புதுடெல்லி: இதுவரை 30.75 கோடி பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. 17.58 கோடி கார்டுகள் இன்னும் இணைக்கப்படவில்லை. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பல முறை இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டும், இன்னும் ஏராளமானோர் பான் – ஆதாரை இணைக்கவில்லை. கடந்த ஆண்டு டிசம்பருடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் நீட்டித்து வரும் மார்ச் 31ம் தேதி வரை இணைப்புக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் மக்களவையில் நேற்று கூறியதாவது: கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி வரை 30,75,02,824 பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
இன்னும் 17,58,03,617 பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. அவகாசம் நீட்டிக்கப்பட்டது, இதுவரை இணைக்காதவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இதுபோல், பான், ஆதார் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். இதற்கேற்ப வருமான வரிச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் உரிய பிற சட்டப்பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
Source: dinakaran