பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. நரேந்திர மோதி பல்வேறு காலகட்டங்களில் அவருடைய முன்னோடிகளுடன் பல நிலைகளில் ஒப்பிடப்பட்டுள்ளார்.
அவர் இந்திரா காந்தி, அடல் பிஹாரி வாஜ்பேயி ஆகியோருடன் ஒப்பிடப்படுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அடல் பிஹார் வாஜ்பேயி நரேந்திர மோதியின் மூத்த தலைவர். இந்த இரண்டு பிரதமர்களின் அரசியலும் அடிக்கடி பொதுவான நிலைக்கு வரும். சில நேரங்களில் இந்த இருவரும் வேறுபட்ட திசையில் நகர்வதையும் காணலாம்.
அவர்கள் இருவருக்கும் இடையே அப்படியாக ஒப்பிடப்பட்ட 5 விஷயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
“நான் பேசாமல், வெற்றிடத்தில் இருக்கிறேன். ஆனால், என் உணர்ச்சிகள் வேகமாக ஓடுகின்றன. எங்களின் அனைத்துமாக இருந்த அடல்ஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் தேசத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு.”
அடல் பிஹாரி வாஜ்பேயி ஆகஸ்ட் 16, 2018 அன்று காலமானபோது இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த வார்த்தைகளின் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“அடல்ஜியின் மறைவால் எனது தந்தையின் குடையை இழந்தேன். அமைப்பு மற்றும் நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை அவர் எனக்குப் புரிய வைத்தார். அவரது இழப்பு ஒருபோதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் நரேந்திர மோதி கூறியிருந்தார்.
வாஜ்பேயிக்கும் மோதிக்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருந்தது. ஆனால், அவர் வாஜ்பேயி உடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அந்த இடைவெளியை அவர் ஒருபோதும் உணரவில்லை. வாஜ்பேயிதான் அரசியல் உருவாகக் காரணமானவர் என்று மோதி தனது உரையில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
கடந்த 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் பூஜ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் நிலைமையைச் சரியாகக் கையாளாததால் அவர் பதவியிலிருந்து நிக்கப்பட்டு, அந்த இடத்தில் நரேந்திர மோதி நியமிக்கப்பட்டார்.
அப்போது நரேந்திர மோதி சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அக்கட்சியின் தேசிய தலைமையும் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியும் மோதி மீது நம்பிக்கை வைத்தனர்.
மேலும், 2000ஆம் ஆண்டு மோதி சரிவில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு திரும்பும்படி வாஜ்பேயி உத்தரவிட்டார் என்பது சிலருக்குத் தெரியும்.
நரேந்திர மோதி 2001இல் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவரது அரசியல் எழுச்சி தொடங்கியது. அங்கிருந்து அவரது அரசியல் பயணத்தின் வரைபடம் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்தது.
இதற்கிடையில், அடல் பிஹாரி வாஜ்பேயி மோதிக்கு அரசியலில் பாடம் கற்பித்தார் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம். அப்படியிருந்தும் இரு தலைவர்களின் அரசியலில் ஏன் இத்தனை வித்தியாசம்?
பல விஷயங்களில் வாஜ்பேயி, மோதியின் நிலைப்பாடுகள், குறிப்பாக நேரு மீதான அவர்களின் கருத்துகள், எதிர்க்கட்சிகளிடமான அணுகுமுறை, அவர்களின் இந்துத்துவா அரசியல், கட்சியை நடத்தும் விதம், காஷ்மீர் உட்படப் பல பிரச்னைகளில் உள்ள வித்தியாசத்தை எளிதில் காணலாம்.
1. நேரு பற்றிய கருத்து
அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமரான பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதில், டெல்லியில் உள்ள சவுத் பிளாக்கில் நேருவின் புகைப்படம் இருப்பதன் கதையைக் கூறினார்.
“சவுத் பிளாக்கில் (பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்டவை இருக்கும் கட்டடம்) உள்ள ஒரு சுவரில் நேருவின் புகைப்படத்தை வைத்திருந்தார். நான் வெளியுறவு அமைச்சரான பிறகு, யாரோ அதை நீக்கிவிட்டதை உணர்ந்தேன். அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், யாரும் பதில் சொல்லவில்லை. அதன் பிறகு அந்தப் புகைப்படம் மீண்டும் அங்கு வைக்கப்பட்டது. நேருவுக்கும் எனக்கும் கடுமையான அரசியல் வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அவருடன் எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை,” என நாடாளுமன்றத்தில் வாஜ்பேயி கூறினார். அதற்குப் பலத்த கரகோஷம் எழுந்தது.
“நேருவை நிலையான நிலைப்பாடு இல்லாதவர் என்று வாஜ்பேயி விமர்சித்தார். ஆனால், வாஜ்பேயிக்கும் நேருவுக்கும் இடையே அபரிமிதமான மரியாதை இருந்தது. வாஜ்பேயி ஒரு நல்ல நாடாளுமன்றவாதியாக வெளிப்படுவதற்கு நேரு நிறைய வாய்ப்பு கொடுத்தார்,” என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நீரஜா சௌத்ரி பிபிசி மராத்தியிடம் பேசும்போது கூறினார்.
நீரஜா சௌத்ரியின் ‘பிரதமர் எப்படி முடிவு செய்கிறார்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
மக்களவையில் வாஜ்பேயி எழுப்பிய கேள்விகள், அவரது பேச்சுகள், சபை நடவடிக்கைகளில் அவர் தலையிட்டது நேருவின் கவனத்தை ஈர்த்தது.
நாட்டின் பிரச்னைகள் பற்றிய வாஜ்பேயின் புரிதல், இந்தியில் அவரது பேச்சுத்திறன் ஆகியவற்றால் நேரு மிகவும் ஈர்க்கப்பட்டார். அதுமட்டுமின்றி 1957இல் வாஜ்பேயி இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என்று கணித்தார். நேருவின் கணிப்பு ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது.
ஆனால், அடல் பிஹாரி வாஜ்பேயி தனது ஆரம்பக்கால அரசியல் வாழ்க்கையில் நேரு மீது எந்தப் பாசமும் கொண்டிருக்கவில்லை என்கிறார் ‘வாஜ்பேயி: தி அசென்ட் ஆஃப் தி ஹிந்து ரைட், 1924-1977’ என்ற நூலின் ஆசிரியர் அபிஷேக் சௌத்ரி.
“மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நேரு அரசு ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்தது. அதனால் நேரு மீது வாஜ்பேயிக்கு கோபம் இருந்தது. அது அவருடைய ஆரம்பக்கால எழுத்துகளில் தெரிந்தது. ஆனால், பின்னர் வாஜ்பேயி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார், உண்மையில் நேருவை சந்தித்தார். அப்போது நேரு பற்றிய அவரது கருத்து மாறியது. வாஜ்பேயின் மரியாதை அதிகரித்தது,” என்று கூறுகிறார் அபிஷேக் சௌத்ரி.
தனிப்பட்ட உறவு நன்றாக இருந்தாலும், அரசியல் விஷயங்களில் நேருவை வாஜ்பேயி கடுமையாக விமர்சித்துள்ளார். 1959 முதல் சீனாவின் ஊடுருவல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கின. அப்போதிருந்து, வாஜ்பேயி சீனாவின் கொள்கையில் நேருவை விளிம்பில் வைத்திருந்தார்.
மாறாக, வாஜ்பேயி தலைமையில் உருவான நரேந்திர மோதி, நேருவின் பங்களிப்பு குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். கடந்த 70 ஆண்டுகளீல் நாட்டில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கும் மோதி, நேருவின் கொள்கைகளை எப்போதும் விமர்சிக்கிறார்.
எடுத்துக்காட்டாக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விமர்சிக்கும்போது நேருவின் செங்கோட்டை உரைகளில் ஒன்றை மோதி குறிப்பிட்டார். அப்போது அவர், “ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது செங்கோட்டையில் உரை நிகழ்த்தினார். அதில், கொரிய போரின் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் நிகழ்வுகள் இங்குள்ள பணவீக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அவர் கூறினார். நாட்டின் முதல் பிரதமர் சர்வதேச நிகழ்வுகளை மேற்கோள் காட்டி நாட்டில் பணவீக்கப் பிரச்னையில் கையை விரிக்கிறார்,” என்று கூறினார்.
நேரு பிரதமராக விரும்பியதால் நாடு பிளவுபட்டது என்றும் மோதி கூறியுள்ளார். நாட்டின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் இருந்திருந்தால், இன்று நாடு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார் நரேந்திர மோதி.
ஆர்.எஸ்.எஸில் உள்ள ஈடுபாட்டால் நரேந்திர மோதி இப்படி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறார் நீரஜா சௌத்ரி.
“ஆர்.எஸ்.எஸ் எப்போது நேருவை விமர்சித்துள்ளது. நேருவின் கொள்கைகளால் நாட்டின் ஆரம்பக்கால அஸ்திவாரமே தவறாகிவிட்டதாக சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். அவர்களின் இதழிலும் இத்தகைய விமர்சனம் இருந்தது. நரேந்திர மோதி பல ஆண்டுகளாக சங்கத்தில் பிரசாரகராகப் பணியாற்றியுள்ளார். எனவே அந்த சித்தாந்தத்தை இப்போது அவரது பேச்சுகளில் காணலாம்,” என்கிறார் நீரஜா சௌத்ரி.
அபிஷேக் சௌத்ரியின் கூற்றுப்படி, மோதியும் நேருவும் சந்தித்ததில்லை. நேருவின் பணிகளை மோதி கூர்ந்து கவனிக்கவில்லை. மறுபுறம், நேருவைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மோதி, தனது பெரும்பாலான நேரத்தை சங்கத்தில் செலவிட்டார். நேரு பற்றிய மோதியின் எண்ணங்களில் அதன் தாக்கம் தெரிகிறது.
2. எதிர்க்கட்சிகள் உடனான உறவுகள்
நரேந்திர மோதி மற்றும் வாஜ்பேயின் அரசியல் காலம் வெவ்வேறு. இரண்டு வெவ்வேறு காலத்தின் அரசியல் சூழ்நிலையும் வேறு வேறு. வாஜ்பேயி பல கட்சி ஆட்சியை நடத்தி வந்தார். எனவே அவர்களுக்கு முன்பு அரசியல் வரம்புகள் இருந்தனர். அவர் பிரதமரானபோது, தேமுதிகவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவு அவருக்கு இருந்தது.
“இப்போது மோதிக்கு தனி அதிகாரம். 2014இல் நேரடியாக பிரதமரானார். ஒரு கட்சி ஆட்சி இருப்பதால், எதிர்க்கட்சிகள் தேவையில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அவருக்கு சிவசேனா போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பகைமை உள்ளது. இது தேசிய அரசியலை அவர் கையாளும் விதத்தை மாற்றும், வரம்புகளும் வெளிப்படை,” என்கிறார் அபிஷேக் சௌத்ரி.
இதற்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கலாம் என்கிறார் அவர். அதில் ஒன்று வாஜ்பேயிக்கும் மோதிக்கும் இடையே உள்ள குணாதிசய வேறுபாடு. இரண்டாவதாக இருவரும் பிரதமராக இருக்கும் காலமும் அரசியல் சூழ்நிலையும் வேறு.
“அடல் பிஹாரி வாஜ்பேயி நாடாளுமன்ற அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர். முதலில் எம்.பி ஆனார். எதிர்க்கட்சியாகப் பணியாற்றினார். பின்னர் அவர் பிரதமரானார். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார். எதிர்க்கட்சிகளை நம்பிக்கையில் கொண்டு ஆட்சியை நடத்தி வந்தார். அனைவரையும் உடன் அழைத்துச் செல்வது அவரது இயல்பு” என்கிறார் அபிஷேக் சௌத்ரி.
அடல் பிஹாரி வாஜ்பேயி மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரை ‘உயர்ந்த உருவம்’ என்று அழைத்தார்.
வாஜ்பேயி உடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளாத தேசியத் தலைவர்கள் யாரும் நாட்டில் இல்லை. அனைத்து தரப்பினருடனும் அவர் பழகும் விதத்தில் அணுகுமுறை தெரிந்தது.
ஆனால், இப்போது மோதி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் கழுத்தை நெரிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக எதிக்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும் கூறுகிறார் அபிஷேக் சௌத்ரி.
“இது தவிர எதிர்க்கட்சித் தலைவர்களின் பின்னால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் ஓடுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைந்தவுடன் அவர்களின் விசாரணை மந்தமாகிறது” என்ற ஒரு விமர்சனமும் உள்ளது.
இதுமட்டுமின்றி, கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரின்போது பாதுகாப்பு பிரச்னைக்காக, எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் முற்றுகையிட்டபோது 15 எம்.பி.க்களை அரசு இடைநீக்கம் செய்தது.
அபிஷேக் சௌத்ரி கூறுகையில், நரேந்திர மோதியின் அரசியல் பாணியை இந்திரா காந்தியின் அரசியலில் காணலாம்.
இந்திரா காந்திக்கும் தனி அதிகாரம் இருந்தது. எதிர்க்கட்சிகளின் அரசுகளைக் கவிழ்த்தார். மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. அதோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்திலும் தலையிட்டார்.
3. காஷ்மீர் பிரச்னை
காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க வாஜ்பேயி கடுமையாக முயன்றார். ஆனால், அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. வாஜ்பேயிக்கு காஷ்மீர் மிகவும் தனிப்பட்ட விஷயமாக இருப்பதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது.
வாஜ்பேயி 1951இல் பாரதிய ஜனசங்கத்தில் சேர்ந்தார். அந்த நேரத்தில் அவர் அதன் நிறுவனர்-தலைவர் ஷியாம்பிரசாத் முகர்ஜியின் செயலாளராக இருந்தார்.
ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அரசு அனுமதித்த உத்தரவுக்கு எதிராக முகர்ஜி பிரசாரத்தைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் இருந்து தொடர் வண்டியில் முகர்ஜி காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜூன் 23 அன்று ஸ்ரீநகர் சிறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
முகர்ஜிக்கு பிறகு, வாஜ்பேயி தொடர்ந்து தனது செய்தியை முன்வைத்தார். நமது நாடு, ‘ஒரே அறிக்கை, ஒரே கொள்கை, ஒரே குறிக்கோள்’ என்று இருக்க வேண்டும் என்றார்.
வாஜ்பேயி காஷ்மீர் பிரச்னையை விவாதத்தில் இருந்து வெளியேற்ற விரும்பினார். அதனால்தான் பிரதமரான பிறகு இன்சானியத், ஜம்ஹூரியத், காஷ்மீரியத் என்ற முழக்கத்தை எழுப்பினர். காஷ்மீரில் அவரது கொள்கை இன்னும் பாராட்டப்படுகிறது என்று நீரஜா சௌத்ரி கூறுகிறார்.
ஆனால், 2019இல் இரண்டாவது முறையாக மத்தியில் மோதி ஆட்சிக்கு வந்த பிறகு, காஷ்மீர் தலைவர்கள் எவருடனும் அவர் கலந்து ஆலோசிக்காமல் 370வது சட்டப்பிரிவை நீக்கினார். உள்ளூர் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இணையம், தொலைபேசி வசதிகள் முடக்கப்பட்டன.
காஷ்மீர் பிரச்னையை மோதி அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக நீரஜா சௌத்ரி கருதுகிறார்.
“மோதி அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அதனால், அவர்கள் காஷ்மீர் விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை நீக்கியது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு மிகவும் முக்கியமானது. காஷ்மீர் தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பது பாஜகவின் வெறி,” என்கிறார் நீரஜா சௌத்ரி.
காஷ்மீரின் பிரச்னை மட்டும் தீர்க்கப்படுவதை வாஜ்பேயி விரும்பவில்லை. பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவை மேம்படுத்தவும் அவர் நிறைய முயற்சிகளை மேற்கொண்டார்.
இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், வாஜ்பேயி தனது பதவிக்காலத்தில் பேருந்தில் லாகூர் சென்றார். அப்போது கார்கில் போர் நடந்தது. அந்தக் காயத்தை மறந்து, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பர்வேஸ் முஷரஃப் ஆக்ராவுக்கு வந்தார். இருப்பினும், இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
ஆனால், மோதி அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ‘பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நகர முடியாது’ என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்கிறார்.
கடந்த 2019இல் இந்திய ராணுவத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மோதி அரசின் கீழ் இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் மேலும் சீர்குலைந்துள்ளன.
4. பாஜக-வை நடத்தும் பாணி
ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இன்று 543 எம்.பி.க்களில் 303 எம்.பி.க்களை கொண்ட இந்தக் கட்சி மத்தியில் மோதி தலைமையில் வலுவான அரசாக உள்ளது.
அடல் பிஹாரி வாஜ்பேயி பாஜகவுக்கு அடித்தளமிட்ட வேளையில், நரேந்திர மோதி தனி ஒருவராக கட்சியை ஒருமுறை அல்ல, இரண்டு முறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.
பாஜக உருவானபோது, மற்ற கட்சிகளும் அதனுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால், இந்தக் கட்சி வளர்ந்து, மத்தியில் தனித்து ஆட்சி அமைத்தது. இந்தக் கட்சியின் இந்துத்துவா சிந்தனையும், கட்சித் தலைவர்களின் கடின உழைப்பும் இதற்குப் பின்னால் உள்ள இரண்டு முக்கியக் காரணங்கள்.
வாஜ்பேயி, அத்வானி போன்ற தலைவர்கள் பாஜகவை கட்டியெழுப்பக் கடுமையாக உழைத்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி கூறுகையில், கட்சியை நடத்துவதில் மோதிக்கும் வாஜ்பேயிக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
வாஜ்பேயி காலத்தில் பாஜகவில் உள்ஜனநாயகம் இருந்தது. அனைவரின் கருத்தும் கூட்டாக விவாதிக்கப்பட்டது. தனிநபரைவிட கட்சி பெரியதாக இருந்தது. ஆனால், தற்போதைய பிரதமர் கட்சியைவிட தன்னைப் பெரியவராகக் கருதுகிறார். கட்சியில் முடிவுகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மோதி அஞ்ச வேண்டும்,” என்று பிபிசி மராத்தியிடம் பேசிய சுதீந்திர குல்கர்னி கூறினார்.
மோதி ஆட்சியில் உள்கட்சி ஜனநாயகம் மறைந்து வருவதாகவும் குல்கர்னி வருத்தம் தெரிவித்தார்.
மாறாக, வாஜ்பேயின் முடிவுகளை சக உறுப்பினர்கள் எதிர்த்தனர். ஆனால், அவரது தலைமை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனித்து நின்று கட்சி நடத்துவது அவரது இயல்பில் இல்லை. தாம் பிரதமர் ஆனபோது எல்.கே.அத்வானி, பிரமோத் மகாஜனிடம் கட்சி ஒப்படைக்கப்பட்டது என்று அபிஷேக் சௌத்ரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5. மோதி மற்றும் வாஜ்பேயின் இந்துத்துவா அரசியல்
நீரஜா சௌத்ரியின் கருத்துப்படி, இந்துத்துவா என்பது பாஜகவின் மரபணு. மோதியும் வாஜ்பேயியும் இந்துத்துவா அரசியலைக் கைவிடவில்லை. ஆனால், இரு தலைவர்களின் இந்துத்துவா அரசியலில் அடிப்படை வேறுபாடு உள்ளது. அதுதான் ‘உள்ளடக்கம்’.
நாங்கள் யாரையும் சுரண்ட மாட்டோம், யாரையும் மோசமாக நடத்த மாட்டோம் என்று 2014க்கு பிறகு மோதி கூறியிருந்தார். ஆனால், இப்போது மக்கள் அவரை இந்து இதயங்களின் ராஜாவாக கருதத் தொடங்கியுள்ளனர் என்கிறார் அபிஷேக் சௌத்ரி. ராமர் கோவில் திட்டம் ஒரு அறக்கட்டளையின் நிகழ்வு. ஆனால், அதைத் தேசிய விழாவாக மோதி கொண்டாடினார். இதன்மூலம் இந்துக்களின் அடையாளத்தை ஆழப்படுத்த மோதி முயல்வதாகக் கூறுகிறார் அவர்.
“நான் இந்துக்களின் தலைவர், அந்த முகத்தை நான் மறைக்கமாட்டேன்’ என்பது மோதியின் நடத்தையில் நேரடியாகத் தெரியும். இது தேர்தலில் மோதிக்கு நேரடியாகப் பலனளிக்கிரது,” என்று சௌத்ரி சுட்டிக்காட்டுகிறார்.
மோதி ஆக்ரோஷமான இந்துத்துவா அரசியலில் ஈடுபட்டாலும், அக்கட்சியின் ‘பிராமண-பனியா கட்சி’ பிம்பத்தைத் துடைத்தெறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆளும் மாநிலங்களில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகிய பதவிகளில் அனைத்து சாதிகள், பழங்குடியினரை சேர்ந்தவர்களும் உள்ளனர். மண்டல், கமண்டல் இரண்டையும் அரசியலாக்க மோதி முயல்வதாகவும் கூறப்படுகிறது.
“மறுபுறம், வாஜ்பேயின் இந்துத்துவா அரசியல் பெருமளவில் அனைவரையும் உள்ளடக்கியது. அவர் நாட்டின் பல்வேறு கூறுகளைக் கொண்டுவரப் போராடினார். அவர் இந்துத்துவாவின் மென்மையான முகமாகப் பார்க்கப்படுகிறார். அவரது இந்துத்துவா அரசியல் ஒருபோதும் ஆக்ரோஷமாக மாறவில்லை. ஒருவேளை வாஜ்பேயி பிரதமரானபோது, அவர் ஒரு கூட்டணி ஆட்சியை நடத்தியது. அதனால்தான் அவர்களால் வலுவான இந்துத்துவாவின் பக்கம் செல்ல முடியவில்லை,” என்று அபிஷேக் சௌத்ரி கூறுகிறார்.
இதற்கிடையில் வாஜ்பேயின் இந்துத்துவா அரசியலும் பழமைவாத மனப்பான்மை கொண்டது என்று விமர்சிக்கப்படுகிறது.
Source: BBC.com