மும்பை : பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்., 1) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன.
2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று சனிக்கிழமை என்றபோதும் பட்ஜெட்டை ஒட்டி இன்று பங்குச்சந்தைகள் செயல்பட்டன. காலையில் வர்த்தகம் துவங்கும் போது சிறிய அளவிலான சரிவு இருந்த நிலையில் 3 மணியளவில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1060 புள்ளிகள் சரிந்து 39,663.70ஆகவும், நிப்டி 316 புள்ளிகள் சரி்ந்து 11,646ஆகவும் சரிந்து காணப்பட்டன. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 39,735.53ஆகவும், நிப்டி 300 புள்ளிகள் சரிந்து 11,661ஆகவும் முடிந்தது.
நடுத்தர வர்க்கத்திற்கு இந்த பட்ஜெட் சாதகமாக இருந்தபோதிலும் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லாததாலும், நீண்டக்கால முதலீட்டு தொடர்பான திட்டங்களுக்கு எந்த அறிவிப்புகள் இல்லாததாலும் இன்றைய வர்த்தகம் சரிந்ததாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Source: dinamalar