ஸ்மார்ட்போன்களில் என்னதான் வகை வகையாக அறிமுக, செய்யப்பட்டாலும், ஆப்பிள் ஐபோன்களுக்கு என்றுமே மவுசு தான். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடு விற்பனை வளர்ச்சியானது இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனா ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த பிறகு, இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் என அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. இந்த நிலையில் பல நிறுவனங்கள் அடையாளம் தெரியாமலேயே போய்விட்டன.
ஆனாலும் கூட ஐபோன் தரத்திற்கும், அதன் தொழில்நுட்பங்களுக்கும் இன்றளவிலும் கூட இந்தியாவில் அதன் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதன் மூலம் 91.8 பில்லியன் டாலர் வருவாயினை பதிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவிகிதம் அதிகமாகும். இதில் சொல்லும் படியான விஷயம் என்னவெனில் கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சர்வதேச அளவிலான விற்பனையானது அதிகரித்துள்ளதாகவும், இது காலாண்டு வருவாயில் 61% பங்கு வகித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அபார சாதனையானது ஐபோன் மூலமாகத் தான் நிகழ்ந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் காலாண்டு வருவாய் 8% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக புதிய ஐபோன்களான ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் 111 மேக்ஸ், உள்ளிட்ட போன்களின் தேவை இதில் முக்கிய பங்காற்றியதாகவும், இது டிசம்பர் காலாண்டில். 56 பில்லியன் டாலர் வருவாய் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் தான் காரணம் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் நாங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டோம் என்றும், மேலும் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வலுவான விற்பனையை கண்டதாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
Source: Goodreturns