தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், 12 பேர் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 ஆயிரத்து 543 பேர் தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. எனினும் சீனாவில் இருந்து தமிழகம் வந்த 646 பேரும், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த 153 பேரும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களின் தொலைபேசி எண், முகவரி ஆகியவை சுகாதாரத்துறையிடம் இருக்கிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனை வசதி கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai