Press "Enter" to skip to content

பறவைக் காய்ச்சல்: சீனாவில் மனிதருக்கு ஏற்பட்ட அரியவகைத் தொற்று மற்றவர்களுக்குப் பரவுமா?

பட மூலாதாரம், Getty Images

சீனாவைச் சேர்ந்த 41 வயதான ஒருவருக்கு மிகவும் அரிதான பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதருக்கு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும்.

அவருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி அதிகாரிகள் கூடுதல் தகவல்களைத் தரவில்லை.

H10N3 என்று அறியப்படும் இவ்வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் எளிதாகப் பரவி விடாது என்று கருதப்படுகிறது.

ஜீயாங்சூ மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு இந்தக் குறிப்பிட்ட வகையிலான பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கடந்தவாரம் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பத் தயாராக இருக்கிறார்.

பறவைக் காய்ச்சலில் பல வகை உண்டு. கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் பலர் சிலவகை பறவைக் காய்ச்சல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சீனாவைப் பொறுத்தவரை வேறு யாருக்கும் H10N3 வகை பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்படவில்லை.

சென்ஜியாங் நகரைச் சேர்ந்த நபர் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு மாத காலத்துக்குப் பிறகு அவருக்கு H10N3 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியிருக்கிறது.

சீனா

பட மூலாதாரம், Getty Images

“உலகில் இதுவரை H10N3 தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் இல்லை. இது கோழிகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் மிகவும் அரிதான நிகழ்வு. பெரிய அளவில் இது பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு,” என தேசிய சுகாதார ஆணையம் கூறியிருப்பதாக குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

H10N3 என்பது முழுமையான நோய்க்கிருமி என்று கூற முடியாது. கோழிகளில் இது மிகத் தீவிரமான காய்ச்சலையோ வேறு நோய்களையோ ஏற்படுத்தாது என்றும் சீனாவின் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

இப்போதைய நிலையில் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்தக் கிருமி பரவுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

“பறவைக் காய்ச்சல் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் கோழிகளில் இருக்கும்வரை மனிதர்களுக்கு அந்தத் தொற்று ஏற்படுவதில் வியப்பில்லை. இன்ஃப்ளூயன்ஸா பெருந்தொற்றுக்கான ஆபத்து இருப்பதற்கான நினைவூட்டல் இது,” என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பறவைகளில் தற்போது H5N8 என்ற வகையான பறவைக் காய்ச்சல் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் மனிதர்களிடம் H5N8 வகை பறவைக் காய்ச்சல் கிருமி இருப்பதை ரஷ்யா முதல்முறையாகக் கண்டறிந்தது.

பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களுக்கு ஏற்படுவது மிகவும் அரிது. 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் H7N9 என்ற வகையான பறவைக் காய்ச்சல் தாக்கியதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு பெரிய எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »