Press "Enter" to skip to content

மணிப்பூர் வன்முறை: ஆறாத காயங்கள் இன்னும் ஆழமாகும் கொடுமை – பிபிசி கள ஆய்வு

  • எழுதியவர், வினீத் கரே
  • பதவி, பிபிசி நியூஸ், மணிப்பூர்

மணிப்பூரில் வன்முறைகள் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகின்றன. ஆனால் மாநிலம் முழுவதுமிருந்து உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக நடந்துவரும் துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினரும் பொதுமக்களும் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய வந்த உள்துறை அமைச்சகக் குழு, அங்குள்ள தலைவர்கள், அதிகாரிகள், அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த வன்முறைச் சூழலில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது.

யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பிபிசியிடம் பேசியபோது, “எட்டு மாதங்களாக பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஒரு மணி நேரம் கூட இம்பாலுக்கு வந்து அவர் இந்த மக்களுக்காகச் செலவிடவில்லை,” என்றார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

துக்கத்தில் இருக்கும் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெய்தேய் ஆதிக்கம் நிறைந்த அகாஷோய் கிராமத்தை அடைந்தோம்.

இங்கு ஜனவரி 10ஆம் தேதி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் வீடு திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களது உடல் அருகில் உள்ள மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த ஓனம் ரொமைன் சிங், அஹந்தேன் தாரா மெய்தேய், தௌதம் இபோம்சா மெய்தேய் மற்றும் அவர்களது மகன் தௌதம் ஆனந்த் சிங் ஆகியோர் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்காக மரம் விற்று ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்து வந்தனர். அவர்களை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

நாங்கள் அவர்களது வீட்டை அடைந்தபோது, ​​இறந்தவர்களின் படங்கள் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன. தாரா மெய்தேயின் மனைவி அழுதுகொண்டே மயங்கிவிட்டார். குடும்பத்தினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

ஓனம் ரொமைன் சிங் இறந்த செய்தி வந்ததில் இருந்து, அவரது மனைவி பிரமோதினி லீமா சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். வீட்டில் உள்ள பொருட்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த கட்டிலில் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார். குழந்தைகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதாக ஓனம் தனது பிள்ளைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தேர்வு முடிவுகள் வந்துள்ளன. ஆனால் குடும்பத்துக்காக உழைத்துப் பணம் சம்பாதிக்க காட்டுக்குச் சென்ற ஓனம் திரும்பி வரவில்லை.

எல்லோர் கண்களிலும் கண்ணீர் மட்டுமே வழிந்துகொண்டிருந்தது. அம்மா லீமா பேசும்போது சத்தமாக அழுது கொண்டிருந்தாள்.

இறந்தவர்களில் அவரது மருமகன் தௌதம் இபோம்சா மெய்தேய் மற்றும் பேரன் தௌதம் ஆனந்த் சிங் ஆகியோரும் அடங்குவர். அந்த மூன்று வீடுகளைத் தவிர அவருக்கு ஒரே ஒரு வீடுதான் இருந்தது.

“நாங்கள் அழுதால் யாருக்காக அழுவது? என் மருமகளுடன் அழுங்கள். என் மகன் போனதற்காக, அல்லது என் மகளுக்காக, மகனும் கணவனும் போய்விட்டார்கள். யாருக்காக நாங்கள் கண்ணீர் விட வேண்டும்?”

இந்த கொலை கொடூரமாக நடந்துள்ளது. இவர்கள் சிறிய தகராறில் சாதாரணமாகக் கொல்லப்பட்டிருந்தால் நாங்கள் எதுவும் சொல்லாமல் இருந்திருப்போம். ஆனால் நிராயுதபாணியாக இருந்த விறகுவெட்டியை கொடூரமாக தாக்கி யாரோ சிலர் கொன்றதை எண்ணி மிகுந்த வருத்தம் அடைந்து அந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.”

“நாங்கள் வாழ விரும்புகிறோம், ஆனால் எப்படி, ஏன் வாழ வேண்டும்? மரணம் எப்போது வரும் என்று கூட தெரியாத அளவுக்கு பயம் அதிகரித்துள்ளது,” என்கிறார் தௌதம் இபோம்சா மெய்தேயின் மனைவியும், இறந்துபோன ஒனம் ரோமைன் சிங்கின் சகோதரியுமான தூதன் சுமிலா லீமா.

மிகவும் வறுமையில் வாடும் இக்குடும்பங்களின் எதிர்காலம் நிச்சயமற்றது. பாதுகாப்பு நிலைமை கவலையை மேலும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் கூடாரம் போன்ற இடங்களைப் பார்த்தோம், இரவு நேரங்களில் இங்கு மக்கள் காவல் காக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

இந்த வன்முறை கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மெய்தேய் சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

இதற்கு மணிப்பூரின் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், முக்கியமாக குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

வன்முறை பயத்தின் சூழலில் தவிக்கும் மக்கள்

ஆகாஷோய் கிராமத்திற்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் ஹௌடக் தம்ஃபக்னாவ் கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு சற்று தொலைவில் மலைகள் மற்றும் மரங்கள் நிரம்பியுள்ளன.

கிராமத்தில் அமைதி நிலவியது, சாலைகள் காலியாக இருந்தன. அங்கே சில ஆண்களுடன் சுனில் மைஸ்னமைக் கண்டோம். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, விவசாயத்தை நம்பியுள்ள சுமார் 400 பேர் வசிக்கும் இந்த மெய்தேய் கிராமத்தில் 100 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்று அவர் கூறினார்.

“இங்கிருக்கும் பெண்கள், குழந்தைகள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது இங்கு ஆண்கள் மட்டுமே வசிக்கின்றனர். எங்கிருந்தோ தோட்டாக்கள் வரலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தான் வாழ்ந்து வருகிறோம். நாங்களும் இங்கிருந்து சென்றால் எங்கள் வீடுகளை தீ வைத்து எரித்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது,” என்கிறார் அவர்.

திரும்பி வரும்போது, ​​நாங்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய வீட்டை அடைந்தோம். அங்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 45-50 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒருபுறம் மெத்தைகளும், படுக்கைக்குத் தேவையான பொருட்களும் குவிந்திருந்தன. சில சிறு குழந்தைகள் காலியான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அது பகல் நேரமாக இருந்ததால் அங்கே சிறிதளவு வெப்பம் நிரம்பியிருந்தது.ஆனால் இரவில் இங்கே குளிர் அதிகமாக இருக்கிறது.

இங்கு வசிக்கும் ரேவிகா எங்களிடம் கூறுகையில், அனைவரும் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி இங்கு தஞ்சமடைந்ததாகத் தெரிவித்தார்.

“இவ்வளவு துணிகளோ, போர்வைகளோ கூட கொண்டு வரவில்லை. இரவில் தூங்கும் போது, ​​போர்வையின் மேல் பகுதியில் அதிகளவு தண்ணீரில் நனைந்துவிடுகிறது. கடும் குளிரில் நாங்கள் தூங்க வேண்டும். இங்கு இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது” என்றார் அவர்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

நிவாரண முகாமில் கழியும் நாட்கள்

உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.

இம்பாலில் செயல்படும் நிவாரண முகாமில் உள்ள ஒரு பெரிய ஹாலில் மற்ற குடும்பங்களுடன் வசித்து வரும் 26 வயதான மைப்ராம் விக்டோரியா சானு, சமீபத்தில் விவசாயத்தில் மேல்நிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த முகாமில் 79 பேர் வசித்து வந்தனர். குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூரில் உள்ள மெய்தேய் குடும்பத்தில் பிறந்த விக்டோரியா, குகி மற்றும் மிசோ சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் வளர்ந்ததாகவும், ஆனால் வன்முறையில் அவரது வீடு அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மற்ற குடும்பங்களைப் போலவே, அவர்களின் வீட்டுப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டன.

எங்களிடம் பேசிய அவர், “இது மிகவும் விசித்திரமானது. நாங்கள் இவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு எங்கள் உறவு முறிந்தது. அவர்களும் நானும் தொடர்பு கொள்ளவில்லை. எங்களுக்கு இடையே இடைவெளி உள்ளது. இந்த தூரம் அதிகரித்து வருகிறது. என்ன நடக்கும் என்று தெரியவில்லையா,” என்றார்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு இந்தக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை இப்படி மாறும் என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாது. எங்கள் உரையாடலில், பலர் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் உரிமைகளுக்கான அமைப்புகள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர்.

செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு பதிலளித்த மணிப்பூரின் பாதுகாப்பு ஆலோசகர், “நான் ஏன் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்? மக்கள் சொன்னாலோ அல்லது நான் என் கடமையைச் செய்யவில்லை என்று உணர்ந்தாலோ, அன்றே ராஜிநாமா செய்வேன். முழு 24 மணி நேரமும், தூக்கம் மற்றும் உணவு என எதையும் எதிர்பார்க்காமல் நான் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். அவர்களை பணியமர்த்தல் மற்றும் அவர்களின் செயல்பாடுகளில் அவர்களுடன் இணைந்து நான் பணியாற்றி வருகிறேன்,” என்றார் அவர்.

பாதுகாப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது.

இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைப்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் யோசனைக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகின்றன.

ஓய்வுபெற்ற அதிகாரியும் கட்டுரையாளருமான மருத்துவர் ஆர்.கே. நிமாய் சிங் பேசிய போது, “இந்தியாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக இன வன்முறை தொடர்வதை நீங்கள் பார்த்தீர்களா? அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். மணிப்பூரில் மட்டும் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் வரை நீடித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது காட்டுகிறது,” என்றார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

இம்பாலில் இருந்து பல பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைக் கடந்து சுராசந்த்பூரை அடைந்தபோது, ​​அங்கு பெரும் கூட்டம் கூடியிருந்தது. பேச்சாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தனர். மாநிலத்தின் பிரேன் சிங் அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதும், தனி நிர்வாகம் கோருவதும் மக்களின் கைகளில் இருந்த பதாகைகளின் மூலம் தெரிந்தது.

பல மாதங்களாகியும், இந்தப் பக்கமும் வலியின் ஆழம் குறையவில்லை என்பதைக் காட்டுவதற்காக, வாரந்தோறும் இங்கு இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வன்முறை தொடங்கியபோது தனது கணவருடன் இம்பாலில் லிங்னேகி லங்டின் என்பவர் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்று நாட்களுக்கு முன் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது. மே 4 அன்று தனது கணவரும் சகோதரனும் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், மிகவும் சிரமத்துடன் தான் தப்பித்ததாகவும் துயரத்துடன் அவர் கூறினார்.

அருகில் வசிக்கும் ஜாங்லெட் ஹாக்கிப், மே 3 அன்று இரவு, அவரது மருமகன் நெஹ்மின்லுன் ஒரு கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறினார்.

“அந்தச் சம்பவத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் மிகவும் வருத்தப்படுகிறேன்,” என்று நெஹ்மின்லுனின் மாமா ஜாங்லெட் ஹாக்கிப் கூறினார். “நாம் பார்த்த கஷ்டங்கள் மற்றும் காயங்களை வார்த்தைகளில் சொல்வது கடினம். எதிர்காலத்தைப் பற்றி நினைத்தால் அது மிகுந்த கவலை அளிக்கிறது.”

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

இன்னும் நிலைமை சீரடையாதது ஏன் என, வேதனையுடன் வாழும் மக்கள் கேட்கின்றனர். இதன் விளைவாக, தலைநகர் இம்பாலுக்கும் குகி ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூருக்கும் இடையிலான வழக்கமான தொடர்புகள் இன்னும் தெளிவான நிலையை அடையவில்லை.

இது 47 வயதான சின்கோனெங் பேத்தே போன்றவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது. நிவாரண முகாமில் வசிக்கும் சின்கோனெங்கிற்கு மார்பக புற்றுநோய் பாதிப்பும் இருப்பதால் அவர் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறார்.

வீட்டில் இருந்த அனைத்து சொத்துக்களும் சிகிச்சைக்காக விற்கப்பட்டன. முன்னதாக சிகிச்சைக்காக இம்பாலுக்குச் சென்ற சின்கோனெங், இப்போது சாலை வழியாக ஐஸ்வால் சென்று அங்கிருந்து கவுகாத்தி செல்ல வேண்டியுள்ளது.

முன்பெல்லாம் இரண்டு மணிநேரம் எடுத்த பயணத்துக்கு இப்போது கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் செலவழிக்கவேண்டியுள்ளது. சிகிச்சைக்குச் சென்று திரும்பி வரும் போது, அவர் மிகவும் சோர்வாகிவிடுகிறார். இந்த பயணத்துக்காக அவர் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய அவர், “எதிர்காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. எனது பழைய வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன். இங்குள்ளவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும் உதவிகரமாகவும் இருந்தாலும், இங்கு வசிக்கும் ஏராளமான மக்களுக்கு இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இது மிகவும் சவாலான வாழ்க்கையாக உள்ளது. ஆம். இந்தக் கட்டடம் ஒரு அரசுப் பள்ளிக்குச் சொந்தமானது. எவ்வளவு நாள் வரை நாங்கள் இங்கு தங்கியிருக்கமுடியும்? என் நோய்க்குக் கூட இந்தச் சூழ்நிலை உகந்ததாக இல்லை,” என்றார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூரில் உள்ள உள்ளூர் மக்கள், தங்களுக்கு தனி நிர்வாகம் கிடைக்கும் வரை நிலைமை சீரடையாது என்றே எண்ணுகின்றனர்.

இது போன்ற ஒரு சூழ்நிலை இங்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. வழியில் பாட்டில்களில் கல்லெண்ணெய் விற்பவர்களைக் கண்டோம். அப்பகுதி மக்கள் கூறுகையில், பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

பழங்குடியின மக்கள் மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கிஞ்சா வுவல்சாங் கூறுகையில், “இரு தரப்பிலும் அதிக ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. பல உயிர்கள் பலியாகியுள்ளன. இரு தரப்பு மக்களும் இனி ஒன்றாக வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. மத்திய அரசு எங்களின் அரசியல் கோரிக்கையை ஏற்று தனி நிர்வாகம் வழங்க வேண்டும் என நாங்கள் கோருகிறோம். இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் அமைதி ஏற்படும்,” என்றார்.

ஆனால் இந்த கோரிக்கையை மெய்தேய் மக்கள் எதிர்க்கின்றனர். மெய்தேய் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்பான கோகோமிக்கு ராகுல் காந்தியின் நியாய யாத்திரையின் மூலம் என்ன நம்பிக்கை ஏற்பட்டுள்ளது?

கோகோமி அமைப்பைச் சேர்ந்த அதுபா குரிசாம் இது குறித்துப் பேசியபோது,”எங்கள் பார்வையில், இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைத்து சரியாக செயல்படுவதை நாங்கள் பார்க்கவில்லை. ஆம், மணிப்பூரை பாஜக எவ்வாறு கையாளுகிறது என்பது குறித்து ராகுல் ஜி நாடாளுமன்றத்தில் பல முறை அதிருப்தி தெரிவித்தார். ஆனால் மணிப்பூரின் பிரச்னை 2008ல் இருந்து தொடங்குகிறது. மேலும் 2008 முதல் 2017 வரை மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. 2014ல் டெல்லியிலும், 2017ல் மணிப்பூரிலும் ஆட்சி மாறியது. ஆனால் கொள்கை அப்படியே இருந்தது,” என்றார் அவர்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நியாய யாத்திரையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?

அமைதியைத் தேடும் பொதுமக்கள்

மெய்தேய் மற்றும் குகியின மக்களின் இருதரப்பும் அமைதியை விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் சாமானிய மக்கள் தற்போதைய நிலைமையின் சுமைகளைத் தாங்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற அதிகாரியும் கட்டுரையாளருமான மருத்துவர் ஆர்.கே. நிமாய் சிங் இது குறித்துப் பேசியபோது, “இரு தரப்பும் தங்கள் கருத்துகளில் உறுதியாக இருப்பதால் நிலைமை மோசமாக உள்ளது. மெய்தேய் மற்றும் குகி இன மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள். ஏனெனில் பொருளாதாரம், சுகாதாரம் அல்லது கல்வி என எதுவாக இருந்தாலும், இது போன்ற பிரச்னைகள் மாநிலத்தின் நிலையை பாதிக்கின்றன. சூராசந்த்பூரில் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையின் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது. இருபுறமும் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டன.தலைவர்கள் வசதியாக இருக்கிறார்கள், ஆனால் சாதாரண மக்கள் கவலையில் உள்ளனர்,” என்றார்.

எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவல், ஆயுதங்களின் பயன்பாடு, போதைப்பொருட்களின் பங்கு போன்றவற்றின் மீதான விவாதங்களுக்கு மத்தியில், மணிப்பூரில் உள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வன்முறையின் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கே மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகவும் அதிகரித்து விட்டது. முன்பு ஒருவர் மற்றவரின் துக்கங்களிலும், இன்பங்களிலும் பங்கெடுத்துக் கொண்ட நிலை மாறி, காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஒருவரையொருவர் தொலைத்துவிட்டனர். இந்த வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் மிகவும் ஆழமானவை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »