லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்து பயணி ஒருவர் குதித்திருக்கிறார். அவர் விமானத்தில் இருந்து குதிப்பதற்கு முன், அவ்விம்மானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானிகள் அறைக்குள் (Cocokpit) நுழைய முற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 19.10 மணிக்கு, யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. இவ்விமானம் சால்ட் லேக் நகரத்துக்கு சென்றடைய திட்டமிடப்பட்டு இருந்தது.
விமானம் புறப்பட்ட பின், அந்த அடையாளம் தெரியாத நபர், விமானத்தின் கதவைத் திறந்து அவசரநிலை சறுக்கிலிருந்து குதித்து வெளியேறினார் என அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக அமைப்பு (FAA) கூறியுள்ளது.
அவர் விமான நிலையத்திலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பிறகு அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது போன்ற சம்பவங்கள் அமெரிக்க விமானங்களில் அதிகம் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் இது போல சுமார் 3,000 சம்பவங்கள் நடந்திருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விமானம் பறக்க, ஓடுதளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அந்த நபர் தன் இருக்கையில் இருந்து எழுந்ததாகவும், அவர் விமானிகள் விமானத்தை இயக்கும் காக்பிட் அறையைத் திறக்க முயன்றதாகவும் விமான பணிக் குழுவினர் கூறியதாக என்பிசி செய்தி குறிப்பிடுகிறது
இச்சம்பவத்துக்குப் பிறகு எம்பிரேர் 175 ரீஜனல் ஜெட் வகையைச் சேர்ந்த அவ்விமானம், தன் நுழைவாயிலுக்கே திரும்பிச் சென்றது.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதோடு அந்த நபர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதையும் கண்டுபிடிக்க விசாரித்து வருகிறார்கள்.
கடந்த மே 25ஆம் தேதி வரை, பயணிகள் விமான பணிக் குழுவினரை அவர்களது பணியைச் செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக 394 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக (FAA) அமைப்பு கூறியுள்ளது.
இது கடந்த ஆண்டில் பதிவான 183 வழக்குகளை விட சுமார் இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com