Press "Enter" to skip to content

சீன ஊடகங்கள்: ‘பிபின் ராவத் உலங்கூர்தி விபத்துக்கு இந்தியாவின் மேம்போக்கான ராணுவ அணுகுமுறையே காரணம்’

  • பத்மஜா வெங்கட்ராமன்
  • .

பட மூலாதாரம், Getty Images

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உலங்கூர்தி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து சீன ஊடகங்களில் செய்திகளும் கருத்துகளும் வெளியாகின. அதில், இந்திய ராணுவத்திடம் ஒழுக்கமும், போருக்கான தயார்நிலையும் இல்லை என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த டிசம்பர் 9ம் தேதி, குளோபல் டைம்ஸ் என்ற அந்நாட்டின் சர்வதேச செய்திப் பத்திரிகையின் ஆங்கில பதிப்பில் ஒரு செய்தி வெளியாகியது. அதில், இந்த விபத்து இந்திய நாட்டின் ராணுவம் நவீனமாயமாக்கலுக்கு விழுந்த பலத்த அடி; இது நீண்ட காலம் சுணக்கத்தை ஏற்படுத்தும்”, என்று சீன ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவின் முக்கிய பாதுகாப்புத்துறை விமர்சகர் பிரம்மா செல்லானி, ராவத்தின் மரணம் குறித்தும், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி ராணுவ உலங்கூர்தி விபத்தில் உயிரிழந்த தைவான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சீன் யி-மிங் (Shen Yi-ming) குறித்தும் ட்வீட் செய்திருந்தார். இதனை குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் விமர்சகர் விமர்சித்தார்.

கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று தமிழகத்தில் நடந்த உலங்கூர்தி விபத்தில், பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

China's take on Rawat Death

பட மூலாதாரம், TWITTER (Global Times)

‘மேம்போக்கான’ ராணுவ அணுகுமுறை கூறும் சீனா

இந்த விபத்திற்கு சாத்தியமான காரணங்களாக, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கூர்தி என்பதை விட மனிதர்களின் செயல்களே காரணம் என்று இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் தெரியவருகிறது என்று குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் சீன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எம்.ஐ-17 ஹெலிகாப்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பே எம்.ஐ-17வி5 என்று பெய்ஜிங்கைச் சேர்ந்த ராணுவ நிபுணர் வை டாங்சு (Wei Dongxu) அப்பத்திரிகையில் தெரிவித்துள்ளார். இந்த உலங்கூர்தி மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினும், சமீபத்திய மின்னணு சாதனங்களும் கொண்டது. இதனால், இது மேலும் நம்பத்தக்கதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒழுங்கற்ற ராணுவ அணுகுமுறைக்கு இந்தியா அறியப்பட்டது என்று பெயர் வெளியிட விரும்பாத ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். நிலையான நடைமுறை செயல்பாடுகளையும், ஒழுங்குமுறைகளையும் இந்தியப் படையினர் பெரும்பாலும் பின்பற்றமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். வானிலை சரியாகும் வரை பயணத்தை ஒத்தி வைத்திருந்தாலோ அல்லது விமானி “மேலும் திறம்பட” விமானத்தை ஓட்டி இருந்தாலோ இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

“இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் முகாமிட்டு இருக்கும் இந்திய படைகள் உட்பட ஒட்டுமொத்த ராணுவ அணுகுமுறையில் இப்பிரச்னை மிகவும் பொதுவானது. அவர்கள் ஆர்வத்துடன் செயல்பாடுவார்கள். ஆனால், உண்மையில் போர் நடந்தால், சீன ராணுவத்தை எதிர்கொண்டு வெற்றிப்பெற அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை”, என்று அப்பத்திரிகையில் அந்த நிபுணர் மேலும் கூறுகிறார்.

கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று, இந்தியச் செய்தி நிறுவனமான, ‘தி பிரிண்ட்’ வலைதளத்தில் வெளியான கட்டுரையை குறிப்பிட்டு குளோபல் டைம்ஸின் சீனப் பதிப்பு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய விமானப்படையினருக்கு அவர்களின் பணிகளுக்கு முன்னதாக சரியான ஊட்டச்சத்து அளிக்கப்படுவது இல்லை; இதனால், அவர்களின் ரத்த குளுகோஸ் அளவு குறைந்து, அது அவர்கள் விமானம் ஒட்டும் திறனை பாதிக்கிறது; இது குறிப்பிட்ட காலத்தில் நடந்த விபத்துகளின் விசாரணையின்போது குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்பத்திரிகை கூறுகிறது.

தி பிரிண்ட் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட முந்தைய இரண்டு உலங்கூர்தி விபத்துகளை குறித்தும் தி குளோபல் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது. ஒன்று1963ம் ஆண்டில் நடந்தது; மற்றொன்று 1977ம் ஆண்டில் நடந்தது. இதனை குறிப்பிட்டு, ஆரம்ப காலகட்டத்தில் நடந்த கடுமையான விபத்துகள் மூலம் இந்திய ராணுவம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விமர்சிக்கப்பட்ட இந்திய விமர்சகரின் ட்வீட்

இந்தியப் பாதுகாப்புத்துறை விமர்சகர் பிரம்மா செல்லானி, டிசம்பர் 8ம் தேதி செய்த ட்வீட்டையும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. ராவத்தின் மரணத்தையும், கடந்த 2020ம் ஆண்டு உலங்கூர்தி விபத்தில் உயிரிழந்த தைவான் நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி ஷைன், அவர்களின் 7 வீரர்கள் உயிரிழப்பை குறித்தும் அவர் “அச்சமூட்டும் வகையில் ஒப்பிட்டிருந்தது” விமர்சிக்கப்பட்டது.

ஒவ்வொரு உலங்கூர்தி விபத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கத்தை அகற்றியது”, என்று செல்லானி கூறியிருந்தார்.

கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று, குளோபல் டைம்ஸ் ஆங்கிலத்தில் ஒரு கருத்தை வெளியிட்டது: “செல்லானியின் புனைவு கருத்தியல் மூலம் இந்தியப் படைகளின் ரத்தக்கரை அவரின் கைகளில் உள்ளது”, என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “தனது புனைவு கோட்பாட்டை காலம் தாழ்த்தாமல் அவர் கதை கட்டினார்” என்று அப்பத்திரிகை குற்றம் சாட்டியது.

“இந்தியாவின் சொந்த ராணுவ ஹெலிகாப்டரே தனது பாதுகாப்புத் தலைவரைப் பாதுகாக்கத் தவறியது என்பதை செல்லானியும் மற்ற இந்தியர் பற்றாளர்களும் நினைவுக்கூர வேண்டும். இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், அது இந்தியாவில் நடந்துள்ளது.” என்று அக்கட்டுரை கூறுகிறது.  “இந்தியாவின் மிகப் பெரிய எதிரி சீனா அல்ல, அதன் பின்தங்கிய நிலையே” என்பதையும் இந்த விபத்து காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள ட்விட்டர் குறுஞ்செய்தியில். செல்லானியின் ட்வீட்டின் திரைப்பிடிப்பை (ஸ்கிரீன்ஷாட்) குளோபல் டைம்ஸ் டிசம்பர் 8ஆம் தேதி பகிர்ந்துள்ளது. “இப்பார்வை அமெரிக்காவுக்கு இந்த விபத்தில் பங்குண்டு என்று சந்தேகிப்பதாக உள்ளது. ஏனென்றால், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு வழங்கப்படுவதுடன் இந்தியாவும் ரஷ்யாவும் முன்நோக்கி செல்கிறது”.

இந்த பத்திரிகையின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள விமர்சகர் செல்லானி, “தனது ட்வீட் தவறாகப் பயன்படுத்தபட்டது” என்று குற்றம் சாட்டினார்.

அங்கு, பைடெள கெளஜி (Paitou Guoji) என்பது தேசிய பாதுகாப்பு பத்திரிகை நடத்தும் புதிய ஊடகத்தளம். இந்த வலைதளமும் செல்லானியின் ட்வீட்டை விமர்சித்துள்ளது. ராவத்தின் மரணம் விபத்து அல்ல, ஆனால் “குறிப்பிட்ட நாடுகளின் ரகசிய சூழ்ச்சி” என்று அவர் கருத்து தெரிவித்திருப்பதாக விமர்சித்துள்ளது.

 “ராவத்தின் விமான விபத்து ஒரு சதியா என்பது தற்போது தெரியவில்லை. ஆனால் சீனா மீது பழி சுமத்துவது தற்போது சரியில்லை. ராவத்துக்கு அமெரிக்கா ஏதாவது செய்திருக்க வாய்ப்பு உள்ளது,” என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இடையேயான உச்சி மாநாட்டில், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த விபத்து அச்சம்பவத்தையடுத்து நடந்துள்ளது என்று அக்கட்டுரை கூறுகிறது.

“பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட ராவத்தின் விமான விபத்து இருக்கலாம். ஏனென்றால், இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யாவிடமிருந்து ராணுவ ஆயுதங்களை தொடர்ந்து இந்தியா வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை”, என்று அந்த கட்டுரை கூறியுள்ளது.

Indian media allege 'shameful propaganda' from China

பட மூலாதாரம், Republic TV Online

‘வெட்கத்தக்க பிரச்சாரம்’ – சீனா விமர்சிக்கும் இந்திய ஊடகங்கள்

இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்பார்த்த வகையில், இந்திய ஊடகங்கள் சீன ஊடகங்களை தாக்கி பேசியுள்ளன. உலங்கூர்தி விபத்தில் தலைமைத் தளபதி ராவத்தும் மற்ற வீரர்களும் உயிரிழந்த துக்கத்தில் இந்தியா உள்ள நிலையில், அந்நாடு மிகவும் கீழ்தரமாக நடத்துக்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை சீன ஊடகங்கள் கையாண்டயுள்ளதை, “வெட்கத்தக்க பிரச்சாரம்” என்று முன்னணி ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமாக, “இந்தியா டூடே” கூறியுள்ளது. இதில், இந்த விபத்து இந்திய ராணுவத்தின் தவறு என்று அழைத்த சீனா கீழ்த்தரமாக நடந்துக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் ‘குளோபல் டைம்ஸ்’ என்றும் விமர்சித்துள்ளது. அறமும் மதிப்பும் சீனாவிடம் இல்லை என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது.

அதே போல், ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ‘ரிப்பளிக் டிவி’யின் வலைதளத்தில், தலைமைத் தளபதி ராவத்தின் மரணத்திக்கு பின், “வெட்கத்தக்க பிரச்சாரத்தை” சித்தரிக்க தனது சார்புக்குரலை கோழை சீனா பயன்படுத்தியுள்ளது என்று விமர்சித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »