Press "Enter" to skip to content

இரானிய ட்ரோன்கள்: கியவ் மீது ரஷ்யா நடத்திய நேரடி தாக்குதல் – ‘காமிகேஸ்’ எத்தனை ஆபத்தானது?

  • கியவில் இருந்து பால் அடம்ஸ், லண்டனிலிருந்து மெர்லின் தாமஸ்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Reuters

யுக்ரேன் தலைநகரான கியவ் பகுதியில், இரானில் தயாரிக்கப்படும் ‘காமிகேஸ்’ (kamikaze) ட்ரோன்களை கொண்டு குண்டு மழை பொழிந்திருக்கிறது ரஷ்யா.

யுக்ரேனின் மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில், நூற்றுகணக்கான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் டென்ஸ் ஷ்மைகல் தெரிவித்தார். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கியவ், சுமியில் தலா நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் விநியோகிக்கும் பணியை நிறுத்த மறுக்கும் இரான் மீதான தடைகளை தீவிரப்படுத்தும்படி குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஒரு வாரத்துக்கு முன்பு, யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19 பேர் உயிரிழந்தனர்.

கியவ், ட்னிப்ரோ மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் ரஷ்யா இந்த தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தாக்குதல்களில், உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு ஐந்து இடங்களை இலக்கு வைத்து 28 ட்ரோன்கள் குண்டு மழை பொழிந்தன என்று மேயர் விடாலி க்ளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

“இது அவர்களின் விரக்தியைக் காட்டுகிறது,” என்று யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் செயலக அதிகாரி அண்ட்ரி எர்மக் கூறினார்.

வானில் இருந்து குண்டுமழை பொழிந்த ட்ரோன்களை நோக்கி விமான எதிர்ப்பு சாதனங்கள் சுட்டுக் கொண்டே இருந்தன. அவ்வாறு இடைமறிக்கப்பட்ட ஒரு ட்ரோனை சுடும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில், குண்டு மழைக்கு இலக்கான ஒரு இடத்தில் பகுதியளவு இடிந்து சேதம் அடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்புக் குழுவினர் தேடினர். அந்த வீதி முழுவதும் மக்கள் காலி செய்யப்பட்டு டஜன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால உதவிக்குழுவினர் குழுமியிருந்தனர். அங்கு கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒரு கர்ப்பிணியும் அடங்குவார்.

இந்த தாக்குதலை யுக்ரேனியர்களை அழித்தொழிக்கும் படுகாலை என்று மேயர் கிளிட்ஸ்கோ அழைத்தார். “யுக்ரேனியர்கள் இல்லாத யுக்ரேனே ரஷ்யர்களுக்கு தேவை” என்று அவர் கூறினார்.

மேயர் கிளிட்ச்கோ, தாக்குதல் பகுதியில் சிதறிக் கிடந்த கேமிகேஸ் ட்ரோன் துண்டுகளை பகிர்ந்துள்ளார்.

பட மூலாதாரம், TELEGRAM

ட்ரோன் தாக்குதலில் இருந்து தலைநகரை தற்காத்துக் கொள்ள மேலதிக விமான எதிர்ப்பு சாதனங்கள் விரைவாக வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக கியவ் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதாக விவரித்த அதிபர் ஸெலென்ஸ்கி, “எதிரிகள் எங்கள் நகரங்களைத் தாக்க முடியும். ஆனால் அவர்களால் எங்களை உடைக்க முடியாது,” என்றார்.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ட் ரோன்களின் துண்டுகளை தாம் பார்த்ததாக, அதில் “பெல்கோரோட்டுக்காக” என்ற வார்த்தைகள் இருந்தன என்றும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

ரஷ்யாவின் எல்லை பகுதியான பெல்கொரோட் மீது யுக்ரேன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அதை யுக்ரேன் மறுத்துள்ளது.

யுக்ரேனுக்காக சண்டையிட முன்வந்த இரண்டு வீரர்கள், பெல்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ பயிற்சி முகாமில் சனிக்கிழமையன்று 11 பேரை கொன்றனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் ஐந்து அல்லது ஆறு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டாலும், டெலிகிராம் சமூக ஊடகத் தளத்தில் க்ளிட்ஸ்கோ வெளியிட்ட செய்தியின்படி, கியவ் பகுதியில் நான்கு தாக்குதல்கள் நடந்ததாகக் கூறினார். அந்நாட்டு மக்களை விமானத் தாக்குதல் முகாம்களில் தங்குமாறும் அவர் தெரிவித்தார்.

கியவ் பகுதியில் காணப்பட்ட ட்ரோன்

பட மூலாதாரம், YASUYOSHI CHIBA

‘காமிகேஸ்’ தாக்குதல்களை ரஷ்யாவின் ‘மரண அடி’ என்று விவரிக்கும் யெர்மக், யுக்ரேனுக்கு ‘கூடிய விரைவில்’ அதிக வான் பாதுகாப்பு வசதிகள் தேவை என்றார்.

சிவப்புக் கோடு

‘காமிகேஸ் ட்ரோன்கள்’ என்றால் என்ன?

  • இது, ஷாஹெட்-136 எனப்படும் இரான் வழங்கிய ஆயுதம் என்று நம்பப்படுகிறது.
  • இந்த ட்ரோன்கள் தாக்கும் முன் ஓர் இலக்குக்கு மேலே பறக்கும்.
  • வெடிமருந்துகள் இந்த ட்ரோன்களில் நிரப்பப்பட்டிருக்கும். அவற்றை வெடிக்கச் செய்வதுடன் தன்னைத்தானேயும் இந்த ட்ரோன் வெடித்து அழித்துக் கொள்ளும்.
  • இந்த ட்ரோன்கள் தாழ்வாக பறக்கும். எனவே, இதை ராடாரில் கண்காணிப்பது சிக்கலானது.
  • இது போன்ற ட்ரோன்களை இரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கான எண்ணிக்கையில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியது. இந்த ட்ரோன்களுக்கு தலா 20,000 டாலர்கள் செலவாகும்.
  • யுத்தத்தின்போது அமெரிக்க தயாரிப்பான ஸ்விட்ச்பிளேட் ரகம் உள்பட காமிகேஸ் ட்ரோன்களை யுக்ரேனும் பயன்படுத்தியுள்ளது.
சிவப்புக் கோடு

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கடந்த வாரம் நடந்த தாக்குதல்கள், ரஷ்யாவையும் அதனால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் தகர்க்கப்பட்டதற்கான பதிலடி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

ரஷ்யா – யுக்ரேன் இடையிலான போரில் கியவ் நகரின் மையப்பகுதி நேரடியாக குறி வைக்கப்பட்டது இதுவே முதல் முறை.

கியவ் பகுதியில் ட்ரோன்களை நோக்கி சூடும் யுக்ரேனியர்

பட மூலாதாரம், YASUYOSHI CHIBA

இந்த வாரம், யுக்ரேன் மீது பெரிய அளவிலான தாக்குதல்கள் தேவையில்லை என்று புதின் கூறினார். பெரும்பாலான இலக்குகள் தாக்கப்பட்டன என்றும், அந்நாட்டை அழிப்பது தமது நோக்கம் அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

லண்டனில் எல்சா மைஷ்மேனின் கூடுதல் தகவல்களுடன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »