மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார் புதின். சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரேனின் ராணுவ கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவுகள் மீது ரஷ்யா முதலில் தாக்குதலை தொடங்கியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீஃப்-ல் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமானநிலையம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த விமான தளங்களுள் ஒன்று எனவும், கீஃப்,ட்னிப்ரோ, கார்கிஃப், மரியுபோல் ஆகிய பெருநகரங்களில் உள்ள ராணுவ தலைமையகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றிலும் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, யுக்ரேன் காவல்துறை தெரிவித்துள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்ததைத் தொடர்ந்து, யுக்ரேன் தலைநகர் கீஃபில் பெரும்பாலான மக்கள் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர்.
பெரும்பாலானோர் பேருந்துகள் மூலம் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். மேலும், பலர் கார்களிலும் நகரத்தை விட்டு வெளியேற முயற்சித்ததால், பல கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
விமானப்படை தாக்குதல் நடைபெறுவதை உணர்த்தும் எச்சரிக்கை ஒலி கீஃப் முழுவதும் ஒலித்ததைத் தொடர்ந்து மக்கள் மெட்ரோ நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர் தங்கள் உடைமைகளையும் கொண்டு வந்தனர்.
ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு உலங்கூர்தியை சுட்டு வீழ்த்தியதாக, யுக்ரேன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. “அமைதியாக இருங்கள். யுக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என, யுக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
யுக்ரேன் நகரங்களை தாங்கள் தாக்கவில்லை என்றும், விமானத் தாக்குதல் தடுப்பு வசதிகள், துல்லியத் தாக்குதல் நடத்தும் விமானப் படை ஆயுதங்கள் போன்ற ராணுவ இலக்குகளையே தாக்குவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழன் அன்று, ஜி7 தலைவர்களைச் சந்திப்பதாகவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் “ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும்” என்றும் கூறிய அவர், “யுக்ரேனுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவையும் உதவியையும் வழங்குவோம்,” என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com