கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஒரு பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்திகள் பரவுவது குறைந்தபாடில்லை.
அந்த வகையில், சமீப காலமாக அதிகளவில் பகிரப்பட்டு வரும் சில கூற்றுகள் குறித்த உண்மைத் தன்மையை காண்போம்.
கூற்று: அகச்சிவப்பு வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்
உண்மைத்தன்மை: இந்த கூற்று தவறானது. அகச்சிவப்பு வெப்பமானிகள் அபாயகரமானவை அல்ல.
கல்வி நிலையங்கள் முதல் அலுவலகங்கள் வரை, வணிக வளாகங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை, எங்கு சென்றாலும் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை அளவிடுவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
இந்த வெப்பமானிகள் உடலின் மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிடுவதன் மூலம் ஒரு நபரின் வெப்பநிலையை பதிவு செய்கின்றன.
அதிக உடல் வெப்பநிலை என்பது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
உடலில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமானி பதிவு செய்கிறது. அனைத்து பொருட்களின் மேற்பரப்புகளும் இந்த வகை கதிர்வீச்சை வெளியிடுகின்றன. எனவே, இந்த கருவியிலிருந்து எவ்வித கதிரும் மனிதர்களை நோக்கி செலுத்தப்படுவதில்லை.
இந்த நிலையில், இந்த செயல்முறை அபாயகரமானது என்ற போலியான தகவலை கூறும் காணொளி ஒன்றை யூடியூபில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத செவிலியர் ஒருவரின் கவலைகளை அந்த காணொளியில் விளக்கும் நபர், வெப்பமானிகளால் பினியல் சுரப்பி பாதிக்கப்படுவதாக கூறுகிறார்.
மெலடோனின் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தும் இந்த சுரப்பி மூளையின் ஆழ்ந்த உட்பகுதியில் உள்ளது. ஆனால், உண்மையில் வெப்பமானிகளால் இந்த சுரப்பிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
“இது உங்களது கதிர்வீச்சை கணக்கிடுவதற்கான பாதுகாப்பான வழி” என்று கூறுகிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான ஸ்டாஃபோர்ட் லைட்மேன்.
கூற்று: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பரவலுக்கு முன்பே அதற்கான பரிசோதனை கருவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன
உண்மைத்தன்மை: 2020ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலகளாவிய இரசாயன விநியோகங்களின் தரவுத்தளத்தில் உள்ள 2015ஆம் ஆண்டு முதலான பட்டியலில் “கோவிட்-19 கருவிகளும்” இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலை பராமரிக்கும் சர்வதேச அமைப்புகளுள் ஒன்றான உலக வங்கி, கொரோனாவுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்த கருவிகளே தற்போது அந்த நோய்த்தொற்றை கண்டறிய பயன்படுத்தப்படுவதால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. இதைத்தொடர்ந்து, இந்த தரவுத்தளம் திருத்தப்பட்டு, அதற்குரிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பற்றிய சதி கோட்பாடுகளை வெளியிட்டு வருபவர்கள், திருத்தப்படாத தரவுத்தளத்தின் திரைப்பிடிப்புகளை (ஸ்கிரீன் ஷாட்) மற்றும் இணைய முகவரிகளை கொண்ட ஒரு நீண்ட பதிவை சமூக ஊடகங்களில் பரப்பி வந்தனர்.
“கொரோனா பெருந்தொற்று முன்னரே திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஒன்று என்பதற்கும் அதுகுறித்து உலக வங்கிக்கு ஏற்கனவே தெரியும் என்பதற்கும் இதொரு முக்கிய ஆதாரம். கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனை கருவிகள் 2017ஆம் ஆண்டிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டன” என்று ஆங்கிலம் மட்டுமின்றி டச்சு, இத்தாலியன், ஜெர்மன், போலந்து, ஸ்பானிஷ், அரபு, போர்த்துகீசியம் மற்றும் ஹீப்ரு உள்ளிட்ட மொழிகளில் ஃபேஸ்புக், வாட்சாப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இதுதொடர்பான பதிவுகள் பகிரப்பட்டன.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள உலக வங்கி, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டு வரும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த இரசாயன பொருட்களை ஒரே இடத்தில் பட்டியலிடும் இந்த தரவுத்தளம் கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து எழுந்த குழப்பத்தால் அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு, விளக்க குறிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது, குழப்பத்துக்கு காரணமான தரவுத்தளத்தில் இருந்த, “2017இல் நாடுகள் வாரியாக கொரோனா பரிசோதனை கருவிகளின் ஏற்றுமதி நிலவரம்” என்ற பட்டியலின் தலைப்பு இந்த மாதம் 7ஆம் தேதி, “மருத்துவ பரிசோதனை கருவிகள்” என்று மாற்றப்பட்டு உள்ளது.
இந்த மாற்றத்தின் காரணமாக மேலதிக குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க, அதே இணைய பக்கத்தில், “இங்கு உள்ள தரவானது, கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உலக சுங்க அமைப்பால் வகைப்படுத்தப்பட்ட மருத்துவ கருவிகளின் பட்டியலை கொண்டுள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூற்று: லாமாவின் இறைச்சி கொரோனாவை எதிர்த்து போரிட உதவும்
உண்மைத்தன்மை: இதை உறுதிப்படுத்தும் வகையில் அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே அதை சரிசெய்யும் என்று கூறி பல பயனற்ற மற்றும் நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அவற்றுக்கு முன்னணி அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்து வந்துள்ளனர்.
ஆனால், இந்த கூற்று புதிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கான லாமாவின் இறைச்சியை உண்பது கொரோனாவுக்கு எதிராக போராட உதவும் என்று பெரு நாட்டை சேர்ந்த ஆளுநர் ஒருவர் கூறியிருந்தார்.
அதாவது, லாமா மற்றும் அல்பகாஸ் வகை விலங்குகள் தங்களது உடலின் வாயிலாக ஆன்டிபாடிகளை கடத்துகின்றன என்று கூறும் ஆய்வுகளை முதலாக கொண்டு அவற்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று அந்த ஆளுநர் கூறியதாக அந்த நாட்டை சேர்ந்த வானொலி ஒன்று தெரிவிக்கிறது.
அதவாது, லாமாக்களின் இறைச்சி ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவும் என்ற ஆய்வு குறித்து பிபிசி இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. அது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இதுவரை, மருத்துவ பரிசோதனைகளின் மூலம், டெக்ஸாமெதாசோன் மற்றும் ஹைட்ரோகார்டிசோன் மட்டுமே உயிரைக் காப்பாற்ற நிரூபிக்கப்பட்ட மருந்துகளாக கண்டறியப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com