அமெரிக்காவின் ஆறு மாகாணங்களைத் தாக்கிய சூறாவளிகள் காரணமாக, இதுவரை 83 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
வெள்ளிகிழமையன்று கிட்டத்தட்ட 30 சூறாவளிகள் தாக்கிய நிலையில், பலரும் காணாமல் போய் உள்ளனர். மேலும், நகரங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூறாவளியினால் அதிகம் பாதிக்கப்பட்ட கென்டக்கியில் ‘பேரிடர் பாதிப்பு’ ஏற்பட்டுள்ளதாக அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
இந்த மாகாணத்தில் 70க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், மெழுகு தொழிற்சாலையில் பணிபுரிந்த டஜன் கணக்கான பேரும் அடங்குவர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-யைத் தாண்டியுள்ளது.
மேபில்ஃட் நகரத்தில் மீட்பு பணியாளர்களுடன் பணி செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் கோமர், தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் நீண்ட சூறாவளி என்று கூறியுள்ளார்.
“என் வாழ்நாளில் நான் பார்த்த சூறாவளி பாதிப்புகளில் இதுவே மிகவும் மோசமானது. இது போன்ற சூறாவளியை நாம் முன்பும் பார்த்திருக்கிறோம். ஆனால், இத்தகைய அகலம் கொண்ட சூறவாளியை நாங்கள் பார்த்ததே இல்லை”, என்று கூறியுள்ளார்.
மேபில்ஃட்டிலுள்ள சிதைந்த மெழுகு தொழிற்சாலையில் இருந்து 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், 60 பேர் காணாமல் போய் உள்ளனர். கென்டக்கி ஆளுநர் அண்டே பெஷீயர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார், பின் அங்கு உயிர் பிழைத்திருப்பவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்றார்.
“மேலே கார்கள் உள்ள நிலையில் குறைந்தபட்சம் 15 அடிக்கு உலோகம் உள்ளது. அரித்து கரையக்கூடிய ரசாயனங்களின் பீப்பாய்கள் உள்ளன. யாரேனும் உயிர் பிழைத்து இருந்தால், அது அதிசயமே”, என்று கூறியுள்ளார்.
மெழுகு தொழிற்சாலையில் சிதைந்த இடத்திலிருந்து ஓர் ஊழியர் ஃபேஸ்புக்கில் தனக்கு உதவ கோரி வேண்டுகோள் விடுத்தார். அப்போது, மற்ற பணியாளர்களின் முனகல் குரல்களைக் கேட்க முடிந்தது.
சி.என்.என்னில் வெளியிட்ட ஒளிப்பரப்பில், “நாங்கள் அகப்பட்டுள்ளோம். தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்”, என்றார் க்யான்னா பார்சன்ஸ் பெர்ஸ். பின், அவர் மீட்கப்பட்டார்.
இலினாய்ஸ் பகுதியிலுள்ள எட்வர்ட்ஸ்விலேவில் அமேசான் சேமிப்பு கிடங்கு சூறாவளியால் பாதிக்கப்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எத்தனை பணியாளர்கள் காணாமல் போய் உள்ளனர் என்பது தெரியவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது. இதுகுறித்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தான் மனம் உடைந்து இருப்பதாகவும், சமூகத்திடம் இருந்து ஆதரவு வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கென்டக்கி மாகாணத்தின் நிதியுதவிக்காக, பைடரல் அவசர கால பேரிடர் அறிவிப்பில் (Federala Emergency Disaster Declaration) அதிபர் பைடன் கையெழுத்திட்டார். சூறாவளிகளால் நடந்த உயிரிழப்பு பெரும் சோகம் என்று அவர் கூறியுள்ளார்.
அவரச கால முகமையான எஃப்.இ.எம்.ஏ (Fema) ஞாயிற்றுக்கிழமையன்று கென்டக்கிக்கு செல்ல உள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு தற்காலிகமாக வீடுகள் அமைக்க உதவி உள்ளிட்ட கூடுதல் பணிகளை செய்யும் என்று அதிபர் பைடன் தெரிவித்தார்.
“மேலும், அதிபர் பைடன் பேசுகையில், மிசோரி, அர்கன்சாஸ், இலினாய்ஸ், டின்னிஸ்சி மற்றும் மிஸ்ஸிஸிப்பி ஆகிய மற்ற மாகாணங்களுக்கு தேவைப்பட்டால் அவசரகால நிதியுதவி கிடைக்கும்”, என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com