Press "Enter" to skip to content

சீனாவில் உறையும் பனியில் கழுத்தில் சங்கிலியுடன் மீட்கப்பட்ட 8 குழந்தைகளின் தாய்

பட மூலாதாரம், DOUYIN

சீனாவின் ஷூஷௌ (Xuzhou) நகரப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் கழுத்தில் சங்கிலியுடன் காணப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக இந்த வழக்கில் தொடர்பு உடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சமூக வலைத்தளத்தில் இவரின் காணொளி வெளியானதை அடுத்து பலர் கோபம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட இவர் 8 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக முதலில் அதிகாரிகள் கூறுகையில், ஆட்கடத்தல் நடக்கவில்லை என்று மறுத்தனர். ஆனால் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், அதிகாரிகள் இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தனர்.

மேலும் சிலர், குறிப்பிட்ட பெண் கடத்தப்பட்டு பிறகு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பினர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையிலும், இந்த பிரச்னை தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வந்தது என்றும், சீனாவின் சமூக வலைதளமான வெய்போவில் இந்த பிரச்னை சம்பந்தமாக பகிரப்பட்ட செய்தியை சுமார் 300 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் அவர் வீட்டின் அருகே உள்ள கதவில்லாத கொட்டகையில் பூட்டப்பட்டிருந்த நிலையில், உறைய வைக்கும் அதீத குளிரிலும் மெல்லிய ஆடை அணிந்து காணப்பட்டார்.

சீனாவைச் சேர்ந்த இணையதள செயல்பாட்டாளர் ஒருவரால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணின் நிலை சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கிசோஃப்ரினியா (மனச்சிதைவு) என்ற மன நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் கடந்த ஜனவரி பிற்பகுதியில் வெளிவந்ததை அடுத்து, சீனாவில் உள்ள கிராமப்புற பெண்கள் மற்றும் மணமகள் கடத்தல் சம்பவங்கள் மீது அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.இந்த விவகாரத்தில் உள்ள திருப்பங்கள் என்ன?

இந்தப் பெண் தனக்கு விருப்பமில்லாத திருமணம் ஒன்றை செய்து கொண்டார் என்றும், இவர் திருமணம் செய்துகொண்ட நபரின் பெயர் டாங் என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 28 அன்று விளக்கமளித்த உள்ளூர் அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தனர்.

அவர்கள் அவரை யாங் என்ற குடும்பப் பெயரால் பெயரை வைத்தே குறிப்பிட்டு வந்தனர். மேலும் அவர் மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

மேலும், தம்பதியருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தபோதிலும் இதற்கு முன்னதாக இருந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு சட்டங்களின்படி இது விதி மீறல்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், குறிப்பிட்ட பெண்ணுக்கு அதிகாரிகள் உதவும் வகையில் ஒன்றும் செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. பொதுமக்களின் அழுத்தத்திற்கு பிறகே, குடும்பத்தினரிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த செவ்வாயன்று, குறிப்பிட்ட பெண்ணின் உண்மையான பெயர் “சியாவோஹுவாமி (Xiaohuamei)” என்றும் இவர் தென்மேற்கு யுனான் மாகாணத்தைச் சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சியாவோஹுவாமியின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும், அவருக்கு திருமணமாகி பிறகு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிந்தவுடன் 1996ல் விவாகரத்து நடைபெற்றது என்றும் அந்த கிராமத்தினர் கூறினர்.

சியாவோஹுவாமியின் பெற்றோர் இறப்புக்குப் முன்னதாக , மிஸ்.சாங் என்று அழைக்கப்படும் மற்றொரு கிராமவாசியிடம் இவரை கவனித்துக்கொள்ள சொல்லப்பட்டது என்றும் மேலும் ஜியாங்சு மாகாணத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறவும், வேறு ஒரு திருமணம் நடத்த உதவுமாறு கேட்டுக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

தானும் சியாவோஹுவாமேயும் தொடர் வண்டிபயணத்தை மேற்கொண்டதாகவும், அப்போது ஜியாங்சு வந்தபோது சியாவோஹுவாமியை காணவில்லை என்றும், இது சம்பந்தமாக காவல்துறையிடமோ அவர் பெற்றோரிடமோ சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இணையதள செயல்பாட்டாளர்கள் “கடத்தல் நடந்தது என்பதை சாதுரியமாக கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கடந்த வியாழன், சீன அதிகாரிகள் சாங் மற்றும் அவரது கணவர் மீது ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் மீது “சட்டவிரோத விரோதமாக ஒருவரை நடத்தியுள்ளதாக ” வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் என்ன?

இந்த வழக்கில் நடைபெற்றுள்ள முன்னேற்றத்தை அடுத்து, இணையதள செயற்பாட்டாளர்கள் வரவேற்று உள்ளனர் என்றும், ஆனால் அதிகாரிகளின் அளித்துள்ள விளக்கங்கள் குறித்து சந்தேகமும் எழுப்பியுள்ளனர்.

மேலும், பொதுமக்களின் அழுத்தத்திற்குப் பிறகுதான் இந்த பிரச்னையை அதிகாரிகள் கையில் எடுத்தனர் என்றும், அவர்களின் பொறுப்பை சரியாக செய்யவில்லை என்றும் விமர்சித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போதைய கணவரால் அவர் கொடுமை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டையோ அல்லது குறிப்பிட்ட பெண் எட்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த சூழ் நிலையைப் பற்றிய கேள்விகளுக்கோ அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

இந்தப் பிரச்னை சீன கிராமப்புறங்களில் அதிக அளவில் ஆட்கடத்தல் நடைபெற்று வருவதை சுட்டிக் காட்டுகிறது. மேலும் இணையதள செயற்பாட்டாளர்கள் இது போன்று நடக்கக்கூடிய பல ஆட்கடத்தல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக விமர்சகர் ஒருவர் கூறுகையில், சீனாவில் பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னையை இது வெளிக்கொண்டு வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் வெய்போ சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் எழுதி இருந்ததில் “நான் அமைதியாக, நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாமானியன். இந்தப் பெண்கள் மீட்கப்படுவார்கள் என்றும், குறிப்பிட்ட பெண்களை வன்முறைக்கு உட்படுத்தியவர்கள் தகுந்த தண்டனையைப் பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »