சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில், பெண்களின் அந்தரங்க படங்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருவதை, பிபிசியின் கள விசாரணை கண்டறிந்துள்ளது. இது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், மிரட்டவும், அவமானப்படுத்தவும் பகிரப்படுகிறது.
எச்சரிக்கை: இந்த கட்டுரை பாலியல் தொடர்பான விஷயங்களை உள்ளடக்கியது.
ஒரே விநாடியில், சாரா தனது நிர்வாணப் படம் டெலிகிராம் செயலியில் வெளியாகி, பகிரப்பட்டிருப்பதை அறிந்தார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் அதில் இணைக்கப்பட்டிருந்தன; அவரது அலைபேசி எண்களும் இருந்தன. அடையாளம் தெரியாத ஆண்கள் மேலும் புகைப்படங்களை கேட்டு, அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டனர். “என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் அவர்கள் நினைக்க வைத்தனர். ஏனென்றால், நான் என்னுடைய அந்தரங்கப் படங்களை பகிர்ந்தேன் (அவர்கள்நினைக்கிறார்கள்). ஒரு பெண்ணாக எனக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது போல் இருந்தது”,என்று அவர் கூறுகிறார்.
சாரா (அவரது நிஜ பெயரல்ல) ஒரு நபருடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார். ஆனால் அது,18,000 பின்தொடர்பவர்கள் கொண்ட ஒரு டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டது. அவர்களுள் கியூபாவின் ஹாவனா நகரிலுள்ள அவரது பகுதிகளிலிருந்து இருப்பவர்கள். இப்போது வீதிகளில் இருக்கும் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது நிர்வாண புகைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று அவர் அஞ்சுகிறார். “நான் வெளியில் செல்ல விரும்பவில்லை. என் நண்பர்களுடன் நான் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் உண்மை”. என்கிறார்.
இதில் அவர் மட்டும் இல்லை. டெலிகிராம் செயலியை பல மாதங்களாக ஆய்வு செய்ததில், குறைந்தப்பட்சம் 20 நாடுகளில், ரகசியமாகப் படப்பிடித்த அல்லது திருடப்பட்ட அல்லது தவறுதலாக வெளியான ஆயிரக்கணக்கான படங்களை,பல குழுக்கள் பகிர்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை செயலி சரிசெய்கிறது என்பதற்கு மிக குறைந்த ஆதாரமே உள்ளது.
கியூபாவில்இருந்து ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து உள்ள நிகர், தனது புதியவாழ்க்கை வாழப் பழகிக்கொண்டிருக்கிறார்.
அவர் அஜர்பைஜான் நாட்டைச் சேர்ந்தவர். ஆனால், தனது தாய்நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த 2021 ஆண்டு, அவர் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் காணொளி, அவரது குடும்பத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு, டெலிகிராமில் உள்ள குழுவுக்கு பகிரப்பட்டது.
“என் அம்மா அழத்தொடங்கிவிட்டார். ஒரு காணொளி எனக்கு அனுப்பப்பட்டது என்று கூறினார். நான் நொறுங்கிப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப் போனேன்”, என்றார்.
இந்த காணொளி 40,000 பேர் கொண்ட ஒருகுழுவில் பகிரப்பட்டது. இதில், நிகரின், தற்போது முன்னாள் கணவரின் முகம்மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது முகம் தெளிவாக தெரிகிறது.
அஜர்பைஜான் அதிபரை கடுமையாக விமர்சிக்கும் விமர்சகரான தனது சகோதரரை மிரட்டவே, நிகரின் முன்னாள் கணவர் அவரை ரகசியமாக படம் பிடித்திருக்கிறார் என்று அவர் நம்புகிறார். அவரது சகோதரர் தனது புரட்சியை நிறுத்தாவிட்டால், டெலிகிராமில் இந்த காணொளி பகிரப்படும் என்று அவரது தாய்க்கு கூறப்பட்டது.
“உங்களை ஓர் அவமானமாக பார்ப்பார்கள். திருமணமானவர் என்று யார் அக்கறை எடுத்துகொள்வார்கள்? என்று கேட்கிறார் நிகர்.
இந்த காணொளி குறித்து முன்னாள் கணவரிடம் அவர் விசாரித்து இருக்கிறார். ஆனால், தான் அதை செய்யவில்லை என்று மறுத்துள்ளார். அவரிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை.
நிகர் இன்னும் அதிலிருந்து மீண்டு, தனது வாழ்வை முன் நடத்திச் செல்ல போராடிக்கொண்டு இருக்கிறார். “என்னால் மீளமுடியவில்லை. நான் வாரத்திற்கு இரண்டு முறை மனநல ஆலோசகரைப் பார்க்கிறேன். அவர்கள் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறுகின்றனர். என்னால் மறக்க முடியுமா என்று அவர்கள் கேட்கின்றனர். நான் முடியாது என்கிறேன்”, என்று கூறுகிறார்.
டெலிகிராம் செயலியில் நிகர் மற்றும் சாராவின் புகைப்படங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை. அவர்களின் அனுபவம் மிகவும் வேறாக இருந்தது.
ரஷ்யா முதல் பிரேசில் வரை, கென்யா முதல் மலேசியா வரை, டெலிகிராம் செயலியில் 18 சேனல்களையும், 24 குழுக்களையும் பிபிசி கண்காணித்தது. அதிலுள்ள மொத்தம் சப்ஸ்கிரைபர்கள் 2 மில்லியன் பேர்.
வீட்டு முகவரி முதல் பெற்றோர்களின் அலைபேசி எண்கள் வரையிலான தனிப்பட்ட விவரங்கள், தெளிவான புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளன.
இந்த குழுக்களின் நிர்வாகிகள் தானியங்கி கணக்கிற்கு தங்களின் சக மாணவர்கள், ஊழியர்கள், முன்னாள் இணையர்களின் அந்தரங்கப் படங்களைப் பகிருமாறு தங்கள் குழு உறுப்பினர்களைக் கேட்பதை நாங்கள் கவனித்தோம். அதனால், அனுப்புநரின் அடையாளம் தெரியாமல் அவை வெளியிடப்படுக்கின்றன.
உலகம் முழுவதும் ஒரு பில்லியனின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது டெலிகிராம் செயலியில் உள்ளனர் என்று டெலிகிராம் கூறுகிறது. அதில் தனிநபர் தரவுகள் குறித்த விஷயங்கள் காரணமாக பலர் ஈர்க்கப்பட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் ஆப்பை விட்டு வெளியேறி, டெலிகிராம் செயலிக்கு மாறினர். இதற்கு காரணம், வாட்ஸ் ஆப் செயலி தனது தனிநபர் விதிமுறைகளை மாற்றியதுதான்.
ஊடக தணிக்கை உள்ளநாடுகளில் ஜனநாயக ஆதரவாளர்களிடையே டெலிகிராம் நீண்ட காலமாக பிரபலமாக உள்ளது. அதில், பயனர்கள் தங்கள் பெயர் அல்லது தொலைபேசி எண்ணைப் பகிராமல் பதிவிடலாம். மேலும், 200,000 உறுப்பினர்கள் வரை பொது அல்லது தனிப்பட்ட குழுக்களை உருவாக்கலாம் . மேலும், எண்ணற்ற நபர்களுக்கு ஒளிபரப்பு கூடிய சேனல்களை உருவாக்கலாம்.
தனியுரிமைக்கான டெலிகிராமின் பெயர் பெற்று இருந்தாலும், “சீக்ரட் சாட்” (secret chat) விருப்பத் தேர்வில் மட்டுமே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது. இது அக்குறுஞ்செய்திகளை பரிமாற்றிக் கொள்ளும் இருவர் மட்டுமே அதனைப் பார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. சிக்னல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பாதுகாப்பான சாட் செயலி பயன்பாடுகளில் இது டிஃபால்ட் செட்டிங் (default setting) ஆக உள்ளது.
மற்ற தளங்களில்இருந்து தடை செய்யப்பட்டவர்கள் உட்பட, குறைவான ஒழுங்குபடுத்தப்பட்ட தளத்தை தேடும் பயனர்களையும் இந்த தளம் ஈர்க்கிறது.
“டெலிகிராம் மற்றும் அதன் உரிமையாளரின் கூற்றுப்படி, அவர்கள் பயனர்களை தணிக்கை செய்ய விரும்பவில்லை”, என்று கணினி மயமான உரிமைகள் குழுவான அக்ஸஸ் நவ்-வின் (AccessNow) தொழில் நுட்ப சட்ட ஆலோசகராக நடாலியா கிராபிவா கூறுகிறார்.
ஆனால், டெலிகிராமின் இந்த லேசான அல்லது மிதமான அணுகுமுறை, அந்தரங்கப் படங்களை வெளியிடுதல் மற்றும் பகிர்வுக்கான புகலிடமாக இந்த செயலி மாறியுள்ளது என்பதை எங்களின் ஆய்வு காட்டுகிறது.
டெலிகிராமில் அந்தரங்கப் படங்களைச் சம்மதிக்காத பகிர்வைச் கையாளுவதற்கான பிரத்யேகக் கொள்கை இல்லை, ஆனால் அதன் சேவை விதிமுறைகள் பயனர்கள் “பொதுவாகக் காணக்கூடிய டெலிகிராம் சேனல்கள், போட்கள் போன்றவற்றில் சட்டவிரோத ஆபாச உள்ளடக்கத்தை இடுகையிட வேண்டாம்” என்று ஒப்புக்கொள்ள வைக்கிறது.
டெலிகிராமில் அந்தரங்கப் படங்களைச் அனுமதியின்றி பகிரப்படும் பிரச்னைக்கு தீர்வு காண பிரத்யேகக் கொள்கை எதுவும் இல்லை. ஆனால், பயனர்களை “பொதுவாகக் காணக்கூடிய டெலிகிராம் சேனல்கள், போட்கள் (Bots) போன்றவற்றில் சட்டவிரோதமான, ஆபாசமான செய்திகளை பதிவு செய்ய வேண்டாம்”, என்று அதன் சேவை விதிமுறைகளை ஒப்புக்கொள்ள வைக்கிறது.
மேலும், இது பொது மற்றும் தனிப்பட்ட குழுக்களும், சேனலகளும், பயனர்களும் ஆபாசமான பகிர்வு குறித்து புகாரளிக்கக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.
டெலிகிராம் தனதுகொள்கைகளை எவ்வளவு கடுமையாகச் செயல்படுத்தியது என்பதைச் சோதித்து, 100 ஆபாசப் படங்கள் என ஆப்ஸ்-இன்-ஆப்அறிக்கை வசதி மூலம் கண்டறிந்து புகாரளித்தோம். ஒரு மாதம் கழித்து, அதில் 96 படங்கள் அப்படியே இருந்தது. மேலும், நான்கு படங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவற்றை கொண்டுள்ள குழுக்களை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.
மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்தக் குழுக்களை நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது, ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு பயனர் கணக்கு, குழந்தைகளை பாலியல் துன்புறுத்த96ல் செய்த காணொளிக்கள் அடங்கிய கோப்பை, ஒரு காபியின் விலையை விடக் குறைவாக எங்களுக்கு விற்க முயற்சி செய்தது.
நாங்கள் அதை டெலிகிராம் மற்றும் பெருநகர காவல்துறையிடம் புகாரளித்தோம், ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அந்த பதிவும் சேனலும் அப்படியே இருந்தன. நாங்கள் டெலிகிராம் ஊடகம் குழுவைத் தொடர்பு கொண்ட பிறகே அந்த கணக்கு நீக்கப்பட்டது.
தளர்வான தணிக்கை முறை இருந்த போதிலும், டெலிகிராம் குறிப்பிட்ட சில பகிர்வுகள், பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
எங்களுக்கு அனுப்பபட்ட காணொளிக்கள் இருக்கும் காரணத்தால், ஆப்பிள் நிறுவனம் டெலிகிராமை அதன் ஆப் ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு நீக்கியது. அதன் பின், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் படங்கள் குறித்து டெலிகிராம் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த தளத்தில் பெருமளவு ஐஎஸ் அமைப்பின் உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகளை நீக்க, 2019 ஆம் ஆண்டு, ஈ.யூ குற்றவியல் நிறுவனமான யூரோபால் (Europol) உடன் இணைந்து செயல்பட்டது.
“டெலிகிராம் தீவிரவாதம் தொடர்பான உள்ளடக்கப் பதிவுகள் அல்லது மிகவும் தீவிரமான அரசியல் உள்ளடக்கங்களை நீக்க முடியும்; அச்செயலி அத்தகையவற்றை நீக்குகிறது என்பதை நாங்கள் அறிவோம்,” என்கிறார் ஆக்ஸ்போர்டு இணையம் இன்ஸ்டிட்யூட்டின் (Oxford Internet Institute) ஆராய்ச்சியாளர் மருத்துவர் அலியாக்சாண்டர் ஹெராசிமென்கா (Aliaksandr Herasimenka).
ஆனால், அந்தரங்கப் படங்களை நீக்குவது என்பது அதன் முக்கிய நோக்கமாக இல்லை என்று தெரிகிறது. பெயர் வெளியிட விரும்பாத டெலிகிராமின் உள்ளடக்க மதிப்பிட்டாளர்கள் ஐந்து பேரிடம் நாங்கள் பேசினோம். தானியங்கி தொழில்நுட்ப அமைப்பு மூலம் தங்களுக்கு பயனர்களிடம் இருந்து புகார்கள் வரும் என்று எங்களிடம் கூறுகின்றனர். அதில், அவர்கள் ஸ்பேம் மற்றும் ‘ஸ்பேம் இல்லை’ என்று இரண்டாகப் பிரிப்பார்கள் என்று கூறுகின்றனர்.
அவர்கள் அந்தரங்கப் படங்களைத் தீவிரமாக தேட மாட்டார்கள் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு அறிந்தவரை, டெலிகிராம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence ) பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர். இதனால், பெண்கள் தாங்களே முன்வந்து சில முயற்சிகளை எடுக்கின்றனர்.
ஜோன்னாவுக்கு 13 வயதாக இருந்தபோது, ஒரு மோசமான மலேசிய டெலிகிராம் குழுவில், அவரது நிர்வாணப் புகைப்படம் வெளியானதை கண்டுபிடித்தார்
அவர் அந்த குழுவில் சேர ஒரு போலியான டெலிகிராம் கணக்கை உருவாக்கினார், அங்கு அவர் அடையாளம் தெரியாமல் அவரது நிர்வாண படங்களைத் தேடி அவற்றைப் புகார் அளித்தார். அவர் தான் கண்டுபிடித்ததை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
தீவிரமாக ஊடகங்கள் அளித்த அழுத்தத்தின் மத்தியில், அந்த குழு இறுதியில் மூடப்பட்டது. ஆனால் எங்கள் ஆய்வின் போது, குறைந்தது இரண்டு போலியான குழுக்கள் ஒரே மாதிரியான படங்களைப் பகிர்வதைக் கண்டறிந்தோம்.
“சில நேரங்களில் எதுவும் செய்யமுடியாத உதவியற்றவராக உணர்வீர்கள். ஏனென்றால் இந்தக் குழுக்களை நீக்க நாங்கள் பல முயற்சிகள் செய்ய முயற்சித்தோம். ஆனால் அவை மீண்டும் பகிரப்படுகிறது. இதனால், உண்மையில் இதற்கு ஒரு முடிவு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஜோன்னா கூறுகிறார்.
டெலிகிராம் எங்கள் நேர்காணல் செய்ய மறுத்துவிட்டது. ஆனால் ஒரு அறிக்கையில், அது பொது தளங்களை முன்கூட்டியே கண்காணிக்கிறது என்றும், அதன் சேவை விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தைப் பற்றிய பயனர் புகார்களை விசாரிக்கிறது என்றும் கூறியுள்ளது அனுமதியின்றி மக்களின் அந்தரங்கப் படங்களை அதன் தளங்களில் வெளியிடுவது அனுமதிக்கப்படுமா அல்லது அவை நீக்கப்படுமா என்பதை டெலிகிராம் உறுதியாக எதுவும் கூறவில்லை.
டெலிகிராமில் சில பொதுச் சேனல்களில் வெளியிடப்பட்ட முதலீட்டுடன் கூடிய விளம்பரங்கள் – நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) இந்த தளத்தை பணமாக்க விரும்புகிறார் என்பதைக் குறிக்கிறது
இது டெலிகிராம் மற்றும் அதன் நிறுவனர் மீது அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக போட்டியாளர்களுடன் ஒத்துப்போகிறது. இது நெருக்கமான படங்களைப் பகிர்வதற்கு எதிரான கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியது.
இந்த நிறுவனம் புதிய சந்தைகளுக்குச் சென்று வருவாயை ஈட்டத் தொடங்கும் போது, அதிக கட்டுப்பாட்டை கொண்ட நிலையை எவ்வளவு காலம் எதிர்க்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
டெலிகிராமில் தங்களின் அந்தரங்கப் படங்களைப் பகிர்வதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஒரு மாற்றம் விரைவில் வரவேண்டும்.
பிபிசி உலகச் சேவை டிஸ் இன்ஃபார்மேஷன் குழு நடந்திய ஆய்வு (Investigation by the BBC World Service Disinformation team.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com