ஓசூர்: செலவு குறைவால் ஓசூரில் திறந்த வெளி ரோஜா பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்பவெப்பநிலை நிலவி வருவதால், இங்கு சுமார் 350 ஹெக்டேர் பரப்பளவில் திறந்தவெளி மற்றும் பசுமைக் குடில்கள் மூலம் விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் ரோஜா மலர்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, திறந்தவெளி மலர் சாகுபடியில் செலவு குறைவாக உள்ளதால், விவசாயிகள் அதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயி கூறுகையில், ‘5 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி ரோஜாமலர் சாகுபடியை மேற்கொண்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சாகுபடியை மேற்கொள்ள ₹20 ஆயிரம் வரை செலவாகிறது. பசுமை குடில்களில் இதைவிட பராமரிப்பு செலவு அதிகமாக உள்ளது. அதிக வேலை ஆட்களும் தேவைப்படுகின்றனர். திறந்த வெளியில் சிகப்பு, வெள்ளை, மஞ்சள், ரோஸ் உள்ளிட்ட கலர்களில் ரோஜாமலர்கள் சாகுபடியாகிறது. ஒசூர் பகுதியில் உற்பத்தியாகும் திறந்தவெளி ரோஜாமலர்கள் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காதலர் தினம் வர உள்ள நிலையில், தற்போது ரோஜா பூக்கள் சாகுபடியை அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறோம்,’ என்றார்.
Source: Dinakaran