- எழுதியவர், அன்னா ஃபோஸ்டர்
- பதவி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர்
-
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
சாச்சி ஐதான் காஸாவிற்கு கடத்தப்பட்டபோது, அவரது கைகளில் அவர் மகளின் ரத்தம் படிந்திருந்தன.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரால், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட தனது 18 வயது மகள் மாயனைத் கீழே கிடத்திய பிறகு, சாச்சியின் கைகளில் படிந்திருந்த ரத்தத்தை கழுவக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை.
குண்டு வெடிப்பின் சத்தம் கேட்க, அவர் தனது உடலைக் கேடயமாகப் பயன்படுத்தி தனது இரண்டு குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்டிருந்ததால்,அவரால் அவர் கைகளில் படிந்திருந்த ரத்தத்தை துடைக்க முடியவில்லை.
அந்த குடும்பத்தினர் அனுபவித்துக்கொண்டிருந்த வலி மற்றும் வேதனையை பேஸ்புக் மூலமாக முழுவதுமாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஒளிபரப்பினர்.
சாச்சியின் மனைவி கலி ஐதான் தற்போது தனக்கு நெருக்கமான நகல் ஒஸ் சமூகத்தினரிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று நகல் ஒஸ்.
அவரும் அவரும் குழந்தைகளும் கிப்புட்ஸில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அது அவருடைய வீடு இல்லை.
18 வயதான மாயன், தனது நான்கு வயதிலிருந்தே குடும்பத்துடன் வீட்டில் தான் வசித்து வந்தார். அந்த வீடு, அவர்கள் வளர்ந்த மற்றும் ஒன்றாக நினைவுகளை உருவாக்கிய வீடு. அவரது தம்பி மற்றும் சகோதரிகள் பிறந்த வீடு.
“அவள் எப்போதும் சரியாக இருப்பாள்,” என்று அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் பிபிசியிடம் கூறினார்.
“அவள் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றாள். அவள் படிக்க விரும்பினாள், அவள் கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அவளுடைய பிறந்தநாளுக்கு புத்தகங்களைக் கேட்டாள்,” என்கிறார் அவரது பக்கத்து வீட்டுக்காரர்.
புளியமரங்களுக்கு அடியில் நிழலாடிய இடத்தில் அமர்ந்து, அந்த நாளின் வலியை விவரிக்க விரும்பவில்லை, அது இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது என்றாலும், அதனை தன் கணவருக்காக விவரிப்பதாகக் கூறினார்.
“எனக்கு அவர் திரும்ப வேண்டும். முழுமையாய், உயிருடன் இருக்க வேண்டும். எனக்கு அவர் இப்போது திரும்பி வர வேண்டும்,”என்றார் கலி.
அக்டோபர் 7 ஆம் தேதி, காஸாவில் இருந்து ராக்கெட் வெடிக்கும் என்று எச்சரிக்கும் சிவப்பு விளக்கு அலாரங்களின் ஒலியைக் கேட்டு அந்தக் குடும்பத்தினர் விழித்தனர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அன்று காலை, ஏதோ வித்தியாசமாக இருந்தது.
“அது அசாதாரணமானது மற்றும் மிகவும் தீவிரமானது,” கலி பிபிசியிடம் கூறுகிறார்.
“அது அடுத்தடுத்து வெடித்தது. எங்களால் வெளியே சென்று மூச்சுவிடக்கூட முடியவில்லை. நாங்கள் எங்கள் வீட்டிற்குள்ளேயே எங்கள் வீட்டின் அறையை மூடிக்கொண்டோம்.” என்றார் கலி
“சாச்சியும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இங்கே ஏதோ சரியில்லை என்று சொன்னோம், ஏதோ பயங்கரமாக இருந்தது. நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம் என்றும் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கிப்புட்ஸின் குடியிருப்பு அமைப்பில் இருந்து எங்களுக்கு செய்திகள் கிடைத்தன. அவர்கள் எங்களை அமைதியாக இருக்கும்படியும் சொன்னார்கள், கிப்புட்ஸுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது.” என நினைவு கூர்ந்தார் கலி.
தொடர்ந்து பேசிய அவர்,”அது ஒருபோதும் விருப்பமில்லாத ஒன்று என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது எப்போதுமே ஒரு கொடுங்கனவுதான். அதற்கு எப்போதும் அரசு மற்றும் பாதுகாப்பு படையினரிடம் தீர்வு இருந்தது. ஆனால், அது திடீரென்று ஒரு நாள் நிஜமானது. கொடுங்கனவு நிஜமானது,” என்றார் கலி.
அந்த நேரத்தில், தனது வீட்டிற்கு வெளியே ஏதோ வெடித்து, கண்ணாடி ஜன்னல்களை உடைத்தது எப்படி என்று கலி விவரிக்கிறார். அந்தநேரத்தில் அவர்களின் வீட்டிற்குள் காலடிச் சத்தமும் குரல்களும் கேட்டன. “நாங்கள் சுடவில்லை’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் ஒருவர் கத்தினார். ஆனால் அவர்கள் சுட்டார்கள்,”என்றார் கலி.
“சாச்சி கதவைப் பிடித்துக் கொண்டார், அவர்கள் அதைத் திறக்க விடவில்லை. அதில் பூட்டும் இல்லை, குழந்தைகள் அலறுகிறார்கள், அறைக்குள் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தோம். இருட்டாக இருந்தது, ஆனால் மாயன் புரிந்துகொண்டாள். அவர்களால் கதவை சிறிது திறக்க முடிந்ததை அவள் பார்த்தாள். அவள் மேலே குதித்து கதவைப் பிடிக்க சாச்சிக்கு உதவினாள்.” எனக் கூறிக்கொண்டிருக்கும்போதே கலி அழுகத் தொடங்கினார்.
ஆனால், அவர் விவரிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அந்த தருணத்தை விவரிக்கிறார்.
“நாங்கள் சுடமாட்டோம்’ என்று கத்துகிறார்கள், பின்னர் அவர்கள் சுடுகிறார்கள். ‘யாரை அடித்தது, யாரை அடித்தது?’ என்று சாச்சி கத்தினான்.”
“அது மாயன். அவள் அவன் அருகில் விழுந்தாள், பின்னர் ஹமாஸ் குழுவினரால் கதவைத் திறக்க முடிந்தது. அலறல் சத்தம் கேட்டது, அவர்கள் விளக்கை ஆன் செய்தனர். மாயன் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். நான் அவளைப் பரிசோதித்தேன், அவள் தலையில் அடிபட்டதை உணர்ந்தேன், அவள் படுகாயமடைந்திருந்தாள்.”
“அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கத்தினார்கள். நாங்கள் குழந்தைகளிடம் ‘அவர்களை பார்க்க வேண்டாம்’ எனக்கூறி, நான் என் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றேன்.”
“என் வீட்டைச் சுற்றி ஒரு போர் நடந்துகொண்டிருந்தது. அவர்கள்(ஹமாஸ் ஆயுதக்குழுவினர்) என் வீட்டிற்கு உள்ளே இருந்தார்கள்.”
இரவு நேரத்தில் அணியும் உடையில் இருந்த சாச்சி, கலி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், யேல் மற்றும் ஷாசார், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு தரையில் அமர்ந்துள்ளனர்.
அவர்களை சிறைபிடித்தவர்களில் ஒருவர் கலியின் தொலைபேசியை எடுத்து, அவளது கடவுச்சொல்லைக் கேட்டு, பேஸ்புக் லைவில் குடும்பத்தைப் படம்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.
அந்தக் காணொளியை பார்க்கவே வேதனையாக இருந்தது. சுமார் 26 நிமிடங்களுக்கு மேலாக அவர்களைச் சுற்றியும் ஹமாஸ் தாக்குதல் தொடர்வதால், ராக்கெட்டின் சைரன் சத்தங்கள் ஒலிக்க, அந்த குடும்பமே குனிந்து கிடந்தது. சுற்றியும் வெடிக்கும் வெடிச்சத்தங்களால் பயந்த குழந்தைகள், பெற்றோரின் கைகளைப்பற்றி கதறி அழுதுகொண்டிருந்தனர். இந்த நேரங்களில், இறந்த மாயனின் உடல் சில மீட்டர் தொலைவில் கிடந்தது.
“என் குழந்தைகள் விவரிக்க முடியாத வகையில் தைரியமாக இருந்தார்கள். அவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் பேசினார்கள், அவர்களால் எப்படி முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள், ஏன் சுட்டுக் கொன்றார்கள், ஏன் கொலை செய்கிறார்கள் என்று கேட்டார்கள். ஒருவேளை அதுதான் எங்களைக் காப்பாற்றியிருக்கலாம்?,” என்றார் கலி.
“சாச்சி உடைந்துவிட்டார். அவர் தனது மகள் இறப்பதைக் கண்டார், அவள் தலையில் சுடப்பட்டு அவருக்கு அருகில் இறந்துவிட்டார். அவரது 18 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவரது மகள், அவருடன் இல்லை. வீடு முழுவதும் பலூன்கள் மற்றும் வாழ்த்துகள், மற்றும் … மற்றும் அவரது ரத்தம்,” என்றார் கலி
இறுதியில், சாச்சியை எழுந்திருக்கச் சொன்னார்கள். அவரது கைகள் ஒரு கேபிள் மூலம் அவரது முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டன. அப்பாவைக் கொல்லாதே, அவரைக் கொல்லாதே என்று குழந்தைகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம் கத்துகிறார்கள். பின்னர் அவர் கடத்தப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடந்தபோது டெல் அவிவ் நகரில் இருந்த கலியின் இரண்டாவது மூத்த மகள் ஷரோன், தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி கலி பேசும்போது தன் தாயை ஆறுதல்படுத்தினார்
தாக்குதலின் போது 15 வயது சிறுமி தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். “ஷரோன், நாங்கள் ஒரு பிரச்னையில் இருக்கிறோம், நான் உன்னை பிறகு அழைக்கிறேன். ஐ லவ் யூ” என்று கூறிவிட்டு சாச்சி தொலைபேசியை துண்டித்துவிட்டார். அவர்கள் பேசியது அதுவே கடைசி முறை.
“அவன் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நான் அவனிடம் “ஐ லவ் யூ, கதாநாயகனாகாதே, புத்திசாலியாக இரு. உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், என்னிடம் திரும்பி வாருங்கள். அவ்வளவுதான். இப்போது அவர் என்னிடம் திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்கிறார் கலி.
“சாச்சி இங்கே இருக்க வேண்டும். அவர் அவரது மகளைப் பற்றி துக்கம் விசாரிக்க வேண்டும். நான் அவரைக் கட்டிப்பிடிக்க வேண்டும்,”என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கலி.
காஸாவில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் தற்போது அடையாளம் கண்டுள்ளது.
“அவர்களின் இலக்கு என்னவென்று எனக்குப் புரியவில்லை” என்கிறார் கலி.
“அவர்கள் தங்களை அரக்கர்களாகக் காட்ட விரும்புகிறார்களா? இது மிகவும் மோசமானது. இது எவ்வளவு காலம் என்று எனக்குத் தெரியவில்லை. வடு நீடிக்கப் போகிறது. ஆனால் அவர்கள் பொதுமக்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் திரும்பக் கொண்டு வர வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார் கலி.
வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள மற்றொரு கிப்புட்ஸில், மாயனின் சவப்பெட்டி நாற்காலிகளின் வரிசைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது.
மலர்வளையங்கள் மற்றும் வண்ணமயமான பூக்களைக் கொண்டு அவளை நினைவுகூர வரும் நூற்றுக்கணக்கான மக்கள் அமர போதுமான இருக்கைகள் அங்கு இல்லை.
கைப்பந்து விளையாடுவதை விரும்பி, வாழ்க்கையை நேசித்த ஒரு இளம் பெண்ணின் நினைவுகளை அங்கு கூடியிருந்த நண்பர்களும் குடும்பத்தினரும் பேசுகிறார்கள்.
கூடியிருந்த கூட்டத்தினரிடம் கலி தன் மகளை நினைத்துப் பேசுகிறார். அவர் மைக்கின் முன் இல்லாதபோது, அவர் உயிருடன் இருக்கும் குழந்தைகளை இறுக்கமாகப் பிடித்திருக்கிறாள்.
யேல் மற்றும் ஷாச்சார், வெறும் 11 மற்றும் 9 வயதில், இத்தகைய மோசமான நிகழ்வின் சாட்சிகளாக உள்ளனர். அவர்களின் சகோதரி இறந்துவிட்டார், அவர்களை ஆறுதல்படுத்த அவர்களின் தந்தை இங்கு இல்லை.
சாச்சி இல்லாதது எங்கும் உணரப்படுகிறது. கலி தனது பெயரை உலகம் அறிய விரும்புவதாக கூறுகிறார். அவரை விடுவிக்க உதவும் எந்த சிறிய விஷயத்தையும் அவள் செய்ய தயாராக இருக்கிறாள்.
துக்கம் அனுசரிப்பவர்களில் பலர் முன்பக்கத்தில் அவருடைய மற்றும் மாயன் படங்கள் உள்ள டி-ஷர்ட்களை அணிந்துள்ளனர்.
“கடத்தப்பட்ட தந்தை” மற்றும் “கொலை செய்யப்பட்ட மகள்” என்ற வார்த்தைகள் கொண்ட பதாகைகள் அங்கு இருந்தது. அவர் சொன்ன செய்தி ஒன்று தான். “சாச்சியை மீண்டும் கொண்டு வாருங்கள்”.
கற்பனை செய்ய முடியாத இந்த இருளில், அவன் குடும்பத்திற்கு அவன் தேவை.
Source: BBC.com