்கட்சியினர் தேர்தலை திருட முயல்கின்றனர்” என்று டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டது, தவறாக வழிநடத்தும் தகவல் என்று அந்த ட்வீட்டின் மீது குறிப்பாணை ஒன்றை வெளியிட்டு, அதை ட்விட்டர்மறைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

us election result 2020

1900ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்களிக்கும் உரிமை கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

1900ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வில்லியம் மெக்கின்லி ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜென்னிங்க்ஸ் பிரயானை தோற்கடித்தார். அப்போது 73.7சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த முறையை போன்று அல்லாமல் தேர்தல் முடிவுகள் தெளிவாக அமைந்தன.

அமெரிக்க தேர்தல்கள் குறித்த தகவல்களை வழங்கும் யுனைடெட் எலக்‌ஷன்ஸ் பிராஜக்ட்டின் தலைவர் மைகேல் மெக் டொனால்டு, டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கு சதவீதம் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை பொறுத்து மேலும் மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறை தபால் வாக்குகள் அதிக அளவில் வந்துள்ளன எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »