தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகர் விஜய் அறிவித்தார்.
மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், கமலஹாசன் ஆகியோரது வரிசையில் நடிகர் விஜய்யும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அதை உறுதி செய்யும் வகையில் சமீப காலமாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கட்சியின் பெயரோடு அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் விஜய். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களின் எதிர்வினை என்ன?
“இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. நடிகர் விஜயின் முடிவுக்குப் பாராட்டுகள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்,” என்று கூறியுள்ளார் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “மண்ணை ஆள்வதற்கு முன்னால், தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை தம்பி விஜய்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை, ‘வா தம்பி’ என தட்டிக் கொடுத்துதான் வரவேற்க வேண்டும். இந்த அரசியல் களத்தில் கூடுதலாக ஒருவர் வந்து வேலை செய்வது வலிமைதான். நான் ஒரு வகையில் உதவுகிறேன் என்றால் அவர் ஒருவகையில் உதவ வருகிறார்,” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “பிற நடிகர்கள், முதல்வரிடமும், உதயநிதியிடமும் நிவாரண நிதியைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள். ஆனால் விஜய் களத்தில் நின்று உதவினார். இதெல்லாம் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயல். நூலகம் திறக்கிறார், புத்தகங்களைப் படிக்கச் சொல்கிறார், நான் சொல்வதைவிட ஒரு புகழ் பெற்ற நடிகர் வந்து சொல்வது நல்லதுதானே. இது வரவேற்கத்தக்கது,” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆனால் “நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது. தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும், நம்மை இந்தியாவை ஆள விடமாட்டார்கள். பெருந்தலைவர் காமராஜரால்கூட முடியவில்லையே! அதனால் சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தட்டும்,” என்றார்.
“ஏற்கெனவே ஒருமுறை இதுகுறித்துக் கேட்கப்பட்ட போது, அதை வரவேற்றிருந்தேன். இப்போதும் அதேதான். அவரிடம் முற்போக்குப் பார்வை, சிந்தனை இருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” எனக் கூறினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, “விஜய் கட்சி தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால் திரைப்படத்தில் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
‘விஜய் அரசியலில் கரை சேர்வாரா என பார்ப்போம்’
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். 10 பேர் சேர்ந்துகூட கட்சியை ஆரம்பிக்கலாம். அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. அரசியல் என்பது ஒரு பெருங்கடல், ஒரு சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் நீந்திக் கரை சேரும் நபர்களும் உண்டு, மூழ்கிப் போகும் நபர்களும் உண்டு. எனவே, இப்போது அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் நீந்திக் கரை சேர்கிறாரா அல்லது மூழ்கிப் போகிறாரா என்பதைத் தேர்தலில்தான் பார்க்க வேண்டும்,” என்றார்.
மேலும், “அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதிமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாகக் கட்டிக்காத்து 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியாக மாற்றியவர் அம்மா ஜெயலலிதா. அதேபோல இப்போது அண்ணன் எடப்பாடி தலைமையில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியில் யாராலும் கை வைக்க முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். ஆனால், இங்கே மக்கள்தான் எஜமானர்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “பல பேர் அறிவிப்போடு நிறுத்தியதை, திரும்பப்பெற பெற்றதை, தோல்வி அடைந்ததைச் செய்து காட்டிவிட்டார் விஜய். ஆனால், இனிமேல்தான் அவருக்கு சோதனை காலம்.
இதுவரை ஆதரித்த பத்திரிக்கையாளர்கள், அவரது கொள்கையைப் பொறுத்துதான் அவரை ஆதரிப்பார்கள். மக்களுக்கு என்ன செய்வார் என்பதை வைத்துதான் அவரது வெற்றி அமையும். திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். படத்தில் நடித்தால்தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க முடியும். எனவே ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் திரைப்படத்தில் பெரிய வசூல் நடிகரான விஜய் திரைத்துறையை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அரசியலுக்காக திரைப்படத்தை விட்டு விலக வேண்டியதில்லை. ஏனென்றால், எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘இதயக்கனி’ போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்தார். அதனால், விஜய் நடித்துக்கொண்டே அரசியலிலும் இயங்கலாம். அதுதான், திரைப்படம்த்துறைக்கும் நல்லது,” என்றார்.
“தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
‘தமிழ்நாடு’, ‘தமிழகம்’ சர்ச்சை
கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திரைப்படப் பணிகளை முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்நிலையில், அவர் நடிப்பதை நிறுத்திவிடக்கூடாது எனவும், அரசியலில் தொடர்ந்து கொண்டே நடிக்கவும் வேண்டுமென அவரது ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.
அதேவேளையில் கட்சியின் பெயரில் ‘தமிழ்நாடு’ என்பதைத் தவிர்த்து ‘தமிழகம்’ என வைத்ததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
“ஆறு மாதங்களுக்கு முன்பு “தமிழகம்” என்ற வார்த்தை தவறு “தமிழ்நாடு” என்றுதான் சொல்ல வேண்டும் என வாக்கு மொத்த மக்களும் பாஜகவினருக்கு எதிராகப் போராடினார்கள். இன்று அதுவே ஒரு கட்சியின் பெயராகப் பதிவு செய்யப்பட்டது வியப்பளிக்கிறது” என்பது போன்ற கருத்துகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது.
இதுகுறித்துப் பேசிய மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கவிஞர் சினேகன், “தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிப் பெயர் குறித்து குறை சொல்கிறார்கள். பெயரில் எந்த பிரச்னையும் இல்லை. தமிழ்நாடோ தமிழகமோ, பெயரைவிட கட்சியின் கொள்கை என்ன என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும்,” என்றார்.
“புதிதாக அரசியலுக்கு வரும் ஒரு நபரின் மீது உடனடியாக விமர்சனங்களை வைப்பது நல்லதல்ல. வரவேற்கத்தான் வேண்டும். மக்கள் நீதி மய்யத்திற்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ அவர் போட்டியில்லை. எல்லோருக்கும் தனித்தனி பாதைகள் உண்டு. சமூகத்தில் நல்லது நடக்க யார் வந்து கேள்வி கேட்டாலும் அதை வரவேற்போம்,” என்று கூறினார்.
Source: BBC.com