- நிக்கோலா பிரையன்
- பிபிசி நியூஸ்
வயது வெறும் எண்ணிக்கைதான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வாழ்ந்து காட்டி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜென்னி பாட்டி.
மனவலி நிறைந்த தமது விவாகரத்துக்குப் பின், தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாறிய அவர், அந்த புகைப்படக்கலையே பிற்காலத்தில் தன்னை உலகம் முழுக்க சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் என்றோ, உலகின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் என்றோ எண்ணவில்லை.
ஆனால் இந்த அனுபவங்கள் தன்நை தொடர்ந்து இந்தத் துறையில் பயணிக்கத் தூண்டுகின்றன என்கிறார் அவர்.
யோசித்துப் பாருங்கள். மைனஸ் 25 டிகிரி குளிரில் 19 மைல் தூரம் மங்கோலியாவில் நடந்தே சென்று பல அரிய காட்சிகளை உலக மக்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் இந்த மூதாட்டி.
ஜப்பான், போலாந்து, ஆர்க்டிக் பகுதிக்கும் இவர் பயணம் செய்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், ஆர்க்டிக் பகுதியில் துருவக்கரடி ஒன்று விரட்டிய அனுபவமும் இவருக்கு உண்டு. அந்த சமயத்தில் உயிர் பயத்துடன் ஓடி தப்பியிருக்கிறார்.
இந்த பாட்டிக்கு பிடித்த இடம் பின்லாந்து என்கிறார். ஏனெனில் அங்குதான் கீழ்கண்ட இந்தப் படத்தை அவர் எடுத்தார். ஐரோப்பாவின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளில் ஒன்றான பிரெளன் பியர் படத்தை அவர் எடுத்தது இங்குதான்.
அப்போதிலிருந்து, இயற்கை காட்சிகள், காட்டுயிர், வெளிநாட்டு பயணங்கள் என் தன் காமிராக் கனவுகளை கழுத்திலும் சுமந்தபடி படமெடுத்து வந்த இவருக்கு, கண்காட்சிகளில் வைக்கப்படும் அளவுக்கான படங்களை எடுப்பது மட்டும், சிரமமான காரியமாகவே தொடர்ந்தது.
காத்திருப்பின் பலன்
தன் சிறந்த படம் குறித்து பேசும் ஜென்னி, “ஒரு 16 மணி நேரம் நான் அங்கு ஒளிந்திருந்தேன்,” என்கிறார்.
மேலும் “இந்த மறைவிடத்துள்ளேயே நீங்கள் உறங்க வேண்டும். அது கடுமையான குளிர். தோராயமாக மைனஸ் 20 டிகிரி இருக்கலாம். அங்கு நான் உணர்ந்த ஒரே வெப்பம் என்றால் வெறும் 9 மெழுகுவர்த்திகள் மட்டுமே. நீங்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கிறீர்கள். ஒன்று அல்லது இரண்டு கரடிகள் வரலாம் என்ற வெறும் நம்பிக்கையில். அதுவும் நம்மை நோக்கித் திரும்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற கூடுதல் நம்பிக்கையுடன்” என்கிறார் ஜென்னி.
ஆனால், இவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. அந்த காத்திருப்புக்கு பலன் கிடைத்தது.
“இந்தக் கரடி அதிகாலையில் வந்தது. ஆனால், அந்த சமயத்தில் மூடுபனி மறைத்திருந்தது” என்று அந்த நாளை நினைவுகூரும் பாட்டி, “இறந்துபோன, துருவப்பகுதியின் மான் ஒன்றுடன் சேர்த்து அந்த கரடியை படமெடுக்க கிடைத்த வாய்ப்பு குறித்தும் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறார்.
2020ஆம் ஆண்டு இவர் பின்லாந்து சென்றிருந்தபோது, இதேபோல ஒரு மறைவிடத்தில் பதுங்கியிருந்தபோது, இவர் வைத்திருந்த சாக்லேட்டை மோப்பம் பிடித்த கரடி மறைவிடத்திற்கு அருகிலேயே வந்துள்ளது.
அந்த அனுபவம் குறித்து பேசும் ஜென்னி, “அந்த கரடி மோப்பம் பிடித்து வந்து விட்டது. அது மறைவிடத்துக்குள் நுழைய முயற்சிக்கிறது. பதிலுக்கு, அந்த கரடியை பயமுறுத்துவதற்காக நீங்கள் மறைவின் உள்லிருந்து அந்த கதவில் அடித்துக்கொண்டிருப்பீர்கள். அதுபோன்ற வனப்பகுதிகளில் உங்கள் கைபேசி வேலை செய்யாது. அது மிக மிக பயமான அனுபவம்” என்கிறார்.
மங்கோலிய நாடோடிகளுடன்
நாடு, காடு, நாடோடிகள், காடோடிகள் என இவரது பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மங்கோலியாவில் கஸக் என்ற நாடோடிப் பழங்குடி இனக்குழுவுடன் பயணித்தார்.
அதற்காக, தன்னால் மக்களுடன் ஒன்றி வாழ முடியும் என்றும் அந்த குளிரில் நாளொன்றுக்கு 19 மைல் தூரம் நடக்க முடியும் என்றும் அவர் நிரூபித்துத்தான் இந்த பயணத்துக்கு தேர்வாகியிருந்தார் ஜென்னி பாட்டி.
குழந்தைகள் மற்றும் விலங்குகளின் படங்கள்தான் இதுவரை தான் எடுத்ததிலேயே தான் விரும்பக்கூடியவை என்கிறார் ஜென்னி.
ஒருமுறை ஒட்டகம் ஒன்றைப் படமெடுத்தபோது அது எழுப்பிய ஓலம் இதயத்தை நொறுக்கியதாம்.
தன் குட்டியைத் தொலைத்த தாய் ஒட்டகத்தின் கதறல் அது. தன் குட்டியை பெருங்குரலெடுத்து கதறி தன் குட்டியை அடைந்துவிட வேண்டும் என்ற அந்த ஓலம் நிஜமாகவே இதயத்தை நொறுக்குவதுதான்.
நல்வாய்ப்பாக கஸக் மக்கள் அந்தக் குட்டியை கண்டுபிடித்து தன் தாயுடன் சேர்த்துவிட்டனர்.
‘மிஸ் செப்டம்பர்‘
குளிர்காலத்தில் யெல்லோஸ்டோன் தெசிய பூங்கா செல்லவேண்டும் என்றும் அலாஸ்காவில் சால்மன் மீன்களைப் பிடிக்கும் கரடிகளை தன் காமிராவில் பிடிக்க செல்ல வேண்டும் என்பது இவரது விருப்பம்.
கரடியின் படத்துக்காக அவர் காத்திருந்தபோதும், அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. காத்திருப்புக்கும் நல்ல பலன் கிடைத்தது. இப்போதும் அவர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com