Press "Enter" to skip to content

ஆப்காிஸ்தானின் தாலிபன் அரசில் பெண்களுக்கு இடம் கிடையாது – மீண்டும் பழைய பாதைக்குத் திரும்புகிறதா போராளிக் குழு?

பட மூலாதாரம், Getty Images

தாலிபன்களின் புதிய அரசில் உயர்பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என்று அந்த இயக்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர். விரைவில் ஒரு அரசை அமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

இன்னும் ஓரிரு நாள்களில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்று கத்தாரில் உள்ள அந்த அமைப்பின் அரசியல் பிரிவு துணைத் தலைவர் அப்பாஸ் ஸ்டானேக்ஷா பிபிசியிடம் தெரிவித்தார்.

பெண்களுக்கு உயர் நிலையில் பொறுப்புகள் வழங்கப்படாது என்று கூறிய அவர், கீழ் நிலைப் பதவிகளில் அவர்களுக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த இரு தசாப்தங்களில் அரசில் பணியாற்றியவர்கள் யாரும் தாலிபன்களின் அரசில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.

தாலிபன்களை அகற்றுவதற்காக தொடங்கப்பட்ட 20 ஆண்டு போரை முடித்துக் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

ஏன் இந்த முரண்? – லிஸ்ஸே டோசெய், சர்வதேச தலைமைச் செய்தியாளர்

அனைவரையும் உள்ளடக்கிய என்ற மந்திரச் சொல்லைக் கொண்டு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கு தாலிபன்களுக்கு அழுத்தம் தர ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுள் முயற்சி செய்து வருகின்றன.

ஆனால் சூழலை முழுமையான அரசியல் அடிப்படையில் பாருங்கள். எதிர்பாராத வேகத்தில் தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள். வலிமையான இஸ்லாமிய அமைப்பு நிறுவுவதற்கான உத்தரவு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இந்தப் புதிய இஸ்லாமிய அமைப்பில், பெண்களுக்கு இரண்டாம் நிலைப் பதவிகளை கிடைக்கும்.

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசுடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தாலிபன்கள் பேசியதற்கு முரண்பட்டதாக இருக்கிறது. அதிபர், பிரதமர் தவிர மற்ற அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள் என்று அப்போது தாலிபன்கள் கூறினார்கள். அமைச்சர்களாகவோ, நிறுவனத் தலைவர்களாக இருக்கலாம் என்று பேசினார்கள்.

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இப்போது அவர்கள் பின்வாங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அப்போது நடந்தது வரலாறு. இப்போது அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் முரண்பாடு.

தாலிபன்கள் இரக்கமற்றவர்கள்: அமெரிக்கா

தாலிபன்கள் இரக்கமற்றவர்கள், அவர்கள் மாறுவார்களா எனத் தெரியவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி மார்க் மில்லி கூறியுள்ளார்.

எனினும் வருங்காலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தாலிபன்களுடன் இணைந்து செயல்பட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு ஒன்றை தாலிபன்கள் விரைவில் அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு முதல் முறையாக அமெரிக்கத் தளபதி பொதுவெளியில் பேசினார். அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் உடன் இருந்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அவசரமாகப் படைகளை விலக்கிக் கொள்ளப்பட்ட அதிபர் ஜோ பைடனின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அமெரிக்கப் படைகள் திடீரென வெளியேறியதால் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் எதிர்பாராமல் முடங்கின.

தாலிபன்கள் மின்னல் வேகத்தில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறியதால், அங்கு ஆபத்தில் இருந்த மக்களை அவசரமாக மீட்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் மக்களை மீட்ட நடவடிக்கையை ஆஸ்டினும் மில்லியும் பாராட்டினார்கள்.

காபூல் விமான நிலையத்தின் வழியாக மக்கள் மீட்ட முயற்சியின்போது தாலிபன்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது என்று ஆஸ்டினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

“நாங்கள் தாலிபன்களுடன் மிகக் குறைந்த அளவிலான பிரச்னைகளில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அது அவ்வளவுதான். எங்களால் முடிந்தவரை மக்களை மீட்டிருக்கிறோம்.” என்றார் ஆஸ்டின்

“போரில் படைக்கு ஆபத்தை குறைக்க செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டுமே தவிர, ய்ய விரும்புவதை அல்ல” என்று மில்லி கூறினார்.

காபூல்

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானியப் பிரிவான ஐ.எஸ்.-கே பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தாலிபன்களுடன் இணைந்து செயல்படுவது சாத்தியம் என்று மில்லி கூறினார். இந்தத் தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உள்பட 170 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அனைத்து ஜிகாதி தீவிரவாதத் குழுக்களிலும் ஐ.எஸ்.- கே மிகவும் கொடூரமானது. அது தாலிபன்களுடனும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. அமெரிககாவுடன் உடன்பாடு செய்து கொண்டு ஜிகாத்தையும், போரையும் கைவிட்டதாக தாலிபன்கள் மீது ஐஎஸ்.-கே குற்றம்சாட்டியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் எதிர்கால நடவடிக்கைகள் இருக்குமா என்பது குறித்து எந்தக் கணிப்பையும் செய்ய விரும்பவில்லை என்று ஆஸ்டின் கூறினார். எனினும் ஐ.எஸ்-கே பயங்கரவாத இயக்கதை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என்றார் அவர்.

ஒட்டுமொத்தமாக, ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் 1,23,000 க்கும் அதிகமானோர் வெளியேற விரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் இன்னும் 100 முதல் 200 அமெரிக்கர்கள் வரை இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள அமெரிக்கர்கள், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஆகியோரை மீட்பதற்குச் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சர் விக்டோரியா நூலண்ட் கூறினார்..

இதனிடையே பிரிட்டனைச் சேர்ந்த எத்தனை பேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை, எனினும் சில நூறுகளில் எண்ணிக்கை இருக்கலாம் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »