Press "Enter" to skip to content

ரோ Vs வேட்: கருக்கலைப்பு குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1973ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு முக்கிய தீர்ப்புக்கு பிறகு, அந்நாடு முழுவதும் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது. அந்த வழக்கே ரோ vs வேட் வழக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்போது, அந்தத் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், 22 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு உடனடியாக சட்டவிரோதமாக்கப்பட்டு உள்ளது.

ரோ Vs வேட் – என்ன வழக்கு?

1969 ஆம் ஆண்டில், ‘ஜேன் ரோ’ என்ற புனைப்பெயரைக் கொண்டு நார்மா மெக்கோர்வி என்ற 25 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், டெக்சாஸில் உள்ள குற்றவியல் கருக்கலைப்புச் சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடுத்தார்.

தாயின் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளைத் தவிர, மற்ற நிலைகளில் கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று வழக்கில் டெக்சாஸ் நீதிமன்றம் தடை விதித்தது.

கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை ஆதரிப்பவர் ஹென்றி வேட். அவர் டல்லாஸ் மாகாணத்தின் வழக்கறிஞர். அதனால், இந்த வழக்கு ரோ Vs வேட் என்று அழைக்கப்படுகிறது.

நார்மா மெக்கோர்வி வழக்கு தொடுத்தப்போது, தனது மூன்றாவது குழந்தையுடன் அவர் கர்ப்பமாக இருந்தார். மேலும் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த 1973ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது வழக்கை சாண்ட்ரா பென்சிங் என்ற 20 வயதான ஜார்ஜியா பெண் தொடுத்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது. டெக்சாஸ் மற்றும் ஜோர்ஜாவில் கருக்கலைப்புச் சட்டங்கள் அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிராக இருக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். ஏனெனில், அவை ஒரு பெண்ணின் தனி மனித உரிமையை மீறுகின்றன என்று அவர்கள் வாதிட்டனர்.

இந்த விவகாரத்தில், ஏழுக்கு இரண்டு வாக்குகள் மூலம், கருக்கலைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கர்ப்பத்தைக் கலைக்கும் ஒரு பெண்ணின் உரிமையை அமெரிக்க சட்டம் பாதுக்காக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ரோ Vs வேட்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

இந்த வழக்கு பெண்களின் உரிமையை எப்படி மாற்றியது?

இந்த வழக்கு ‘டிரைமெஸ்டர்’ (மூன்று மாத கணக்கு) முறையை உருவாக்க அனுமதிக்கிறது. அதாவது:

1. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமை தரப்படுகிறது.

2. இரண்டாவது மூன்று மாதங்களில், சில அரசுக் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

3. கருப்பைக்கு வெளியே வாழக்கூடிய கட்டத்தை அந்த சிசு நெருங்கி விடுவதால், கடைசி மூன்று மாதங்களில் கருக்கலைப்புகளை கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ மாகாணங்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது.

ரோ Vs வேட் வழக்கில், இறுதி மூன்று மாதங்களில், ஒரு பெண்ணின் உயிரையோ உடல்நலத்தையோ காப்பாற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் சான்றளித்தால் மட்டுமே எந்தவொரு சட்டபூர்வ தடையையும் மீறி கருக்கலைப்பு செய்ய முடியும் என்பதை வலியுறுத்தியது.

ரோ Vs வேட் வழக்கு எப்படிரத்து செய்யப்பட்டது?

15 வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்புக்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் தடை விதித்ததற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

இதன் மூலம், மில்லியன் கணக்கான அமெரிக்கப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை அந்த தீர்ப்பு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

தனிப்பட்ட மாகாணங்களால் இப்போது இந்த நடைமுறைக்கு மீண்டும் தடை விதிக்க முடியும்.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் பாதி, புதிய கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கருக்கலைப்பை தானாகவே தடை செய்யும் மாற்று சட்டங்களை (trigger laws) ஏற்கெனவே 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. இன்னும் சில மாகாணங்கள், புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.

2022ஆம் ஆண்டு மே மாதம், இவர்களில் ஒருவரான நீதிபதி சாமுவேல் அலிட்டோவின் விரைவில் குறிப்பிடப்பட்ட கருத்து ரகசியமாக வெளியானது. அதில் ரோ Vs வேட் தீர்ப்பு ‘மிகவும் தவறானது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரோ Vs வேட்

பட மூலாதாரம், Getty Images

கருக்கலைப்புக்கு ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு முன்பே, கருக்கலைப்பை எதிர்க்கும் குரல்கள் அங்கு வலுப்பெற்றுள்ளன.

1980ஆம் ஆண்டில், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசியம் இருக்கும் நிலையைத் தவிர, கருக்கலைப்புக்கு அரசு நீதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.

பின்னர் 1989ஆம் ஆண்டில், அரசு மருத்துவமனைகளில் அல்லது அரசு ஊழியர்களால் கருக்கலைப்பு செய்வதைத் தடை செய்ய மாகாணங்களுக்கு அனுமதி அளித்தது.

1992ஆம் ஆண்டு, மற்றொரு முக்கிய வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.

ரோ Vs வேட்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ய மாகாணங்கள் கட்டுப்பாடு விதிக்கலாம் என்று அந்த தீர்ப்பு கூறியது.

இதன் விளைவாக, பல மாகாணங்கள் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இளம் கர்ப்பிணிகள் கருக்கலைப்பு குறித்து எடுக்கப்படும் முடிவில், அவர்களின் பெற்றோர்களோ ஒரு நீதிபதியோ தலையிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

மேலும், ஒரு பெண் கருக்கலைப்பு கிளினிக்கிற்கு செல்லும் நேரத்திற்கும், கருக்கலைப்பு செய்யப்படும் சமயத்திற்கு இடையில் உள்ள காத்திருக்கும் நேரம் போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கெனவே பிற மாகாணங்களில் உள்ளன.

இதன் விளைவாக, பல பெண்கள் கருக்கலைப்பு செய்ய அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் மாகாணங்களின் எல்லைகளைத் தாண்டி, அவர்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »