Press "Enter" to skip to content

லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது ஏன்? சந்திரயான்-3 சரித்திரம் படைக்குமா?

பட மூலாதாரம், INSTITUTE FOR SPACE RESEARCH OF THE RUSSIAN ACADEMY OF SCIENCES

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இதனால், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ரஷ்யா தவறவிட்டதை சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது.

சோவியத் ஒன்றியம் – அமெரிக்கா விண்வெளிப் போட்டி

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகின் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் சர்வதேச அரசியல், ராணுவ, பொருளாதார அரங்கில் மட்டுமின்றி விண்வெளியிலும் போட்டியிட்டன. சோவியத் ஒன்றியம்1955இல் சோவியத் விண்வெளித் திட்டத்தைத் தொடங்க, பதிலடியாக அமெரிக்கா 1958-ம் ஆண்டு தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் ஏஜென்சியான நாசாவை அறிமுகப்படுத்தியது. இந்த போட்டி ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள் அறிமுகத்துடன் தொடங்கியது.

நிலாதான் சூரியனுக்கு மிக அருகில் உள்ள வான்பொருள் என்பதால் அதன் மீது அந்த இரு வல்லரசுகளின் பார்வையும் விழுந்தது. லூனா என்ற லத்தீன் சொல்லுக்கு நிலா என்று பொருள். ஆகவே, நிலவை ஆய்வு செய்யும் தனது திட்டத்திற்கு லூனா என்று பெயர் சூட்டிய சோவியத் ஒன்றியம், லூனா வரிசையில் அடுத்தடுத்து விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியது.

1959ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறங்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக லூனா-2 வரலாறு படைத்தது. லூனா 2 நிலவில் இறங்கிய பிறகு, அது நிலவின் மேற்பரப்பு, கதிர்வீச்சு மற்றும் காந்தவீச்சுகளைப் பற்றிய தகவல்களை வழங்கியது. இந்த வரலாற்று சாதனை, நிலவில் மேலும் பல ஆராய்ச்சிகளை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வெற்றி நிலவில் மேலும் பல ஆய்வுகளுக்காக மனிதர்களை அனுப்புவதற்கும் வழி வகுத்தது.

விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர், சந்திரனில் தடம் பதித்த முதல் நாடு, லைகா என்ற நாயை அனுப்பியதன் மூலம் சந்திரனுக்கு விலங்கை அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வந்த நாடு என்று சோவியத் ஒன்றியம் அடுத்தடுத்து பல பெருமைகளை தனதாக்கியது. இதன் அடுத்தக்கட்டமாக நிலவுக்கு மனிதர்களை யார் அனுப்புவது என்று அமெரிக்கா – சோவியத் ஒன்றியம் இடையே போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டியில், 1969-ம் ஆண்டு அப்போலோ 11 விண்கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதராக புகழ் பெற, அமெரிக்கா முந்திக் கொண்டது.

1976-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் அனுப்பிய லூனா-24 விண்கலம்தான் நிலவுக்கு அந்த நாடு அனுப்பிய கடைசி விண்கலம் ஆகும். நிலா மட்டுமின்றி செவ்வாய், வெள்ளி மற்றும் வேற்று கிரக ஆய்வுகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்கள் என அந்த முயற்சிகளும், போட்டிகளும் அடுத்தடுத்த கட்டத்தைத் தொட்டன.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் ரஷ்யா

1990-களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்ட இடர்பாடுகளில் இருந்து மீண்டு வர ரஷ்யாவுக்கு சற்று காலம் பிடித்தது. பொருளாதார பிரச்னைகளால் ரஷ்யாவால் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த கால கட்டத்தில் சோவியத் ஒன்றியம் விண்ணில் நிறுவியிருந்த மிர் விண்வெளி நிலையம் செயலிழந்து போனது.

சுமார் 20 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக சற்று நிமிர்ந்த பின்னர் ரஷ்யா மீண்டும் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த இடைவெளியில் 2008-ம் ஆண்டு நவம்பர் 18, சந்திரயான்-1 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் மோதச் செய்து இந்தியா ஆய்வு செய்தது. சந்திராஸ் ஆல்டிடியூட் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர்(Chandras Altitute Composition Explorer) மூலம் சந்திரனின் தாக்க ஆய்வு செய்த இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று நிலவில் தண்ணீர் இருப்பதாக அறிவித்தது.

நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான். சந்திரயான்-2 விண்கலத்தை நிலவில் தரையிறக்க இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தோல்வியடைந்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரயான்-3 என்ற பெயரில் அதே முயற்சியை இந்தியா மீண்டும் செய்கிறது.

அதேநேரத்தில், மீண்டும் விண்வெளி ஆய்வில் கவனத்தை குவித்த ரஷ்யாவின் பார்வை, சோவியத் ஒன்றியத்தைப் போலவே நிலவின் மீதே முதலில் பட்டது. ரஷ்யாவும் நிலவின் துருவப் பகுதிகளை ஆய்வு செய்ய தீர்மானித்தது. அதற்காக லூனா-25 விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிட்ட ரஷ்யா, மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல முறை தள்ளிவைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தாமதமானது. அன்றைய தினம் அந்த விண்கலம் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம், reuters

லூனா-25 விண்கலத்தின் திட்டம் என்ன?

லூனா-25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியிருந்தால், அங்கே தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமை கிடைத்திருக்கும். நிலவின் தென் துருவத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத ஆழமான பள்ளங்களில் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

விண்வெளி ஆய்வாளர்கள் கருதுவது போல, நிலவின் தென் துருவத்தில் மதிப்பு வாய்ந்த தனிமங்கள் இருக்கின்றனவா என்பதை லூனா-25 விண்கலத்தின் மூலம் உறுதி செய்யவும் ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

நிலவை நெருங்கியதும், லூனா-25 விண்கலத்தில் இருந்து முதல் கட்ட தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் ரோஸ்காஸ்மோஸ் கூறியிருந்தது. அந்த விண்கலம் எடுத்த, நிலவின் ‘ஸீமன்’ பள்ளத்தின் புகைப்படத்தையும் அந்த அமைப்பு சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது.

‘அது நிலவின் தென் கோளத்தில் உள்ள மூன்றாவது ஆழமான பள்ளம், அதன் விட்டம் 190 கி.மீ., ஆழம் 5 கி.மீ.’ என்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்திருந்தது. லூனா-25 விண்கலத்தை நாளை அல்லது நாளை மறுநாள் விண்கலத்தில் தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம், reuters

லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு

இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன்-3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

“லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்த தயாரான போது அசாதாரண சூழல் ஏற்பட்டது” என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

“அந்த செயல்பாட்டின் போது, தானியங்கி நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்தது. இதனால், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட அளவில் அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை” என்று ரோஸ்காஸ்மோஸ் தனது அறிவிக்கையில் கூறியுள்ளது.

விஞ்ஞானிகள் நிலைமையை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள ரோஸ்காஸ்மோஸ், கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.

லூனா-25 நிலவில் மோதிவிட்டதாக ரஷ்யா தகவல்

தொழில்நுட்பக் கோளாறால் லூனா-25 விண்கலம் என்ன ஆனது என்ற எதிர்பார்ப்பு நிலவி வேளையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், லூனா-25 விண்கலத்துடனான தொடர்பு சனிக்கிழமை முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதாக ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்தது.

“லூனா-25 விண்கலம் கணிக்க முடியாத சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, நிலவின் மேற்பரப்பில் மோதியதால் அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டது” என்று அதன் அறிக்கை கூறுகிறது. லூனா-25 திட்டம் தோல்வியில் முடிவடைந்தது ஏன் என்பது குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது ஏன் கடினம்?

நாசாவால் ஏவப்பட்ட பெரும்பாலான அப்பல்லோ பயணங்கள், மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணங்கள் மற்றும் ரஷ்யா மேற்கொண்ட லூனா பயணங்கள் ஆகியவை நிலவின் மத்திய ரேகைக்கு (Equator) அருகில் மட்டுமே தரையிறங்கின. ஏனெனில் அங்கே தரையிறங்குவது மிகவும் எளிது.

தொழில்நுட்ப அதிர்வுகள் மற்றும் செயல்படத் தேவையான பிற உபகரணங்கள் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுகின்றன. இங்குள்ள வெளிச்சம் இரவு நேரத்திலும் தெளிவாகத் தெரியும்.

சந்திரனின் சுழலும் அச்சு சூரியனுக்கு கிட்டத்தட்ட சரியான கோணத்தில் இருப்பதால், துருவப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் பட்டாலும் அங்குள்ள பள்ளங்களின் ஆழத்தை அவை அடையாது. இதனால், சந்திரனின் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்கள் சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாமல் மிகவும் குளிரான நிலையில் உள்ளன. அத்தகைய இடங்களில் தரையிறங்குவது மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்துவது மிகவும் கடினம்.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம், TWITTER/ISRO

நிலவில் இந்தியா புதிய சரித்திரம் படைக்குமா?

லூனா-25 திட்டம் தோல்வியடைந்துவிட்ட நிலையில், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற முத்திரையைப் பதிக்க இஸ்ரோ முயற்சி செய்து வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் தற்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., அதிகபட்சம் 134 கி.மீ. என்ற தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தை இஸ்ரோ மாற்றியுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்குப் பதிலாக சற்று தாமதமாக மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களே சென்ற பிறகு இந்த ஆய்வின் முக்கியத்துவம் என்ன?

தென் துருவத்தில் உறைந்த மண்ணில் நீரின் தடயங்களை சந்திரயான்-3 கண்டறிந்தால், அது எதிர்கால சோதனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிலவில் உள்ள தண்ணீரைக் கண்டறிந்தால், அதில் இருந்து ஆக்ஸிஜனையும் உருவாக்கலாம். அங்கு மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும்.

அதுமட்டுமின்றி, ஆக்சிஜனை விண்வெளிப் பரிசோதனைகள் மற்றும் சந்திரனில் நடக்கும் பிற சோதனைகளுக்கு உந்துசக்தியாகவும் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »