Press "Enter" to skip to content

ட்ரோன் மூலம் கண்ணீர்ப்புகை வீச்சு: காவல்துறை தடைகளை மீறி டெல்லியை நோக்கி முன்னேறும் விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா – பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் வைத்திருக்கின்றனர் விவசாயிகள்.

இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் – ஹரியாணா மாநில எல்லைப் பகுதியை செவ்வாய்கிழமை மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. பதிலுக்கு காவல்துறையினர் மீது விவசாயிகள் கற்களை வீசினர்.

விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டு, நாளைய தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியிருந்தார். இரவில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு முகாமிட்ட விவசாயிகள் இன்று மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

ட்ரோன் மூலம் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டுகள்

கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி நகர் முழுவதும் முள் கம்பி வேலிகள், சிமெண்ட் கற்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில், ஆயுதமேந்திய போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் காவலில் உள்ளனர்.

கடந்த முறை தொடர் போராட்டத்தின் காரணமாக, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி

அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை ‘டெல்லி நோக்கி அணிவகுப்போம்’ என்ற பேரணியை தொடங்கினர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ‘தில்லி சலோ’ கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.

மேலும் பேசிய தலேவால், “அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெற பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,”என்றார்.

விவசாயிகள் போராட்டம்

2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் ஆதார விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.

விவசாயிகள் போராட்டம்

இரண்டு ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராடுவது ஏன்?

முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர்.

விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.

பிபிசியிடம் பேசிய அவர், “தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை வாய்ப்பாடு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார்.

தலேவால் கூறுகையில், “அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »