பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் மெர்கல் ஆகியோர் கூறிய விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மெர்கல் ஆகியோர் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
அடிப்படையில், ஹாரியும் மேகன் மெர்கலும் இன்னமும் அரச குடும்பத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தாலும், கடந்த மாதம் இவர்கள் இருவரும் அரசு குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிக்கையொன்றின் மூலம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டு மணிநேர நேர்காணலில் ஹாரி மற்றும் மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்கு பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவற்றை குறித்து பேசி வருகின்றனர்.
அவற்றை சில முக்கியமான விடயங்களை இங்கே பார்ப்போம்.
‘நான் இனி உயிருடன் இருக்க விரும்பவில்லை’
அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, “நான் இனி உயிருடன் இருக்க விரும்பவில்லை” என்று கூறிய அவர், இதை தான் ஹாரியிடம் கூறுவதற்கு “வெட்கப்படுவதாகவும்”, ஏனெனில் அவர் “சந்தித்த இழப்புகள்” அவ்வளவு என்று கூறினார்.
அப்போது, நீங்கள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, “ஆம்” என்று மேகன் பதிலளித்தார். “அது எல்லா பிரச்சனையையும் எல்லோருக்கும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன்” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற “அமைப்பொன்றின்” உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com