- லொரேலெய் மிஹாலா
- வர்த்தக செய்தியாளர்
பெருந்தொற்று காலத்தில் சில நாடுகளில் பிரபலம் அடைந்த பல விஷயங்களில் ஒன்று `மகிழ்ச்சி பயிற்சியாளர்கள்`. இவர்கள் என்ன செய்வார்கள் அதாவது என்னமாதிரியான பயிற்சியை வழங்குவார்கள் அது எப்படி வேலை செய்யும்?
பிரிட்டனை சேர்ந்த சேடி மில்ஸுக்கு 45 வயது. திடீரென இன்ஸ்டாகிராமில் ஒரு சிரித்த முகத்துடன் `உங்களின் மகிழ்ச்சியை மீட்டமையுங்கள்` என்ற விளம்பரம் வந்தவுடன் ஆச்சரியமடைந்தார். இவர் ஸ்பெயினில் உள்ள ஐபிசா தீவில் சொத்து மேலாண்மை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலனவர்களுக்கு வந்தது போலவே சேடி மில்ஸுக்கும் மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருந்தன. எனவே அவர் அந்த விளம்பரம் அளித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார். `மகிழ்ச்சி பயிற்சியாளர்` வேண்டும் என்று பதிவு செய்தார்.
இப்போது சேடி மில்ஸ் சூம் செயலி (Zoom) மூலம் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த வகை பயிற்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் அறிவுரைகள், ஆதரவுகள், உதவிகள் வழங்கப்படும். ஒருவர் பேசுவதற்காக நியமிக்கப்படுவார்.
மகிழ்ச்சி பயிற்சியாளர்கள்
“இந்த பயிற்சியாளர்கள், உங்களை சுற்றியுள்ள விஷயங்களை நேர்மறையாக பார்க்க உதவி செய்வார்கள். அதாவது பாதி நீர் உள்ள ஒரு கண்ணாடி குவலையை பார்த்து அது பாதி காலியாக உள்ளது என்று சொல்லாமல் பாதி நிறைந்துள்ளது என்று சொல்ல உதவி செய்வார்கள்” என்கிறார் மில்ஸ்.
மேலும் உங்களின் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களை நினைவுகூர அவர்கள் உதவி செய்வார்கள் என்கிறார் மில்ஸ்.
இம்மாதிரியான பயிற்சிகளும், பயிற்சியாளர்களும் புதிய விஷயம் என்பதால் இந்தத் துறை இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. எனவே தற்போதைய சூழலில் பயிற்சியாளருக்கு எந்த படிப்பும் தேவையில்லை. இருப்பினும் அதற்கான படிப்புகள் இருக்கின்றன அதேபோன்று மக்கள் அம்மாதிரியான தகுதி பெற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
அதேபோன்று ஒருவருக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அவர்கள் மருத்துவரை முதலில் அணுக வேண்டும் என்பதும் பரவலான ஒரு அறிவுரை.
சேடி மில்ஸ் லிடியா கிம்மர்லிங் என்பவரை தனது மகிழ்ச்சி பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தார். இவர் லண்டனை சேர்ந்தவர்.
“இந்த பெருந்தொற்று காலம் மக்கள் அவர்கள் யார் என்பதை உணரவும் உண்மையில் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறியவும் உதவியுள்ளது” என்கிறார் கிம்மர்லிங்.
மகிழ்ச்சியை தேடி
கிம்மர்லிங்கிற்கு 37 வயது அவர் தனது நிறுவனத்தை 2010ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளார். தன்னுடைய மகிழ்ச்சியை அப்போது கிம்மர்லிங் தேடிக்கொண்டிருந்த சமயம்.
“நான் ஏதோ ஒரு விஷயம் நடந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எடை குறைந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். அல்லது பணம் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். காதலில் விழுந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்து கொண்டிருந்தேன்.”
“அதன்பிறகுதான் எனது மகிழ்ச்சிக்கான காரணம் என்னிடத்திலிருந்துதான் தொடங்குகிறது என்பதை நான் உணர்ந்தேன்.” என்கிறார் கிம்மர்லிங்.
மகிழ்ச்சி பயிற்சியாளராக கிம்மர்லிங் மூன்று ஆண்டு படிப்பை முடித்திருக்கிறார். இது சர்வதேச பயிற்சி கூட்டமைப்பான ஐசிஎஃப்-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது தொழில்முறை பயிற்சிக்கான அரசு சாரா நிறுவனம்.
“மக்கள் அவர்கள் இலக்குகளை அடைய நான் அவர்களுக்கு உதவுகிறேன். அவர்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க அவர்கள் யார் என்பதில் கவனம் செலுத்த நான் அவர்களுடன் சேர்ந்து பணி செய்கிறேன். அதன் விளைவாக அவர்கள் யார் என்பது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மாறுகிறது.”
“இந்த பயிற்சியாளர்கள் நீங்கள் மகிழ்ச்சியை உருவாக்குவதற்கு உதவி செய்வார்கள்,” என்கிறார் கிம்மர்லிங்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்ததைப் போல தற்போது தன்னிடம் வருபவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்கிறார் கிம்மர்லிங். மேலும் தற்போது அவர் உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்குகிறார். அவருடன் 10 பயிற்சியாளர்கள் இணைந்து பணி செய்கிறார்கள்.
இவரிடம் வந்தவர்களில் 70 சதவீதம் பேர் தனிநபர்கள். 30 சதவீதம் பேர் நிறுவனம் மூலமாக வந்தவர்கள். அதாவது பெருந்தொற்று காலத்தில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் நலனை காக்க பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே இம்மாதிரியான பயிற்சியாளர்களை சில நிறுவனங்கள் நியமிக்கின்றன.
பெருந்தொற்றால் அதிகரித்த தேவை
இம்மாதிரியான வாழ்வியல் பயிற்சியாளர்களின் தேவை கடந்த ஆண்டு முதல் அதிகரித்துள்ளதாக லிங்க்ட்இன் தளத்தின் தகவல் தெரிவிக்கிறது,
இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று என்கிறார் லின்க்ட் இன் தளத்தின் பிரிட்டன் மேலாளர் ஜெனின் சாம்பெர்லின்,
“இந்த பெருந்தொற்று காலத்தில் பலரும் தனிநபர் வளர்ச்சிக்காகவோ அல்லது தங்களின் பணிக்காகவோ பலவித பயிற்சிகளில் சேர விரும்பம் காட்டுகிறார்கள். அதுவே இம்மாதிரியான தொழில்முறை, வர்த்தக அல்லது வாழ்வியல் பயிற்சியாளர்களின் தேவையை அதிகரித்துள்ளது.” என்கிறார் ஜெனின்.
லின்க்ட் இன் தளத்தில் இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் வாழ்வியல் பயிற்சியாளர்களாக பதிந்துள்ளனர். அதில் உலக அளவில் 1,600 பேர் மகிழ்ச்சி பயிற்சியாளர்கள்.
ஆனால் பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே இம்மாதிரியான பயிற்சி வர்த்தகம் லாபத்தில்தான் சென்று கொண்டிருந்தது என்கிறது ஐசிஎஃப் மற்றும் ப்ரைஸ் வாட்டர் அவுஸ்கூப்பர்ஸ் என்ற அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வு.
இருப்பினும் இந்த பயிற்சியாளர்கள் முன் வைக்கும் காரணங்களை சிலர் மறுக்கிறார்கள். அதில் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் இவா இல்லூஸ் மற்றும் மேட்ரிட்டில் உள்ள கெமிலோ ஜொஸ் சிலா பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர் எட்கர் கபானாஸ், ஆகிய இருவரும் அடக்கம்.
இவர்கள் இருவரும் சேர்ந்து `மகிழ்ச்சியான குடிமக்களை உருவாக்குதல்` என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர். அதில் மகிழ்ச்சி என்பது சமூக காரணிகளைப் பொறுத்தது என்று விவரிக்கின்றனர்.
ஆனால் இதை மகிழ்ச்சி பயிற்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை என்கின்றனர் அவர்கள்.
“நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்கள் அமைந்தால் நாம் ஏன் மகிழ்ச்சியாக இல்லாமல் போகிறோம்,” என்கிறார் கபானஸ்.
“சிலரிடம் உங்களின் மனநிலையை மாற்றும் உக்தி இருக்கலாம். அல்லது அவர்கள் அந்த திறமையை பெற்றிருக்கலாம். ஆனால் அது ஒரு தீவிரமான காயத்திற்கு பாராசிட்டமல் மாத்திரை எடுத்து கொள்வது போன்றுதான். அது உங்கள் வலியை குறைக்கும் ஆனால் வலிக்கான காரணத்திற்கு தீர்வாகாது” என்கிறார் பேராசிரியர் இல்லூஸ்.
அதே போல இம்மாதிரியான பயிற்சியாளர்கள் அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றனர் என பலர் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எனவே இம்மாதிரியான பயிற்சிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஓர் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்றும் பலர் தெரிவிக்கின்றனர்.
மனநலம் சார்ந்த பிரச்னைகள், மகிழ்ச்சி, போன்றவை குறித்து பேசும் போது அவற்றில் பயிற்சி அளிப்பதற்கான தகுதிகள் குறித்து நாம் கவனமாக இருப்பது அவசியம் என்கிறார் தகுதிபெற்ற மனநல வல்லுநர் ஸ்டூவர்ட் டஃப். இவர் பிரிட்டனில் பியன் கண்டோலா என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com