Press "Enter" to skip to content

யுக்ரேன் vs ரஷ்யா: புதின் பதவியிழப்பார், ஸெலென்ஸ்கி தப்பியோடுவார் – இந்த போர் முடிவதற்கான 5 சாத்தியங்கள் என்னென்ன?

  • ஜேம்ஸ் லேண்டேல்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் போர் எப்படி முடியக்கூடும் என்பதை யூகிப்பது கடினம்தான். போரின் இழப்புகள், இடம் பெயர்ந்தவர்கள், போரை நிறுத்துவதற்கான குரல்கள் எனப் பலவும் இப்போது உலகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இவற்றுக்கு இடையே இந்தப் போரின் முடிவு எப்படியிருக்கும் என்பது குறித்த சில சாத்தியங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மிகக் கடினமானவை. மிகவும் இருண்டவை.

சாத்தியம் 1: குறுகிய காலப் போராக முடியலாம்

இப்போதைய சூழலில் அழிவுகரமான தாக்குதல்களுடன் ரஷ்யா தனது ராணுவப் படையெடுப்பை முடுக்கிவிட்டுள்ளது. விமானப் படை இன்னும் முழு வீச்சில் தாக்குதலில் ஈடுபடவில்லை. ஆனால் போர் தீவிரமாகும்போது விமானங்கள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தும். நாடெங்கும் பரவலாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும். எரிசக்தி மற்றும் மின்சார வழித்தடங்கள் துண்டிக்கப்படும்.

தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரலாம். கீயவ் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும். யுக்ரேனின் அதிபர் ஸெலன்ஸ்கி கொல்லப்படலாம் அல்லது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக்கூடும்.. வெளிநாட்டில் இருந்தபடியே அவர் நாடுகடந்த யுக்ரேனிய அரசை ஏற்படுத்தி அதை வழிநடத்தலாம்.

லட்சக்கணக்கான அகதிகள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்ல நேரிடும். ரஷ்யா, அதை ஆதரிக்கும் வகையிலான ஒரு பொம்மை ஆட்சியை யுக்ரேனில் நிறுவக்கூடும். எனினும் இது நிலையற்ற முடிவாகவே இருக்கும். கிளர்ச்சி மற்றும் எதிர்கால மோதல்களால் அமைதிச் சூழல் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து எப்போதும் உண்டு.

சாத்தியம் 2: நீண்ட காலப் போராக மாறலாம்

இது ஒரு நீடித்த போராக உருவாகும் வாய்ப்பு மிகவும் அதிகம். சண்டை வெகு காலத்துக்கு நீடித்தால், குறைந்த மன உறுதி, மோசமான தளவாடங்கள் மற்றும் திறமையற்ற தலைமை ஆகியவற்றுக்கு மத்தியில் ரஷ்யப் படைகள் சிக்கித் தவிக்கலாம்.

கீயவ் போன்ற முக்கியமான நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகளுக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும். கைப்பற்றிய பிறகு அவற்றைப் பாதுகாப்பதும் கடினமாகும். அதைப் பாதுகாக்கும் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்படும்.

செச்சன்யா மீதான படையெடுப்பின்போது தலைநகரை கைப்பற்றுவதற்கு நடந்த கடினமான மோதலை நினைவுபடுத்துவதாக இது இருக்கும். ரஷ்யப் படைகள் யுக்ரேனின் பல நகரங்களைக் கைப்பற்றிவிட்டாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போராட வேண்டியிருக்கும்.

ரஷ்யாவால் இவ்வளவு பெரிய நாட்டிற்கு போதுமான படைகளை வழங்க முடியாது. அப்படிப் படைகள் இருந்தாலும், அவை எப்போது வேண்டுமானாலும் கிளர்ச்சியில் ஈடுபடக்கூடும். இறுதியாக, 1989-ஆம் ஆண்டில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு வெற்றிபெற முடியாமல், ஒரு தசாப்தத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது போலவே, யுக்ரேனை விட்டும் ரஷ்யப் படைகள் வெளியேற நேரிடும்.

சாத்தியம் 3: ஐரோப்பா அளவிலான போர் நடக்கலாம்

இந்த யுத்தம் யுக்ரேனின் எல்லைகளுக்கு வெளியே பரவ வாய்ப்பிருக்கிறதா? ஒருவகையில் இதுவும் சாத்தியம்தான். நேட்டோ அமைப்பில் சேராத மால்டோவா மற்றும் ஜார்ஜியா போன்ற முன்னாள் சோவியத் நாடுகளுக்கு ரஷ்யா படைகளை அனுப்பக் கூடும். முன்னாள் பேரரசின் பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக இது இருக்கும்.

யுக்ரேன் டாங்கி

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனியப் படைகளுக்கு மேற்கத்திய ஆயுதங்கள் வழங்குவது என்பது ஓர் ஆக்கிரமிப்பு முயற்சி, அதற்குப் பதிலடி கொடுக்கப்பட வேண்டியது என ரஷ்யா அறிவிக்கலாம். லித்வேனியா போன்ற நேட்டோவின் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நாடுகளுக்கு படைகளை அனுப்பி, கலினின்கிராட் பகுதியின் நில வழித்தடத்தை அமைக்கப் போவதாக புதின் அச்சுறுத்தலாம்.

இது மிகவும் ஆபத்தானது. நேட்டோவுடன் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் அளவுக்கு ஆபத்தானது. நேட்டோவின் கொள்கைப்படி, ஓர் உறுப்பிநாடு மீது தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகும். அதனால் அது மிகப்பெரிய போராக உருவெடுக்கும். தனது தலைமையைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்று புதின் நினைத்தால் இத்தகைய அபாயகரமான வழியை அவர் கையில் எடுக்கலாம்.

சாத்தியம் 4: ராஜீயத் தீர்வு எட்டப்படலாம்

எல்லாவற்றையும் மீறி, இன்னும் சாத்தியமான ராஜதந்திர தீர்வை எட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

“துப்பாக்கிகள் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பேச்சுவார்த்தைக்கான பாதை எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரேஸ் கூறியிருக்கிறார்.

நிச்சயமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. பிரான்ஸ் அதிபர் மக்ரோங், புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ரஷ்ய மற்றும் யுக்ரேனிய அதிகாரிகள் பெலாரூஸ் எல்லையில் சந்தித்துப் பேசினர். அதில் அதிக முன்னேற்றம் ஏற்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதன் மூலம், புதின் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

கார்கிவ்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய கேள்வி என்னவென்றால், “ஆஃப் ராம்ப்” என்று ராஜீய நிபுணர்கள் குறிப்பிடும் வழியை மேற்கத்திய நாடுகளால் வழங்க முடியுமா என்பதுதான். இது ஒரு பெரிய நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் வழியைக் குறிப்பிடும் அமெரிக்கச் சொல். அதாவது போரைத் தடுப்பதற்கு அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதைக் குறிப்பிடுகிறது.

இப்படியொரு சூழலைக் நினைத்துப் பாருங்கள். போர் ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத் தடைகள் மக்கள் விரும்பத்தக்கதுகோவை அமைதிப்படுத்தத் தொடங்குகின்றன. வீரர்களின் உடல்கள் நாடு திரும்பும்போது எதிர்ப்பு அதிகரிக்கிறது.

போரைத் தொடர்வது, போரை முடிவுக்குக் கொண்டு வருவதைவிட அவரது தலைமைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று புடின் கருதக்கூடும். சீனா தலையிட்டு, புதினை சமரப்பேச்சுக்கு அழுத்தம் கொடுக்கலாம். இறுதியில் புதின் ஒரு வழியைத் தேடத் தொடங்குவார்.

அதே நேரத்தில் யுக்ரேனிய அதிகாரிகள் தங்கள் நாட்டின் பேரழிவைக் கண்டு, அரசியல் சமரசமே இத்தகைய உயிரிழப்பை விட சிறந்தது என்ற தீர்மானத்துக்கு வரக்கூடும். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து சமரசம் ஏற்படும்.

இது சாத்தியமில்லை என்று தோன்றலாம். ஆனால் ரத்தம் தோய்ந்த மோதலின் கொடூரத்தில் இருந்து அத்தகைய முடிவு வருவது நம்ப முடியாதது அல்ல.

சாத்தியம் 5: புதின் பதவியில் இருந்து அகற்றப்படலாம்

விளாடிமிர் புதின் என்ன ஆவார்? “எந்த முடிவுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று யுக்ரேனிய படையெடுப்பைத் தொடங்கிய போது அவர் அறிவித்தார்.

ஆனால் அந்த முடிவு அவர் அதிகாரத்தை இழக்க நேர்ந்தால் என்னவாகும்? இது நினைத்துப் பார்க்க முடியாததாகத் தோன்றலாம். ஆனால் சமீப காலத்தில் உலகம் மாறிவிட்டது. இதுபோன்ற சாத்தியங்களும் இப்போது சிந்திக்கப்படுகின்றன . “கீயவ் போன்று மக்கள் விரும்பத்தக்கதுகோவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியரான லாரன்ஸ் ஃப்ரீட்மேன் கூறுகிறார்.

புதின்

பட மூலாதாரம், Getty Images

அவர் எப்படி இதைச் சொல்கிறார்? புதின் ஒரு பேரழிவுகரமான போரைத் தொடர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறக்கின்றனர். பொருளாதாரத் தடைகளால் நெருக்கடி ஏற்படுகிறது. புதின் மக்கள் ஆதரவை இழக்கிறார். புரட்சி ஏற்படும் அச்சுறுத்தலும் ஏற்படலாம்.

அந்த எதிர்ப்பை ஒடுக்க ரஷ்யாவின் உள்நாட்டு பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் அதுவே அவருக்குச் சிக்கலாக மாறி, ரஷ்யாவின் ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார உயரடுக்கைச் சேர்ந்தவர்கள் புடினுக்கு எதிராகத் திரும்புகின்றனர். வேறொரு மிதவாதத் தலைவர் வந்தால், ரஷ்யா மீதான சில பொருளாதாரத் தடைகளை நீக்கப்படலாம் என்று அவர்கள் கருதலாம். வேறு வழியின்றி புதின் தனது அதிகாரத்தை விட்டு வெளியேறலாம்.

இந்த 5 சாத்தியங்களும் தனித்தனியானவை அல்ல. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நடக்கலாம். எது நடந்தாலும் உலக ஒழுங்கு மாறிவிடும் அபாயம் எப்போதும் உண்டு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »