குடியாத்தம்: ஆந்திர மாநிலம், சித்தூர் வனப்பகுதியில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் 30க்கும் மேற்பட்ட யானைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானைக்கூட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லி, மோர்தானா, மோடிகுப்பம் உள்ளிட்ட மலை கிராமம் அருகே உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், 10ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் கிராமத்தில் யானைக்கூட்டம் புகுந்து அங்குள்ள வாழைத்தோட்டங்களை துவம்சம் செய்தது.
இதில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் மேளம் அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர். யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும், சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், கும்கி யானைகளை கொண்டு, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinakaran