- பால் கிர்பி
- பிபிசி நியூஸ்
பல மாதங்களாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் யுக்ரேனைத் தாக்கும் திட்டத்தை மறுத்து வந்தார். ஆனால் பிப்ரவரி 23ஆம் தேதி அவர் ரஷ்யாவின் “சிறப்பு ராணுவ நடவடிக்கை” பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தொலைக்காட்சியில் தோன்றி நேரடியாகவே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட பிறகு யுக்ரேன் தலைநகர் கீஃப் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு, ஷெல் குண்டு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
‘அமைதியை பேணுவதற்காக’ என்று கூறி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிழக்கு பிராந்தியங்களுக்குள் துருப்புக்கள் செல்ல உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு,புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யா குறைந்தபட்சம் 2,00,000 துருப்புக்களை யுக்ரேனின் எல்லைகளுக்கு அருகில் நிறுத்தியுள்ளது.
மேலும் அதன் சமீபத்திய நடவடிக்கை புதிய படையெடுப்பின் முதல் அடியை குறிக்கிறது.
அடுத்து ஏற்படும் நிகழ்வுகள் ஐரோப்பாவின் முழு பாதுகாப்பு கட்டமைப்பையும் பாதிக்கலாம்.
ரஷ்ய துருப்புகள் எங்கு அனுப்பப்படுகின்றன?
2014இல் ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்தபோது, அதிபர் புதினின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் கிழக்கே உள்ள பெரிய பகுதிகளைக் கைப்பற்றினர் . கூடவே அவர்கள் யுக்ரேனின் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர்.
சர்வதேச மின்ஸ்க் சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும் மோதல் தொடர்கிறது. எனவே ரஷ்ய அதிபர் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளுக்கு துருப்புக்களை அனுப்புவதாகக் கூறுகிறார்.
அதிபர் புதின் ரஷ்ய படையினரை ‘அமைதி காப்புப் படையினர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைத்ததை ஐநா பொதுச்செயலர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புக்கும் இடையே இருக்கும், 4 கோடியே 40 லட்சம் மக்கள் வசிக்கும் யுக்ரேன் மீது உடனடியான புதிய படையெடுப்பை ரஷ்யா நடத்தியிருப்பதாக மேற்கு நாடுகள் நம்புகின்றன.
அதன் முன்னோட்டமாகவே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்கில் ரஷ்ய பீரங்கிகள் வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கில் போர் நிறுத்தப்படாவிட்டால், மேலும் ரத்தக்களறிக்கு யுக்ரேன் பொறுப்பேற்க நேரிடும் என்று அதிபர் புதின் எச்சரித்தார்.
ஆனால் ஏற்கெனவே தொடர்ச்சியான மோசடி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்று ரஷ்ய தாக்குதலுக்கு சாக்குப்போக்காக பயன்படுத்தப்படலாம்.
யுக்ரேனில் புதினுக்கு என்ன பிரச்னை?
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய யுக்ரேனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. யுக்ரேன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும், அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார்.
30 நாடுகளின் தற்காப்புக் கூட்டணியான நேட்டோவுடன் அது இணையாது என்றும், யுக்ரேன் ராணுவ விலக்கலை மேற்கொண்டு, நடுநிலை நாடாக மாற வேண்டும் என்றும் மேற்கத்திய நாடுகள் மற்றும் யுக்ரேனிடம் இருந்து புதின் உத்தரவாதம் கோரியுள்ளார்.
முன்னாள் சோவியத் குடியரசான யுக்ரேன், ரஷ்யாவுடன் ஆழமான சமூக மற்றும் கலாசார உறவுகளைக் கொண்டுள்ளது, மேலும் ரஷ்ய மொழி அங்கு பரவலாக பேசப்படுகிறது. ஆனால் 2014 இல் ரஷ்யா படையெடுத்ததிலிருந்து அந்த உறவுகள் சிதைந்துள்ளன.
2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் ரஷ்ய சார்பு அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது யுக்ரேனை ரஷ்யா தாக்கியது. அப்போதிலிருந்து கிழக்கில் நடந்த போர் 14,000 க்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டுள்ளது.
கிளர்ச்சிப் பகுதிகளை அங்கீகரிப்பது ஏன் ஆபத்தானது?
இதுவரை மக்கள் குடியரசுகள் என்று அழைக்கப்படும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவை ரஷ்ய ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்றன.
அந்த பகுதிகளை சுதந்திரமாக அங்கீகரித்த புதினின் ஆணையின் கீழ், ரஷ்ய துருப்புக்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டதாக முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் ராணுவ தளங்களையும் உருவாக்க முடியும்.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான போர் நிறுத்த மீறல்களைக் காணும் ஒரு பகுதியில் ரஷ்ய துருப்புக்களைக் குவிப்பதன் மூலம், வெளிப்படையான போரின் ஆபத்து மிக அதிகமாகிறது.
மின்ஸ்க் சமாதான உடன்படிக்கையின் கீழ் இரண்டு கிளர்ச்சிப் பகுதிகளும் யுக்ரேனுக்குள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருக்கும். ஆனால் புதினின் நடவடிக்கை அதை நடக்கவிடாமல் தடுக்கிறது.
இரண்டு கிளர்ச்சி அரசுகளும் தாங்கள் வைத்திருக்கும் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மீது மட்டும் உரிமை கொண்டாடாமல், யுக்ரேனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளையும் விரும்புவதுதான் நிலைமையை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது.
“நாங்கள் அவர்களை அங்கீகரித்துள்ளோம். எனவே இதன் பொருள் அவர்களின் எல்லா நிறுவக ஆவணங்களையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம் என்பதுதான்,” என்று ரஷ்ய அதிபர் கூறினார்.
கிழக்கில் யுக்ரேன் “இனப்படுகொலை” செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளுடன் ரஷ்யா ஏற்கனவே போருக்கான களத்தை தயார் செய்துள்ளது.
கிளர்ச்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகளில் 7,00,000க்கும் அதிகமான பாஸ்போர்ட்டுகளை அது வழங்கியுள்ளது. எனவே எந்தவொரு செயலும் அதன் சொந்த குடிமக்களைப் பாதுகாப்பதாக நியாயப்படுத்தப்படலாம்.
ரஷ்யாவால் எந்த கட்டம் வரை செல்ல முடியும்?
அதிபர் புதின் கிழக்கில் சமாதான உடன்படிக்கைகளை மீறுவதுடன் நிறுத்திக்கொள்ளக்கூடும். தான் விரும்பியதைப் பெறவில்லை என்றால் “ராணுவ-தொழில்நுட்ப” நடவடிக்கைகள் பற்றி மட்டுமே அவர் கடந்த காலத்தில் பேசியுள்ளார். “ரஷ்ய படையெடுப்பு இல்லை” என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் ராஜீய தீர்வுக்கான வாய்ப்புகள் சிறப்பாக இல்லை. அவர் மேலும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்று மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.
“28 லட்சம் அப்பாவி மக்கள் வசிக்கும் யுக்ரேனின் தலைநகரான கீவ்வை ரஷ்யா குறிவைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,”என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்:
Your device may not support this visualisation
பெலாரூஸ்-யுக்ரேன் எல்லைக்கு அருகிலுள்ள போல்ஷோய் போகோஃப் விமானநிலையத்தில் ரஷ்யப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யப் படைகள் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கில் இருந்து யுக்ரேன் முழுவதும் ஊடுருவி அதன் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைஅகற்ற முயற்சி செய்யலாம்.
அவர்கள் கிரைமியா, பெலாரூஸ் மற்றும் யுக்ரேனின் கிழக்கு எல்லைகளைச் சுற்றி துருப்புக்களை அணி திரட்ட முடியும்.
ஆனால் யுக்ரேன் சமீபத்திய ஆண்டுகளில் தனது ஆயுதப்படைகளை வலுப்படுத்தியுள்ளது. கூடவே ரஷ்யா விரோத போக்குள்ள மக்களை எதிர்கொள்ளும்.
திரட்டி வைக்கப்பட்டுள்ள 18-60 வயதுடைய அனைவரையும் ராணுவம் அழைத்துள்ளது.
அமெரிக்க உயர்மட்ட ராணுவ அதிகாரி மார்க் மில்லி, ” ரஷ்ய படைகளின் அளவை பார்க்கும்போது , அடர்த்தியான நகர்ப்புறங்களில் மோதலுடன் கூடிய “கொடூரமான” சூழ்நிலையை அது குறிக்கிறது,” என்றார்.
ரஷ்ய அதிபருக்கு வேறு மாற்று வழிகளும் உள்ளன. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதி அல்லது யுக்ரேனிய துறைமுகங்களை முற்றுகையிடுவது அல்லது அணு ஆயுதங்களை அண்டை நாடான பெலாரூஸ் நோக்கி நகர்த்தலாம்.
சைபர் தாக்குதல்களையும் நடத்தலாம். யுக்ரேனிய அரசு வலைதளங்கள் ஜனவரியில் செயலிழந்தன. பிப்ரவரி நடுப்பகுதியில் யுக்ரேனின் இரண்டு பெரிய வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டன.
மேற்கத்திய நாடுகள் என்ன செய்ய முடியும்?
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மேற்குலகம் கூறுகிறது. மேலும் இது யுக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ கூட்டரெஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், யுக்ரேனுக்கு போர் படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று நேட்டோ நட்பு நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன. அதற்கு பதிலாக அவர்கள் யுக்ரேனுக்கு ஆலோசகர்கள், ஆயுதங்கள் மற்றும் கள மருத்துவமனைகளை வழங்கியுள்ளனர்.
எனவே ரஷ்யாவிற்கு பொருளாதாரத் தடைகளை விதிப்பதே முக்கிய பதிலடியாக இருக்கும்.
• ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் முக்கிய முதலீடான ரஷ்யாவின் நிறைவு செய்யப்பட்ட Nord Stream 2 எரிவாயுக் குழாய்க்கான அனுமதியை ஜெர்மனி நிறுத்தியுள்ளது.
• கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுதந்திர நாடுகளாக நாடாளுமன்றத்தில் அங்கீகரித்த ரஷ்யாவின் “சட்டவிரோத முடிவை” எதிர்த்து பரந்த பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.
• மேற்கத்திய நிதி நிறுவனங்களில் இருந்து ரஷ்யாவின் அரசை துண்டித்து, உயர்மட்டத்தில் இருப்பவர்களை குறிவைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
• ஐந்து பெரிய ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று பில்லியனர்களை பிரிட்டன் குறிவைக்கிறது.
பெரிய அளவிலான தடைகள் விதிப்பது குறித்தும் வல்லரசுகள் பரிசீலித்து வருகின்றன.
ரஷ்யாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழில்களை அமெரிக்கா பார்க்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், நிதிச் சந்தைகளுக்கான ரஷ்ய அணுகலில் கவனம் செலுத்துகிறது .
“ரஷ்யாவும் அதன் ஆதரவாளர்களும் எங்கும் மறைந்துகொள்ள முடியாது. ரஷ்ய வணிகம், டாலர் மற்றும் பவுண்டை அணுகுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,” என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.
சர்வதேச ஸ்விஃப்ட் கட்டண முறையிலிருந்து ரஷ்யாவின் வங்கி முறையைத் துண்டிப்பதே இறுதிப் பொருளாதார வெற்றியாக இருக்கும். ஆனால் அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களை மோசமாக பாதிக்கும்.
இதற்கிடையில், பால்டிக் நாடுகள் மற்றும் போலந்தில் 5,000 நேட்டோ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4,000 பேர் ரூமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படலாம்.
புதினுக்கு என்ன வேண்டும்?
நேட்டோவுடனான தனது உறவை யுக்ரேன் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் ரஷ்யா, மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
முதலில், நேட்டோ மேலும் விரிவடையாது என்ற சட்டபூர்வ உறுதிமொழியை தர அதிபர் புதின் விரும்புகிறார். “யுக்ரேன் ஒருபோதும் நேட்டோவில் உறுப்பினராகாமல் இருப்பதை உறுதி செய்வது எங்களுக்கு முற்றிலும் கட்டாயமாகும்” என்று ஏற்கெனவே ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்கே ரியாப்கோஃப் கூறினார்.
“இந்த விஷயத்தில் ரஷ்யாவுக்கு பின்வாங்க வேறு வாய்ப்பே இல்லை – அவர்கள் முன்னேறி வரும்வரை நாங்கள் வெறுமனே இருப்போம் என்று நினைக்கிறார்களா?” என்று புதின் கடுமையாகவே கூறினார்.
யுக்ரேனின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மதிக்கும் ஒப்பந்தத்தில் 1994இல் ரஷ்யா கையெழுத்திட்டது.
ஆனால் கடந்த ஆண்டு அதிபர் புதின் ரஷ்யர்களையும் யுக்ரேனியர்களையும் “ஒரே நாட்டு மக்கள்” என்று விவரித்திருந்தார்.
நவீன யுக்ரேன், கம்யூனிச ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என்று இப்போது புதின் கூறுகிறார். 1991ஆம் ஆண்டு டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் சரிவை “வரலாற்றுபூர்வ ரஷ்யாவின் சிதைவு” என்றவாறு அவர் பார்க்கிறார்.
யுக்ரேன் நேட்டோவுடன் இணைந்தால், அந்த கூட்டணி கிரைமியாவை மீண்டும் கைப்பற்ற முயற்சி செய்யலாம் என்றும் அதிபர் புதின் வாதிட்டார்.
EPA
Let’s imagine Ukraine is a Nato member and starts these military operations. Are we supposed to go to war with the Nato bloc? Has anyone given that any thought? Apparently not
நேட்டோ “ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே தாக்கும் ஆயுதங்களை” நிலைநிறுத்தக்கூடாது என்பதும், 1997 முதல் கூட்டணியில் இணைந்த உறுப்பு நாடுகளிலிருந்து படைகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்பை அகற்றவேண்டும் என்பதும் அவரது மற்ற முக்கிய கோரிக்கைகளாகும்.
அதாவது மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக்ஸ் ஆகியவை இதில் அடங்கும். உண்மையில் நேட்டோ அதன் 1997க்கு முந்தைய எல்லைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
நேட்டோ என்ன சொல்கிறது?
நேட்டோ புதிய உறுப்பினர்களுக்கான திறந்த-கதவு கொள்கையுடனான தற்காப்பு கூட்டணியாகும். மேலும் தனது 30 உறுப்பு நாடுகளில் மாற்றம் இருக்காது என்பதில் அது உறுதியாக உள்ளது.
“தெளிவான, சாத்தியமான காலவரையறைகளுக்கு உட்பட்ட முறையில்” நேட்டோவில் இணையும் கோரிக்கையை யுக்ரேன் அதிபர் விடுத்துள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு அது நடக்க வாய்ப்பில்லை என்பதை ஜெர்மனியின் ஆட்சித்துறைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எந்தவொரு தற்போதைய நேட்டோ நாடும் தனது உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நேட்டோ “கிழக்கே ஒரு அங்குலம் கூட விரிவடையாது” என்று 1990ல் மேற்குலகம் உறுதியளித்தது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை என்று ரஷ்ய அதிபர் கூறுகிறார்.
இது சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முந்தைய நிலைமை. இருப்பினும், அப்போதைய சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேஃபுக்கு அளித்த வாக்குறுதியானது மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட ஜெர்மனியின் பின்னணியில் கிழக்கு ஜெர்மனியை மட்டுமே குறிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கோர்பச்சேவ் பின்னர் “நேட்டோ விரிவாக்க தலைப்பை விவாதிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
ராஜீய வழி இருக்கிறதா?
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சருடன் திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளை பிரான்சும் அமெரிக்காவும் ரத்து செய்துவிட்டதால், இப்போதைக்கு வழி இருப்பதுபோலத்தெரியவில்லை.ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு திறந்திருப்பதாகக் கூறுகின்றன.
எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் கிழக்கில் போர் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த நிலையில், குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை கட்டுப்படுத்துவது மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடர்பான புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
ஆனால், அமெரிக்க அணு ஆயுதங்கள் அனைத்தும் தங்கள் நாட்டுப் பகுதிகளுக்கு அப்பால் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்பியது.
ரஷ்யாவில் இரண்டு, ரூமேனியா மற்றும் போலந்தில் இரண்டு ஏவுகணைத் தளங்களில் பரஸ்பர சோதனைகளை மேற்கொள்ள முன்மொழியப்பட்ட யோசனைகளில் “வெளிப்படையான திட்டம்” இருக்க வேண்டும் என்பதற்கு சாதகமாக ரஷ்யா இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com