இன்று சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைப் பயம்புறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரளா மற்றும் பெங்களூரில் பல சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல விதமான சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில மருந்து நிறுவனங்கள் கனவிலும் எதிர்பார்க்காத வளர்ச்சியை வெறும் 30 நாட்களுக்குள் அடைந்துள்ளது. இதற்குக் காரணம் கரோனா வைரஸ்.!
சர்வதேச பங்குச்சந்தை
கடந்த ஒரு மாத காலமாகக் கரோனா வைரஸ் எதிரொலியின் காரணமாகச் சர்வதேச பங்குச்சந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் திட்டமிட்டு தங்கத்திலும், அரசு பத்திரங்களிலும் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
ஆனால் சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நிறுவனம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Kawamoto Corporation என்னும் நிறுவனம் முகமுடி (Medical Mask) உட்படப் பல மருத்துவப் பாதுகாப்பு கருவிகளைத் தயாரித்து உலக நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் டிசம்பர் 30ஆம் தேதி வெறும் 447 ஜப்பான் யென்-க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 29ஆம் தேதி கிட்டதட்ட ஒரு மாதத்திற்குள் 5 மடங்கு உயர்ந்து தற்போது 2,591 ஜப்பான் யென்-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Azearth
மற்றொரு ஜப்பான் நிறுவனமான Azearth இதேகாலகட்டத்தில் 139 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனமும் மாஸ்க் உட்படப் பல பாதுகாப்பு துணிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தற்போது மொத்த ஆசியாவும் முகமூடியுடன் தான் நடமாடுகிறது. இதனால் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அதிகளவிலான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இந்திய நிறுவனம்
இந்தியாவில் Bharat Immunologicals and Biologicals Corporation என்னும் ஒரு பயோடெக்னாலஜி மருத்துத் தயாரிப்பு நிறுவனம் இந்த மாதம் மட்டும் சுமார் 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனம் தயாரிக்கும் ஜிக் (ZINC) மாத்திரைகள் தான். இந்த மாத்திரை சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு, மலேரியா, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளைச் சரிசெய்யக் கூடியவை. இதனால் இந்நிறுவனம் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது.
முக்கியப் பொருட்கள்
இந்தியா மக்கள் உட்படத் தற்போது உலக நாட்டு மக்கள் மத்தியில் தற்போது மாஸ்க் மற்றும் hand sanitizing liquid மிக முக்கியத் தேவையாக மாறியுள்ளது. இதனால் மக்கள் அதை அதிகளவில் பதுக்கத் துவங்கியுள்ளனர், மேலும் சந்தையில் இதற்கான தட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிரடியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
Source: Goodreturns