Press "Enter" to skip to content

காஸாவுக்காக இஸ்ரேலின் உறவைத் துண்டித்த நாடு

பட மூலாதாரம், Getty Images

காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுடனான அரசுமுறை உறவுகளை தென்னமெரிக்க நாடான பொலிவியா துண்டித்திருக்கிறது.

காஸாவில் “ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற” ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக பொலிவியா தெரிவித்துள்ளது.

பொலிவியா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், முற்றுகையிடப்பட்ட காஸா பகுதிக்கு உதவிகளை வழங்குவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

போரில் இஸ்ரேலுடனான உறவை துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு இதுவாகும்.

இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திற்கு சரணடைவது” என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தன்னை இணைத்துக் கொள்கிறது” என்று பொலிவியா மீது லியோர் ஹையாட் குற்றம் சாட்டினார்.

“காஸாவில் நடைபெறும் ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலை நிராகரித்தும், கண்டித்தும் உறவுகளை துண்டிக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது” என்று கூறினார்.

பொலிவியா அதிபர்

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

“உணவு, தண்ணீர், வாழ்க்கைக்கு தேவையான பிற பொருள்கள் நுழைவதை” தடுக்கும் இஸ்ரேலின் முற்றுகைக்கு முடிவு கட்ட பொலிவியா விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.

காஸா மீது பல வாரங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் அத்தியாவசிய உதவிகள் எகிப்தின் ரஃபா வழியாக மட்டுமே மக்களைச் சென்றடைகின்றன.

“பொலிவியாவின் பயங்கரவாதத்தை ஆதரவையும், அதற்கு ஆதரவு தரும் இரானுக்கு அடிபணிவதையும் இஸ்ரேல் கண்டிக்கிறது.” என்று ஹையட் பதிலளித்தார்.

அக்டோபர் 7 தாக்குதல்களை நடத்த ஹமாஸ் ஆதரவு அளித்ததாக இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரானின் தலைவர்கள் இதைக் கொண்டாடினாலும், அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறிவருகின்றனர்.

இஸ்ரேலுக்கு எதிராக ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய லத்தீன் அமெரிக்க நாடு பொலிவியா மட்டுமல்ல.

சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் செவ்வாயன்று டெல் அவிவில் உள்ள நாட்டின் தூதரை ஆலோசனைக்காக திரும்பப் பெறுவதாகக் கூறினார்.

“காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு.” இதைச் செய்வதாக அவர் கூறியிருந்தார்.

பிரேசில் அதிபர்

பட மூலாதாரம், Getty Images

“இந்த ராணுவ நடவடிக்கைகளை சிலி கடுமையாக கண்டிக்கிறது மற்றும் மிகுந்த கவலையுடன் கவனிக்கிறது – இந்த கட்டத்தில் அவற்றின் வளர்ச்சியில் காஸாவில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்கள் கூட்டுத் தண்டனையை ஏற்படுத்துகிறது,” என்று அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் எழுதினார்.

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சமூக ஊடகங்களில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.

“இஸ்ரேலில் உள்ள எங்கள் தூதரை ஆலோசனைக்கு அழைக்க நான் முடிவு செய்துள்ளேன்,” என்று பெட்ரோ கூறினார்.

“பாலத்தீன மக்களின் படுகொலையை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் நாங்கள் அங்கு இருக்க முடியாது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார்.

“கொல்லப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பெரும்பாலானோர் குழந்தைகளாக இருக்கும் ஒரு போரை முதல் முறையாக நாங்கள் காண்கிறோம். நிறுத்துங்கள்! கடவுளின் அன்பிற்காக, நிறுத்துங்கள்! ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »