இன்று காலை பட்ஜெட் 2020-க்கான இந்திய பொருளாதார சர்வே, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்திய பொருளாதார சர்வே குறித்து, இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், மதியம் பத்திரிகையாளர்களை டெல்லியில் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே, இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலை குறித்தும் பேசினார் நம் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
அடுத்த நிதி ஆண்டில், அதாவது 2020 – 21 நிதி ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 6.0 – 6.5 சதவிகிதம் வரை வளர்ச்சி காணலாம். இந்த 6.0 – 6.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி என்பது, இந்த 2019 – 20 நிதி ஆண்டில் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும் சொன்னார்.
சைவத்துக்கு 10,887 ரூபாயும், அசைவத்துக்கு 11,787 ரூபாயும் மிச்சமாகிறதாம்! இந்தியப் பொருளாதார சர்வே!
இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு, உலக பொருளாதார வளர்ச்சி பலவீனம் அடைந்து இருப்பது, இந்தியாவில் நிதித் துறையில் நிலவும் சிக்கல்களால் போதுமான முதலீடுகள் வராதது போன்றவைகள் தான் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்திக்க வைத்து இருப்பதாக, இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது பொருளாதார ரீதியாக கடுமையான கால கட்டத்தில் இருக்கிறது. இந்த 2019 – 20 நிதி ஆண்டில் 5 சதவிகிதம் மட்டுமே வளர வாய்ப்பு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி தொடங்கி பல்வேறு அனலிஸ்டுகள், தரகு நிறுவனங்கள் என பலரும் கணித்து இருக்கிறார்கள். இப்போது இந்த கணிப்புகளை நம் முதன்மைப் பொருளாதார ஆலோசகரும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி, பலரும் கணித்து இருப்பது போல, 2019 – 20 நிதி ஆண்டில், 5 சதவிகிதம் மட்டும் வளர்ச்சி கண்டால், அது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்பதும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. சீனா, கூட தன் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி சரிவில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Source: Goodreturns