இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க அரசு முடிவு செய்திருக்கிறது.
ஏர் இந்தியாவை விற்பதற்கான ஏலத்தில் டாடாவின் ஏல விருப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தது டாடா.
இது அரசு அறிவித்திருந்த முன்பதிவு தொகையான 12,906 கோடி ரூபாயைவிட அதிகம் என்று முதலீடு, பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
டாடாவின் விமான நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தி தேசிய விமான சேவையாக ஏர் இந்தியாவை நடத்தி வந்தது. இப்போது அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா வசமாகிறது.
விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவை வாங்கி முதல் ஆண்டில் எந்த ஊழியரையும் டாடா பணி நீக்கம் செய்ய முடியாது. இரண்டாவது ஆண்டில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விற்பனை ஒப்பந்தப்படி 5 ஆண்டு காலத்துக்கு ஏர் இந்தியாவின் இலச்சினையையோ, பிராண்டையோ வேறு யாருக்கும் டாடா மாற்றித் தரக்கூடாது. 5 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஓர் இந்தியருக்கு மட்டுமே மாற்றித் தரலாம்.
ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளை டாடாவுக்கு விற்பதன் மூலம் அரசுக்கு பணமாக ரூ.2,700 கோடி வரும் என்றும் தெரிவித்துள்ளார் முதலீடு, பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com