பிகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று காலை கொடுத்தார்.
அதனுடன், அவர் அங்கம் வகித்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார்.
கடந்த 2022 வரையில், நிதிஷ்குமார் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து, பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்தார்.
பின், தன்னால், தனித்து செயல்பட முடியவில்லை எனக்கூறி, ஆகஸ்ட் 2022 பாஜக உடனான உறுவை முறித்துக்கொண்டு, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் முதல்வராக இருந்தார்.
அதைத் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியிலும் அவர் அங்கம் வகித்து வந்தார்.
‘இந்தியா’ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் இன்று (ஜனவரி 28) காலை 11 மணியளவில், தனது ராஜினாமா கடிதத்தை பிகார் மாநில ஆளுநரிடம் அளித்தார்.
முன்னதாக, கட்சியின் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு, அவர் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தொடர்ந்து, நிதிஷ்குமாரின் இல்லத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடக்கவுள்ளது.
பிகாரில் யாருக்கு எவ்வளவு பலம்?
ஆர்ஜேடி ஆதரவுடன் ஜேடிஏ தலைமையிலான நிதிஷ் குமாரின் அரசு சில காலமாக நீடிக்கிறது. துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.
ஹிந்துஸ்தானி பொது மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மஞ்சி பிபிசியிடம் கூறுகையில், பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமார் புதிய ஆட்சி அமைக்கப் போகிறார், என்றார்.
243 இடங்கள் கொண்ட பிகார் சட்டசபையில் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜேடியுவுக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
Source: BBC.com