வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினர் நீலாங்கரை அருகே உள்ள விஜய் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ‘பிகில்’ படத் தயாரிப்பாளரின் ஏஜிஎஸ் நிறுவனத்திலும் பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டிலும் சோதனை நடத்தினர். மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை கணக்கிற்குள் வராத 300 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய், அரசியலுக்கு வருவதாக கூறவில்லையே தவிர அரசியல் உணர்வோடு திரைப்படங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். வருமான வரித்துறை சோதனைகள் மூலம் நடிகர் விஜய்யின் உரிமைக் குரலை ஒடுக்கி அச்சுறுத்திவிடலாம் என மத்திய பாஜக அரசு கருதினால் அது பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai