Press "Enter" to skip to content

யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” – புதின் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Reuters

யுக்ரைனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணிப் படைகள் குறித்த ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுக்ரேன் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகமாக உள்ளது.

யுக்ரேனின் க்ரைமிய தீபகற்பத்தை தன்னுடன் இணைத்து கொண்டு, டான்பாஸின் கிழக்கு பகுதியில் போருக்கு ரஷ்யா ஆதரவளித்து, ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு, அந்நாடு ஒரு படையெடுப்பைத் திட்டமிடுவதாக மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.

மேலும், யுக்ரேனில் குறைந்தபட்சம் 14 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், கிழக்கு பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் யுக்ரேன் அரசு தவறுவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் அப்பிரதேசத்தின் பல பகுதிகளை கட்டுப்படுத்துகிறது என்று அந்நாடு கூறுகிறது.

மாஸ்கோவில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, பேசிய புதின், “யுக்ரேனின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா பெரிதாக அக்கறை காட்டவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ரஷ்யாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதுதான் அதன் முக்கிய பணி. இந்த இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக யுக்ரேன் இருப்பதாக நினைக்கிறேன்.” என்றார்.

உலகின் மிகப்பெரிய அணு ஆயுதங்களை இப்போதும் கொண்டிருக்கும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் (1947 ஆம் ஆண்டு -89ஆம் ஆண்டு ) காலத்திலிருந்தே உள்ளது. அப்போது ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக கம்யூனிச சோவியத் யூனியனின் முக்கியமான பகுதியாக யுக்ரேன் இருந்தது.

நேட்டோவின் கிழக்குப் பகுதிக்கு மேலும் விரிவடைவதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை, சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்ய கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணித்ததாக புதின் கூறுகிறார்

நேட்டோவில் இணைய அமெரிக்காவின் விருப்பத்தை யுக்ரேன் ஏற்றுக்கொண்டால், அது மற்ற உறுப்பினர்களை ரஷ்யாவுடன் போருக்கு இழுக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“யுக்ரேன் ஒரு நேட்டோ உறுப்பினராக இருந்து, ஒரு ராணுவ நடவடிக்கை [க்ரைமியாவை மீண்டும் கைப்பற்ற] தொடங்குகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன – நேட்டோவுடன் சண்டை போடப் போகிறோமா? இதைப் பற்றி யாராவது சிந்தித்தார்களா? அவர்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை என்று தெரிகிறது”, என்று அவர் கூறுகிறார்.

Russia and Ukraine

யுக்ரேனுக்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனின் தலையைக் குறிவைத்து துப்பாக்கி வைத்துள்ளதாக புதின் மீது குற்றம் சாட்டினார். மேலும், “ராணுவப் பேரழிவில்” இருந்து பின்வாங்குமாறு ரஷ்யாவிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

யுக்ரேனின் தலைநகரமான கீவ்வில், அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன்பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் நிலை ஏற்பட்டால் யுக்ரைன் ராணுவம் போராடும் என்றார்.

“யுக்ரேனின் 2 லட்சம் ஆண்களும் பெண்களும் ஆயுதங்களுடன் உள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான, நெருக்கடி தரும் எதிர்ப்பை முன்வைப்பார்கள். ரஷ்யாவில் உள்ள பெற்றோர்களும் தாய்மார்களும் அந்த உண்மையைப் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதிபர் புதின் போர் நெருக்கடி தரும் பாதையில் இருந்து பின்வாங்குவார் என்று நான் நம்புகிறேன். நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்”. என்று அவர் கூறினார்.

மேலும், ரஷ்யப் படைகள் யுக்ரேன் எல்லைக்குள் கடக்கும் முதல் தருணத்தில், தடுப்பு நடவடிக்கைகளுடனும், பிற செயல்திட்டகளுடனும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பிரிட்டன் பதிலளிக்கும் என்று ஜான்சன் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து நிலையான ஆட்சியையும், சுதந்திரத்தையும் மேம்படுத்துவதற்காக யுக்ரேனுக்கு 119 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

“இது யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போராக இருக்காது. இது ஐரோப்பா முழுவதும் நடக்கும் போராக இருக்கும்” யுக்ரேன் அதிபர் தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரத்தின் மூலம் சலவை செய்யப்பட்ட கிரெம்ளினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “சட்டவிரோதமான பணத்தை” (Dirty Money) கையாள்வதற்கான பிரிட்டனின் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் கூறுகிறார். மேலும், இது தொடர்பாக எந்தவொரு விரிவாக்கத்திற்கும் முன்னதாக தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »