மதுரை அருகே 105 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டி ஒருவர், தன் வழிவந்த 5 தலைமுறையினருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார்.
மேலூர் அருகே சிலோன் காலனியைச் சேர்ந்தவர் வீரையா என்பவரின் மனைவி செல்லம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களும், இவர்களது பிள்ளைகளும் மதுரை, புதுக்கோட்டை, கோவை, உதகை என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ளனர்.
105 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் செல்லம்மாளின் குடும்பம், 5 தலைமுறையை அடைந்துள்ளது. இவர்களில் மகன், மகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் என 50-க்கும் அதிகமானோர், சிலோன் காலனியில் ஒன்று கூடினர். தங்கள் குடும்பத்தின் மிக மூத்த உறுப்பினரான செல்லம்மாளை கேக் வெட்ட வைத்து, அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
மேலும், அவரது கைகளால் திருநீறு பூச வைத்து ஆசிகளையும் பெற்றனர், செல்லம்மாளின் வம்சாவளியினர். சின்னஞ்சிறு குழந்தைகள் வரை திரண்டு, 104 வயதைக் கடந்த மூதாட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடி ஆசிகளைப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai