டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தாண்டு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பங்கேற்றார்.
டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு திரௌபதி முர்முவும் இமானுவேல் மக்ரோங்கும் சிறப்பு அலங்கார குதிரை வண்டியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பிரிவினர் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் இருவரையும் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.
இதையடுத்து, தேசிய கீதம் ஒலிக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு.
பின்னர், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்படும் பீரங்கி வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
தொடர்ந்து, ஒவ்வொரு நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
75-ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலை பகுதியில் உள்ள உழைப்பாளா் சிலை அருகே செய்யப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஆளுநா் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், ஆளுநா் ஆர்.என்.ரவி, முப்படையினா், காவல்துறையினா், தேசிய மாணவா் படை, பல்வேறு காவல் பிரிவினா், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடா்ந்து, பல்வேறு கலைக் குழுக்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
விருதுகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கினார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர், சமூக நல்லிணக்கத்திற்கான ‘கோட்டை அமீர்’ விருது ‘ஆல்ட் நியூஸ்’ உண்மை சரிபார்ப்பு தளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு வழங்கப்பட்டது. போலி செய்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் பணிக்காக, இவ்விருது முகமது ஜுபைருக்கு வழங்கப்பட்டது. இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்காக சுமார் ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
திருந்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடா்பான காந்தியடிகள் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குடியரசு தின விழா ஏன் கொண்டாடுகிறோம்?
இந்திய குடியசு நாள் பேரணி எங்கு தொடங்கும், ஜனவரி 26ஆம் தேதி ஏன் குடியரசு நாளாக தெரிவானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்ற எத்தனை நாட்கள் ஆனது, அரசமைப்புச் சட்டம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட முக்கிய தகவல்களை பிபிசி தமிழ் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது.
குடியரசு என்றால் என்ன?
மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு ‘ஜனநாயகம்’ (Democracy) என்று அழைக்கப்படுகிறது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு ‘குடியரசு’ (Republic) எனப்படுகிறது.
குடியரசு நாள் என்றால் என்ன? குடியரசு நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும். அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act , 1935) இந்த தகுதியைப் பெற்றிருந்தது.
சுதந்திரம் அடைந்த பின்னரும் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு நிர்வாகத்துக்கும் அச்சட்டமே அடிப்படையாக இருந்தது.
அந்த சட்டம் நீக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் (Constituent Assembly) ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் அமலான நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியா எப்பொழுது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது?
1947 ஆகஸ்டு 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.
அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவால் (Drafting Committee) உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக 1950, ஜனவரி 26 அன்றுதான் அமலுக்கு வந்தது என்றாலும், குடியுரிமை, தேர்தல், இடைக்கால அரசு, இடைக்கால நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்த சரத்துகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளாக எப்படி ஆனது?
1929 டிசம்பரில், பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேறியது.
1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்தத் தேதியை விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர் ஜனவரி 26 அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் குடியரசு நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
குடியரசு நாள் அணிவகுப்பு எங்கு தொடங்கும்? எந்த இடத்தில் முடியும்?
ஆண்டுதோறும் குடிரசு நாள் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும்.
1950 முதல் ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷனல் ஸ்டேடியும் வரை மட்டுமே இந்த அணிவகுப்பு நடக்கும்.
குடியரசு நாள் அணிவகுப்பின் மரியாதையை யார் ஏற்றுக்கொள்வார்?
இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியான (Commander-in-Chief ) இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசு நாள் அணிவகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
வேறு நாட்டு அரசின் தலைவர் (பிரதமர் அல்லது அதிபர்) இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார். இந்த ஆண்டு தலைமை விருந்தினராகப் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காரணமாக தமது பயணத்தை ரத்து செய்து விட்டார்.
குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மாநில தலைநகரங்களில் யார் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார்கள்?
1973 வரை மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில ஆளுநர்தான் குடியரசு நாள், விடுதலை நாள் ஆகிய இரு கொண்டாட்டங்களின்போதும் தேசியக் கோடியை ஏற்றினார்கள்.
அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவதைப் போல மாநில முதல்வர்களும் விடுதலை நாள் கொண்டாத்தின்போது கொடியேற்ற வேண்டும் என்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார் .
அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் 1974 முதல் ஆளுநர்களும், விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடி ஏற்றுகின்றனர்.
‘பாசறை திரும்புதல்’ (beating retreat) எனப்படும் நிகழ்வு எப்போது எங்கு நடக்கும் ?
குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வு ‘பாசறை திரும்புதல்’ எனப்படும்.
குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஜனவரி 29, மாலை இந்திய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ள விஜய் சவுக்கில் நடக்கும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தது யார்?
1916இல் தமது ‘இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி’ (A National Flag for India) எனும் நூலை வெளியிட்டார் பிங்கலி வெங்கய்யா. அதில் 13 வெவ்வேறு வடிவமைப்புகள் இருந்தன.
1921இல் விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது மாகாத்மா காந்தியைச் சந்தித்த இவர் தேசியக் கொடியின் தேவை குறித்துக் கூறினார்.
காந்தியும் ஒரு புதிய கொடி வடிவமைப்பு வேண்டும் என்று கூறவே மூவர்ணக் கொடியின் நடுவே, ராட்டை இருக்கும் கொடியை உருவாக்கினார் பிங்கலி வெங்கய்யா.
சுதந்திரத்துக்கு முன் கொடியின் நடுவே இருந்த ராட்டை அசோகச் சக்கரமாக மாற்றப்பட்டது.
தேசிய வீர தீர விருதுகள் என்று வழங்கப்படும்?
போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள் குடியரசு நாள், விடுதலை நாள் ஆகிய சமயங்களில் வழங்கப்படும்,
இந்தியாவின் முதல் குடியரசு தினத்தின் பொழுது இந்தியக் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
ஜனவரி 24, 1950 அன்று அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினர்கள், அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், அதன் இந்தி மற்றும் ஆங்கில பிரதிகளில் கையெழுத்திட்டனர்.
அன்று முதல் அந்த மன்றத்தின் தலைவராக இருந்த மருத்துவர் ராஜேந்திர பிரசாத் இந்தியக் குடியரசின் முதல் தலைவரானார்.
அரசியல் நிர்ணய மன்றம் இடைக்கால நாடாளுமன்றம் ஆனது.
இந்திய அரசமைப்புச் சட்டம் எத்தனை நாட்களில் உருவாக்கப்பட்டது?
டிசம்பர் 9, 1946 அன்று இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கழித்து நவம்பர் 26, 1949 அன்று புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Source: BBC.com