கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை தாங்கி பூக்கும் ஆர்க்கிட் மலர்கள் அழகாக பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் காலமாகும். இந்த சீசனில் மலர்கள் பூக்காது. ஆனால் இந்த சீசன் குளிரை தாங்கியும் ஆர்க்கிட் மலர்கள் மட்டும் பூக்கும். இவை தற்போது பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்குகின்றன.
மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு கலரில் இருக்கக்கூடிய இந்த ஆர்க்கிட் மலர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து வரவழைத்து வளர்த்து வருகின்றனர். ஆண்டிற்கு ஒருமுறை பூக்கக்கூடிய இந்த மலர்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே பூக்கும் என தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். பிரையண்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஆர்க்கிட் மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
Source: Dinakaran