Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை

பட மூலாதாரம், Rahman Roslan

மலேசியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வருவதை அடுத்து தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ – MOVEMENT CONTROL ORDER) மே 7ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 20ஆம் தேதி வரை ‘எம்சிஓ’ ஆணை அமலில் இருக்கும் என்றும் அனைவரும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

1. மலேசியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு தினந்தோறும் சராசரியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே போல் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் குறிவைத்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு வந்தது.

இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை

பட மூலாதாரம், SOPA Images

2. கிளந்தான் மாநிலத்தில் தொற்றுப்பரவல் வெகுவாக அதிகரித்ததால் அங்கு ஏற்கெனவே ‘எம்சிஓ’ (நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை) அமலில் இருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் ‘எம்சிஓ’ அறிவிக்கப்பட்டது. தற்போது தலைநகர் கோலாலம்பூரும் இந்த ஆணையின் கீழ் வந்துள்ளது. அங்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

3. கோலாலம்பூரில் தொற்றுப்பரவல் அதிகரித்ததை அடுத்து நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அவசியம் என சுகாதார அமைச்சு பரிந்துரை அளித்தது என்று அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன் பேரில் ‘எம்சிஓ’ ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். கோலாலம்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஆணை அமலில் இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

4. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள பகுதிகளில் நோன்பு பெருநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் திறந்த இல்ல (Open House) உபசரிப்புகளுக்கு அனுமதி இல்லை என்றும் ரமலான் சந்தைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரமலான் சந்தைகளை மூடுவது குறித்து மாநில அரசாங்கங்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ள தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, உணவகங்கள் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இயங்க அனுமதிக்கப்படும் என்றார்.

எனினும் உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி இல்லை. சமூக நடவடிக்கைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. பொருளியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு.

இந்தியா, இலங்கை குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை

பட மூலாதாரம், Annice Lyn

5. இதற்கிடையே இலங்கை, வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை அனைத்து வகை பயணிகளுக்கும் பொருந்தும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இக்குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் மலேசியாவில் பணியாற்றி வருகின்றனர். எனினும் இந்நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

6. முன்னதாக, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இந்திய குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக மலேசிய அரசு அறிவித்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் விமானம் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் சரக்கு விமானங்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்குகின்றன.

7. இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதில் எந்தவித இனவாதமும் பாகுபாடும் இல்லை என மலேசிய அரசு கடந்த வாரம் விளக்கம் அளித்திருந்தது. இது தற்காலிக தடை என்றும் கூறியது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று மலேசியாவுக்கும் பரவி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.

8. கொவிட் இரண்டாவது அலையில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு நிதியளித்து உதவிக்கரம் நீட்ட மலேசியர்கள் முன்வர வேண்டும் என யுனிசெப் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு நிதி அளிப்பதற்கான வழிமுறைகளை மலேசியர்கள் ஆராய வேண்டும் என அந்த அமைப்பின் மலேசியாவுக்கான பிரதிநிதி மருத்துவர் ரஷத் முஸ்தபா சர்வார் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளும் மக்கள் நல மையங்களும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளால் திணறுகின்றன. இந்தியா முழுவதும் மேலும் பல ஆக்சிஜன் செறிவூட்டிகளும் கொரோனா பரிசோதனைக் கருவிகளும் தேவைப்படுகின்றன.

“இந்தியா மட்டும் தனித்துப் போராடட்டும் என்று நாம் விட்டுவிட இயலாது. மேலும் பல உயிர்களைக் காப்பாற்ற நாம் அவசர கதியில் செய்பட வேண்டியுள்ளது,” என ரஷத் முஸ்தபா சர்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

9. இந்நிலையில் மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,774 பேருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 17 பேர் பலியாகி உள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 424,376 என்றும், 1,591 பேர் பலியாகி உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் மருத்துவர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். தற்போது 32,939 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கு மலேசிய அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது நல்ல விவேகத்துடன் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், ஒரே செயலை திரும்பத் திரும்பச் செய்வதால் வித்தியாசமான முடிவு வரும் என எதிர்பார்ப்பது வீண் முயற்சி என்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »